எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 31 டிசம்பர், 2009

தொடர்கிறது

ஒரு சுண்டல் காகிதமோ .,
வறுகடலைப்பொட்டலமோ.,
பஜ்ஜி தோய்ந்த பேப்பரோ .,
எதையும் விட்டு வைப்பதில்லை நீ... !
எழுத்துக்களில் காதல் உனக்கு...
ஏழேழு பிறப்பிலும்..
நீ அதை தொடர்கிறாயா ..
அது உன்னைத்தொடர்கிறதா ..
தெரியவில்லை.. !!
பெட்டிக்கடையிலிருந்து .,
ஹிக்கின் பாதாம்ஸ் .,
லேண்ட்மார்க் .,பபாஸி வரை
எங்கெங்கும் நீ அதன் பின்னால்... !!
கருக்கலிலும் அந்தி இருட்டிலும்...
பின்னிரவிலும் மெழுகுவர்த்தி
தலை சுட்ட போதும் ...!!
அமேசானின் ஸாப்போவிலும்...
கின்டிலிலும்., கணினியின் கணப்பிலும்.,
செல்போனிலும் கூட
இடையறாது நேசிக்கிறாய் நீ...!!
படுக்கையறையிலும்.,
பாத்ரூமிலும்.,
ஏன் அலுவலகத்தில் கூட ....!!

புதன், 30 டிசம்பர், 2009

சூரியன் மகள்

யார் விதைத்தும்
பயிராய் முளைத்து...
யார் உடைத்தும்
கனியாய்க்கனிந்து...
யார் தோண்டியும்
வெள்ளமாய்ப்பொங்கி...
யார் மரித்தும்
எனக்குள் ஏந்தி....

என்னைத்துண்டாக்கி
எல்லைக்கோடிட்டு...
தனக்குள்ளே சண்டையிட்டு...
என் மேலே ரத்தம் சிந்தி...
உன் குருக்ஷேத்ரம் தாங்காமல்
நான் பாலையாகவும்
பாளமாகவும் வெடித்து
நேசமுற்றி விளைந்தே
காயப்பட்டு...

திங்கள், 28 டிசம்பர், 2009

ஒப்பனை

அதிகம் ஜரிகை அடைத்த
பட்டுக்களுடனும் நகைகளுடனும்
வலம் வரும் நான்...
ஒரு போதும் முயன்றதில்லை
முகம் மறைக்கும் ஒப்பனைக்கு...
தலைவாரி பூச்சூடி வகிட்டிலும்
நெற்றியிலும் பொட்டிடுவதுடன்
முடிந்துவிடும் என் அலங்காரம்...

ஞாயிறு, 27 டிசம்பர், 2009

சுருண்ட இறால்கள்

விரும்பியது கிடைக்காவிட்டால்
கிடைத்ததை விரும்பும்
உயர்மத்தியதரம்...

கணினியில் நிபுணனான
என் மகன் சிறுவயதில்
"டிங்குவைப்போல் ஒரு பிள்ளை"...

சனி, 26 டிசம்பர், 2009

அகநாழிகை ..... ஒரு புத்தகப்பிரியர்

புத்தகங்களைப் படித்துவிட்டு அலமாரிகளிலோ,
ட்ரங்குப் பெட்டிகளிலோ ,எடைக்கோ போடுவது
அறிந்ததுதான்... ஆனால் படுக்கையிலும் இரண்டு
அடிக்கு புத்தகங்களுடன் வாழ்பவர் சாரு.. இதில்
எனக்கு அவர் மீது ஏற்பட்ட வியப்பைவிட அவர்
மனைவி அவந்திகாவின் மேல்தான் வியப்பு
அதிகம்.. "மனைவி அமைவதெல்லாம் இறைவன்
கொடுத்த வரம்".. "சாருவுக்கு மகனும் கூட"..

சாருவின் சில பல கதைகள் கட்டுரைகள் படித்து
இருந்தாலும் ... நன்கு பழகிய ஒருவரை நீண்ட
நாட்களுக்குப் பின் ஒரு ரயில் பயணத்தில் சந்தித்து
கையசைத்துப்பிரியும் வலியை ....அவர்
வார்த்தைகளில் படித்தபோது இன்னும் அதிகமாக
உணர முடிந்தது ...

வியாழன், 24 டிசம்பர், 2009

அகநாழிகை ....ஆரியம் திராவிடம் அற்றது அன்பு

நானும் என் குடும்பத்தினரும் தொடர்ந்து படித்து
வருவது ஆனந்த விகடனும், குமுதமும். அடிக்கடி
மாற்றலாகும் தருணங்களால் ஆசையாய்
வாங்கப்பட்ட புத்தகங்கள் அதிசோக சுமையாகும்
போது [பள்ளி கல்லூரி புத்தகங்கள் தனிசுமை
வேறு] புதிதாய் புத்தகம் வாங்கும் பழக்கம்
சிறிது குறைந்து போனது உண்மை.

எங்கிருந்தாலும் படிக்கும் விகடன் குமுதங்களில்
தன்னுடைய காரசாரமான எழுத்துக்களால்
என்னையும் என் மகனையும் கவர்ந்தவர்
திரு ஞாநி அவர்கள்.. தான் கூறும்கருத்துக்களில்
வலிமையாக நிற்கும் தன்மை, உறுதி படக்கூறுவது,
எளியோருக்கு இரங்குவது, அநேக தருணங்களில்
சரியானவற்றையே கூறுவது என என் ஆரம்ப கால
பள்ளி ஆசிரியர்களின் தொகுப்பாக இருக்கிறார்..

புதன், 23 டிசம்பர், 2009

அக நாழிகை புத்தக வெளியீடு ...ஒரு பார்வை

கிட்டத்தட்ட பதினைந்து தினங்களுக்கு முன் சக
வலைப்பதிவர் பாராவின் கருவேல நிழல்
அகநாழிகை புத்தக வெளியீடு என் வீட்டுக்கு
அருகிலேயே நடப்பது மாலை ஒரு ஐந்து
மணியளவில் தெரிந்தது...

கல்லூரிக்காலத்துக்குப் பின் எழுத்துலகுக்கு ஒரு
ஆறு மாதங்களுக்குமுன் தான் அடி எடுத்து
வைத்ததால் சகவலைப் பதிவர்களை அறிந்து
கொள்ளும் நோக்கிலும் திரு பாராவின்
கையெழுத்துடன் அவர் படைப்பை வாங்கும்
நோக்குடனும் சென்றேன் .திடீரென மாலையில்
மழை இருந்ததால் நான் கொஞ்சம் அங்கு
செல்லத்தாமதம் ஆகிவிட்டது .

மாய உலகு

பாடல்கள் முடிந்த பின்னும்
மனம் இசைக்கும் இசையாய்
உன் நினைவு...
கீறல் விழுந்த
முள்ளில் ஒலிக்கும்
கிராமபோன் ரெக்கார்டாய்...
வயலினிலிருந்து
பிர்காக்கக்களும் சங்கதிகளும்
முடிவில்லாமல்...

திங்கள், 21 டிசம்பர், 2009

மணிமேகலையின் தாய்

உன் துணையைவிட்டு என்னிடம் வந்து
நீ கண்ணகியல்ல என்கிறாய் ..
ஆம்.. நான் கண்ணகியல்ல மாதவி ..

கோயில்களில் பொட்டுக்கட்டி
தேவர் அடியவராய் நடனமாடி
இறைமைக்கே வாக்கப்பட்டேன்
மனிதருக்கு அல்ல...

சனி, 19 டிசம்பர், 2009

படிக்கட்டு

பெருநகரின் தெருக்களில்
பெருநோயாளியாகவோ
பிச்சைக்காரனாகவோ இருக்கலாம்....

பிரபலமாய் இருந்ததின்
சில சந்தோஷத்திற்கும்
பல சங்கடத்திற்கும்...

வெள்ளி, 18 டிசம்பர், 2009

என்கவுண்டர்

ரொம்ப நாளாச்சு நான் இப்படிக் குமுறிக் குமுறி
அழுது... என்கவுண்டர்ல எசகுபெசகா சுடப்பட்ட
மாதிரி போனில ரங்கமணிக்கிட்ட என் நியோ
கவுண்டரைக் காணலைன்னு சொல்லி ரெண்டு
துண்டு நனையிற அளவு அழுகாச்சி ...

எப்போ பிளாக் ஆரம்பிச்சனோ அப்போவிலேர்ந்து
இதே ரோதனையா போச்சுன்னு நினைச்சுக்கிட்டே
அவர் கேட்டார் சினிமா பார்த்து அழுற பழக்கத்தை
நீ இன்னும் விடலயான்னு ஏதோசின்னக்கவுண்டரப்
பார்த்து நான் அழுகிறேனு நினைச்சுகிட்டு....

புதன், 16 டிசம்பர், 2009

கவிதைகளின் கடவுள்

சொர்க்கத்தின் சாம்பலிலிருந்து
உயிர்த்தெழுந்து
சாதாரணனாய்...

கவிதைகளின் கடவுள்
கதைக்க விரும்பினார்
என்னுடன்...

செவ்வாய், 15 டிசம்பர், 2009

வலைத்தளத்தின் காதலி

வெகுஜனப் பத்திரிக்கையில்
தானியங்களைக் கொத்திக்கொண்டிருந்த
என் பச்சைக்கிளி எதேச்சையாக
பல தானியங்கள் பரத்தியிருந்த
வலையைப் பார்த்தது...

என்று சென்று அமர்ந்ததோ
அன்றிலிருந்து மீளமுடியாமல்
அசையாமல் அதுவும்
அன்றிலாய் நானும்....

ஞாயிறு, 13 டிசம்பர், 2009

அடைக்கலம்

ஒரு எழுத்தாளனாகவோ
பத்திரிக்கையாளனாகவோ
நடிகனாகவோ நான் ...

உன் ஒற்றைக் குழந்தையுடன்
துணையை இழந்து இறந்தோ
பிரிந்தோ நீ என்னிடம்...

என் மனக்கூட்டுக்குள்
ஆமையாய் நத்தையாய்
சிப்பியாய் முடங்கி நான்...

சனி, 12 டிசம்பர், 2009

அம்மா அப்பாவுக்கு சமர்ப்பணம்

இது என் நூறாவது இடுகை..
15.11.84 இல் கல்லூரி விடுதியில் எழுதியது..

அப்பா

மனதில் கிடங்குள் புதைத்திருக்கும்
பாசத்தை எப்படி வெளிப்படுத்துவது
எனத் தெரியாமல் எல்லா வழிகளிலும்
புலப்படுத்திய அருமை அப்பா...
பிரியத்தை வெற்றுச் சொற்களால்
அலங்கரிக்க விரும்பாமல் செயல்களில்
தன்னை வெளிப்படுத்திக்கொள்வீர்கள்...

வியாழன், 10 டிசம்பர், 2009

வீடு

சோமாஸ்கந்தர்களும்
பிரியாவிடையும்
உற்சவமூர்த்தியும்
எழுந்த கோயில்....

உயிர் உறையும் கிண்ணங்கள்...
அறுபதோ.,எழுபதோ.,
நூறுவரையோ வாழ....

செவ்வாய், 8 டிசம்பர், 2009

முதிர்கன்னிகள்

22.11.1984 கல்லூரிக் கவிதை

அந்தப்பூக்கள் வாடிக்கொண்டு
ஆதாரமில்லாமல் அந்தரத்தில் தொங்கும்
அந்தப்பூக்கள் வாடிக் கொண்டு ...

காம்புக்கால்களால் நின்றுகொண்டு
கதிர்களிடம் யாசிக்கின்றன ...

திங்கள், 7 டிசம்பர், 2009

ஆக்கிரமிப்பு

காட்டாற்று வெள்ளமாக
கடுங்கோடை இடியாக
ஆட்டுவிக்கிறேன் என்
அன்பெனும் அதிகாரத்தில்...

அடைமழையில் நனைந்த
கோழியாக ஆடிக்கொண்டிருக்கும்
உன்னை இன்னும்...

சனி, 5 டிசம்பர், 2009

அந்தி மந்தாரை

நந்தினியோ குந்தவையோ
வானதியோ வஞ்சியரை
எதிர்பார்த்து நான்...

அட்ட வீரட்டானத் தலங்களில்
அர்ச்சனைத் தாம்பாளங்களில்
அருள்மொழிவர்மன் அள்ளித் தூவ ...

வானதியும் கூட...
புன்னகை தேவதை...
பூக்களின் அரசி...

வெள்ளி, 4 டிசம்பர், 2009

முத்துச் சிப்பி

நாட்காட்டியோ மணிகாட்டியோ
திசைகாட்டியோ இல்லாத
ஊர்த்துவப் பொழுது...

தாம்புக்கயிறறுந்த குடம்
மெல்ல மெல்ல மூழ்குவதுபோல
உன் முத்த அலைகளுக்குள்...

கிணற்றைப்போல என்னை
விழுங்கிக் கொண்டிருந்தாய் நீ

வினோத மேகம் போல
என் உதடுகள்
மழை பொழியப் பொழிய
வெளுக்காமல் கறுத்து...

மீண்டும் மீண்டும்
மழை தேடும்
சாதகப்பறவையாய் நீ ...

உன் உதடுகளுக்குள்
சிப்பிக்குள் சிக்கிய
நன்னீர் சொட்டுப் போலும்
அன்னியப் பொருள் போலும்
இறுக்கி விளைந்த முத்தாய்
என் உதடு....

வியாழன், 3 டிசம்பர், 2009

இசைவு பிடிமானம்

நிலவு மரத்திலிருந்து
நட்சத்திரங்கள் விடியலில்
பழுத்த இலையாய்
உதிர்ந்து....

ஜன்னல் கம்பிகளுக்குள்
பறக்கவியலா பறவையாய் ...
வீடென்ற கூட்டுக்குள்...

குழந்தைகள் பறவைகளாக
பரந்த வானத்தில்
விரிந்த இறக்கைகளுடன்....
வெறுங்கூடாகிப் போனது வீடு....

முந்தானைக்குள்
முடிச்சிட்டு இருந்தேன்
தொட்டுப் பார்த்தால்
வெறும் முடிச்சு மட்டும்...

இராணித்தேனீயும்
வேலைக்காரத்தேனீயுமாய் நானிருக்க
ஆண்தேனீக்கள் அலைச்சலில்
அவரவர்க்கான தேடலில்....

புதன், 2 டிசம்பர், 2009

நட்பு

ஊர்விட்டு ஊர்
நாடுவிட்டு நாடு
தேசம்விட்டு தேசம் ஏன்
ஜென்மம்விட்டு ஜென்மம்
கடந்தும் கூட தொடரும்
கால வர்த்த பரிமாணம்
அற்றது நம் நட்பு ...

பிரபஞ்ச செடியின்
சருகாகவோ
தளிராகவோ பூவாகவோ
மரித்துக்கொண்டும்
பூத்துக்கொண்டும் நாம்...

புத்தகங்களோ பூக்களோ
பழக்கூடையோ இனிப்போ ஏன்
ஒரு டீத்தூள் பாக்கெட்டோ கூட
கொண்டு எனைப்பார்க்க
எங்கிருந்தாவது வருகிறாய் நீ....

பாதியான உடலும் உணர்வும் கொண்டு
முழுமையடைய விரும்புவதாய்...

செவ்வாய், 1 டிசம்பர், 2009

நீர் தேங்கிக் கிடக்கிறது

நீர் தேங்கிக்கிடக்கிறது
வாய்க்காலின் மையத்தில்...

இலைச் சருகுகளால்
வசந்தகாலப் பூக்களால்
அர்ச்சிக்கப்பட்டு...

தென்றலில் குளித்துக்
குளிர்ந்து போன
நீர் தேங்கிக் கிடக்கிறது....

வழிப்போக்கருக்கு என்ன தெரியும்..?
வேர்களுக்குத்தான் தெரியும் ....
வாய்க்கால் சுனையென்று...

சுரந்து சுரந்து சுமந்து
சலித்துப் போய்
வாய்மூடிக்கொண்ட
நீர் தேங்கிக் கிடக்கிறது....

அட... அள்ளிப்
பருகத்தான் வேண்டாம்...
கொஞ்சம் கால் நனைத்தாவது
கலக்கிச் சென்றாலென்ன....?

வியாழன், 26 நவம்பர், 2009

மலர்கள்

இது ஒரு 1984 அக்டோபர் மாத
கல்லூரி டைரிக்குறிப்பு.....

இலைகளுக்கு இறைவன்
கொடுத்த குடைகள்...

பச்சை உடை அணிந்து
உடலை மறைத்து
செடி காட்டும் முகங்கள்...

நடக்கத்தெரியாத வெகுளி
மனிதர்கள் பிரசவித்த
சிரிப்புக் குழந்தைகள்...

காற்றுடன் சினேகம்
செய்து கொள்ளச்
செடிகள் பூத்த புன்முறுவல்கள்...

பிறக்கும் போதே
அழத்தெரியாமலே
சிரிக்கக் கற்றுக்கொண்ட
பச்சை மண்கள்...

கரும்பச்சையில்
பூத்து நின்ற
ஜிகினா நட்சத்திரங்கள்...

சனி, 21 நவம்பர், 2009

பிடித்த பத்தும் பிடிக்காத பத்தும்

நெஞ்சில் நிறைந்தவர்களும் நெஞ்சை எரிப்பவர்களும்

அன்பு சகோதரர் விஜய்யின்
(விஜய் கவிதைகள் )ஆணைக்கு
கட்டுப்பட்டு ......
(மிகத் தாமதமாக எழுதுவதற்கு
மன்னிக்கவும் விஜய்)

1. அரசியல்வாதிகள்

பிடித்தவர் :- இந்திரா காந்தி , ஜெயலலிதா
(மிசா. பொடா, தடா தாண்டியும் பிடிக்கிறது)
தன்னம்பிக்கையின் உருவங்கள் ...
என் இந்தியத் தாய்கள்.. அன்னை ..!அம்மா..!!!

பிடிக்காதவர் :- சுவாமி., தாக்கரேக்கள்..

2, நடிகர்கள்

பிடித்தவர் :- விக்ரம் , சூர்யா. மாதவன் ,
அர்விந்தசாமி., பசுபதி....

பிடிக்காதவர் :- யாரையும் புண்படுத்த
மனமில்லை

வெள்ளி, 20 நவம்பர், 2009

பரங்கிப்பூ

இரட்டைக் குவிக்கண்ணாடியும்
நடைப்பயிற்சி மின்சாதனமும்
இரத்த அழுத்தமும் இன்னா நாற்பதை
இடித்துரைக்க ...

பரம்பரையோ
உன் கைப்பக்குவமோ
அதிகம் உண்டு கொழுப்புமேற்றி ...

நெற்களஞ்சியத்திலிருந்து
நியூதில்லியின் கரோல்பாக்
கணப்பு வீட்டில்....

மார்கழியின் திருவையாறும்
திருப்பாவையும் திருவெம்பாவையும்
ஒலி ஒளி நாடாக்களில் கண்டு....

பகல் பத்தும் ராப்பத்தும்
வைகுண்ட ஏகாதசியும்
ஆனித்திருமஞ்சனமும் ஏக்கமெழ வைக்க..

பத்துவிரல் கோலத்தில் பூத்த
என் பரங்கிப்பூவே...
பப்ளிமாஸே....

வியாழன், 19 நவம்பர், 2009

ஜாதிப்பூ

நவதான்யங்களிலும் எள்முடிச்சிலும்
எலுமிச்சை விளக்கிலும்
கழிந்துகொண்டே இருக்கும்...

உன் இளமை வீணாய்....
நன்னீர் முகத்துவாரம்
கடலுள் அழிவது போல்... .

உன் அன்பு வார்த்தைகள்
என்னுள் கங்கின்
கதகதப்போடு...

சூரியனைப்போல்
தீராமல் எரிந்துகொண்டே
நான்...

பாம்புப்பிடாரனின் மகுடியாய்
உன் பார்வைகளிலும்
வார்த்தைகளிலும் மயங்கி...

நேசத்தின் இழைகள்
சரங்கொத்தியாய்
இன்பமாய் வலித்து...

விடுபடமுடியாமல்
உன் அன்பெனும் ஆணிக்குள்
அழுந்தி ரத்தச்சுகத்துடன்....

புதன், 18 நவம்பர், 2009

சரக்கொன்றைப்பூ

பார்வதி ஆயா வீட்டு முகப்பு
பாத்திர வாடகை நிலையமாய்
சரக்கொன்றை சாட்சி....

பிறந்து வளர்ந்து படித்து
உனைப் பார்க்கவென்றே
அபுதாபி வந்தது போல்...

அல் அய்னில் க்ரூஸரில்
அல் மராயின் லாபான் போல்
வெண்மஞ்சளில் வந்த
லெபனிய அழகே...

கிரிஸ்டல் பேலஸின்
ஷாண்டிலியர்கள் போல
ஜொலித்த கண்களுடன்...

துபாய் மாலின்
கேண்டிலைட்டின்
அல்ப்ரோஸாய்...

புர்ஜ் அல் அராபின்
கலங்கரை விளக்கமாய் நீ
இசை நீரூற்றாய் நான்...
உன்னை எட்ட...

செவ்வாய், 17 நவம்பர், 2009

டிசம்பர் பூ

நொடிக்கு நூறு முகம்
காட்டும் என் ஆசை
இந்திராணி....

கண்கள்வழி பிடிபட்டேனே
மத்திய சிறையா அது...
வெளியேறமுடியாமல்
ஆயுள் கைதியாய்....

மயங்கினாயா
மயங்குவதுபோல்
மயக்கினாயா....

நீ தட்டெழுத்தால் எனைத்தட்ட
நான் சுருக்கெழுத்துக் கூட
சுருக்காய் எழுதி...

உனைக் காணும்
ஒரு நொடி கூட
வீணாக்க விரும்பாமல்....

ஜிஆர் ஈ வகுப்புக்கும்
கணினி பயிற்சிக்கும்
சென்றுவரும் நாம்...

திங்கள், 16 நவம்பர், 2009

கினியா பூ

வான் ஹ்யுஸைனின்
ஸூட்டணிந்த
வயலட் லேடி...

காப்பர்கலர் ஹேர்ஸ்ட்ரீக்கிங்கும்
ஏரோபிக்ஸும் யோகாவும் செய்யும்
மெல்லிய தேவதையே...

ப்ரூட் மீல்ஸும் சாலட்ஸும்
ஸாண்விச்சும் உண்டு உடம்பை
ஸ்லீக்காக வைத்திருக்கும்...

மேடம் டூஸாட்டின்
மெழுகுச் சிலையே.....
மிட்டலின் பெண்ணுருவே....
என் மேலதிகாரியே..

நிர்வகத்திறமையில் நீ
இந்திரா நூயிக்கும் மேலே...
உன் பிஏவாய் நான்
ஒவ்வொரு தருணத்திலும் வியந்து...

ஆட்சி மாறினாலும்
பங்குச்சந்தை சரிந்தாலும்
நெருக்கடிநிலையே பிரகடனம் ஆனாலும்
நெஞ்சுறுதியுடன் புன்னகைப்பாயே....

ஞாயிறு, 15 நவம்பர், 2009

தும்பைப்பூ

கடலில் மூழ்கிய
கப்பலாய் சென்னை...
மழையில் ராயவரம்
குடிசைகள் தெப்பமாய்...

ஆலை ஊருக்குள்
தும்பைப்பூ வேஷ்டி செய்யும்
தினக் கூலியாயிருந்து ...
வேலையிழந்து...

ரிக்ஷாக்காரனாய்.
மீன்பாடிவண்டி ஓட்டியாய்
திருவல்லிக்கேணியில்...

நியானோ சோடியமோ
ஒளிவீச என்னுடன்
சேர்த்துக்கொண்ட
என் கறுத்த உதட்டழகி ...
கன்னத்து மருவழகி...

காடுகளில் முளைத்துக்
கிடக்கும் தும்பைப்பூவாய்
என் மார்பில் மகன் ...
சிறுகோழிக்குஞ்சாய்...

வெள்ளி, 13 நவம்பர், 2009

வாழைப் பூ

கீரைக்காரியின் கூவலில்
மிதந்து வந்தது
வாழைப்பூ..

மாடியில் இருந்து
கூடையைக் கீழிறக்கி
பூ வாங்கிய பூவை...

சாம்பல் புறா நீ...
சாண்டில்யனின்
ராஜபேரிகை...

என் நெஞ்சம் அதிர அதிர
மறுபடி மறுபடி பார்த்தேன்..
என் இதயம் இயங்குவதை
உறுதி செய்ய...

கின்னஸில் பதியலாம்
உலகின் அதிவேக பம்ப் என
என் இதயத்தை...

கிண்ணம் வழி
என் வீட்டில்
உன் உசிலி
என் தட்டில்...

வியாழன், 12 நவம்பர், 2009

அனிச்ச மலர்

என் ஆன்மாவின் கர்ப்பமே ..
நான் சூலுறாத சொர்க்கமே.. .
என் இள உருவின் பேரழகே...
என் மகளே.. என் தாயே ..

மகரந்தச் சேர்க்கையின்
போதே அறிந்தேன் ..
நீ சூல்கொண்டதை
தேனே.. என் தெய்வமே..

உனக்குச் சோறூட்டிப்பசியாறி
நீ தூங்கி நான் விழித்து ..
திரிசங்கு சொர்க்கத்தில் நான்.. .

உனக்கு வரும் நோயெல்லாம்
பாபர் போல்
எனக்கு வேண்டி...

பென்டெனிலிருந்து பிஎஸ்பி வரை
உன்னோடு களித்திருந்து ...
விழிப்பும் கனவும் அற்ற பேருலகில்..

நீ பள்ளி செல்ல
நான் அழுத கதை
ஊரறியும்...

புதன், 11 நவம்பர், 2009

புங்கைப் பூ

அட்சரேகை தீர்க்கரேகை போல்
உன் முகத்தில்
வெட்க ரேகை... .

பேசாமடந்தையாய் நீ..
விக்கிரமாதித்தனாய் நான்..
திரைச்சீலைதான் பாக்கி ..

போர்ப்பகுதியில்
ராபர்ட் யங் பெல்டன் போல்
உன் கண்ணால் சுடப்படும்
அபாயத்தில் உன்னருகே...

நீ ஹெலனா எரிமலையா
கத்ரீனா புயலா ...
என்னை என்ன செய்யப்
போகிறாய் அன்பே...

செவ்வாய்ச் சாமி
கும்பிடும் நீ..
செவ்வாய்க்காரனான
என்னை ஒதுக்கி....

புங்கைப் பூவும்
புளிய இலையும்
கோலமாவும்
தேங்காய் நாரும்...

திங்கள், 9 நவம்பர், 2009

கருங்குவளை

ஹிஜரப் அணிந்த
ஹாஸல்நட்டே ...
வான் ஹூட்டனே..

கண்ணாடிக்குடுவைக்குள்
கருமணல் ஒட்டகம் போல் ..
அல்மஜாஸின் கார்னிஷில்
அழகாய் வந்தாய்.. .

நாவல்பழக்கண்ணே..
என் நைஜீரிய பெண்ணே..
கருநிற மோஹினியே..
ப்ரபஞ்சத்தின் கருந்துளையே..
எனைக் கண்களால் விழுங்க..

கட்டுறுதியான இரும்பை
உடுத்த க்ரானைட் போல
பளபள தேகம்..

கருந்திராட்சை ரஸத்தைக்
கண்களில் ஊற்றி
பெல்லி டான்ஸைவிட
போதை ஏற்றினாய்..

சக்கரவியூகத்து
அபிமன்யுவாய் உன்
பார்வைக்குள் நான்...

வெள்ளி, 6 நவம்பர், 2009

தொடர் இடுகை

நண்பர் ராகவன் நைஜீரியா கணக்குப் பிரிவு
மேலாளராக இருக்கிறார்.. அவர் ஒரு தொடர்
இடுகைக்கு அழைத்து இருக்கிறார் ...
நட்பு கொண்ட நல்லவருக்காக இந்த இடுகை ...

1. உங்களைப் பற்றி சிறு குறிப்பு:-
இல்லத்தரசி ..
இரு பையன்கள்..
இந்தியாவுக்குள் கணவர் பணி நிமித்தம்
10 .,12 ஊர்களில் இருந்திருக்கிறோம்..

2. தீபாவளி என்றவுடன் உங்கள் நினைவுக்கு
வரும் (மறக்க முடியாத) சம்பவம் எது ?
1977 தீபாவளி என் அப்பா திருப்பதியில்
மழை வெள்ளத்தில் மாட்டிக் கொண்டு
மீண்டு வந்தது ...
மற்றும் தமிழ் வாணன் மறைவு..
(நான் ஐந்தாவது படிக்கும் போதே கல்கண்டு
ரசிகை .. )

3. 2009 தீபாவளிக்கு எந்த ஊரில் இருந்தீர்கள் ?
ஷார்ஜாவில் என் சின்னத்தம்பி வீட்டில் ..
என் தம்பி மெய்யப்பன் தங்கக் கம்பி..
அவன் மனைவியும் அப்படியே....

மரமல்லி

மூடி மூடித் தூறும்
மழையாய் முகிழ்ந்துகொண்டே
இருந்தது காதல்....

பருகப் பருகத் தீராமல்
வழிந்துகொண்டே இருந்தது
உன் விழிவழி அமிழ்தம்....

காதலுடன்
புன்னகைக்கிறாயா
கருணை சிந்துகிறாயா...

ஒவ்வொரு ஈராவிலும்
உனைக் கண்டு பிடிக்கிறேன்
டார்வினிஸப் பரிணாமம்....

உருவாய் அருவாய்
இருந்திலாத நிலையிலும்
உனை உணர்ந்து....

அசரீரியைப் போல
அவ்வப்போது
வாய்ஸ் மெஸேஜிலும்...

ஒலித்துக்கொண்டே
இருக்கிறாய்
உன் காதலை...

வியாழன், 5 நவம்பர், 2009

சப்பாத்திக் கள்ளிப்பூ

எனக்குப் பகையில்லை
எந்த மாநிலத்தோடும்
எந்த நதியோடும்....

யாவரும் கேளீர்...
தண்ணீரின்மையிலும்
தளிர்த்துக் கிடப்பேன்...

வேலியோரம்...
காய்ந்த வாய்க்காலோரம்...
தோட்டத்து எல்லைகளில்...
இயற்கை அரணாய்...

வேலிக்காத்தான்., முள்முருங்கை,
கருவேலம்., பிரண்டை,
சோற்றுக்கற்றாழையுடன்
காக்டஸாய் நானும்....

விரல் நக அளவில்
வெங்காயக் கலரில்
வாடாமல் நான்
பூத்துக் கிடப்பேன்...

மழையோ, வெய்யிலோ,
சூறாவளியோ
சூறாடுவதில்லை
என்னை எதுவும்...

புதன், 4 நவம்பர், 2009

மயில் மாணிக்கம்

கண்கள் இரண்டும்
பளபள கன்னங்களும் இணைந்து
பட்டாம் பூச்சியானதொரு முகம்...

சிறகடிக்கும் தேன்சிட்டு
செம்பிள மேனி
செந்நிறத் தும்பி...

காமட்டின் வால் போல்
குழந்தைகள் அவள் பின்...
ராணித்தேனி....

ஓராவின் ஒளிப்பிழம்பு
வெள்ளிக் கிழங்கு
பாலிவினைல் வழுமை...

கண்கள் இரண்டும்
ஐஸ்க்ரீமில் விழுந்த
ரஸ்மலாய் போலும்
குலோப் ஜாமூன் போலும்...

பப்பேயில்
பார்வைகளின் சாணையில்
அவள் இன்னும் மெருகேறி...

செவ்வாய், 3 நவம்பர், 2009

கல் வாழைப்பூ

வாசலோடும் ஜன்னலோடும்
மட்டுமே நான் ..
வாகைசூடி அணிய அல்ல....

செங்கொற்றக்கோல் போல்
செம்மையாய் உயரமாய்
இருந்தாலும்...

அகநானூறில் நீ யாரோடோ கூட
உன் புறநானூறுக்கான
பெருமை நான் ...

பரணியோடும்
புலவர்களோடும்
வீரத்தழும்புகளோடும் நீ...

மஹாராணிகளோடு
மஞ்சத்தில் நீயிருக்க உன்
சேடிப்பெண்ணாய் நான்....

இதயப் பாதக்குறடு உனக்காய்...
ஆனால் என் வாசம்
உன் வாசலில்....

ஞாயிறு, 1 நவம்பர், 2009

நாகலிங்கப்பூ

பங்களா தோட்டத்தில்
பூத்து இருந்தது
மரத்தில் அங்கங்கே
நாகங்கள் போல்...

சிறுவயது வியப்பு ..
செறிந்த மகரந்தங்களின்
காவலாய் ஒரு குடை
மழைத்தடுப்பாய்...

மலைப்பாம்பு சுற்றியதான
மணிப்பிளாண்ட் போல்...
மழையில் பூத்த
மரக்காளான்களும் குடையுடன்...

சிவன் சூடுவதா
மன்மதனின் அடையாளமா
பார்த்தால் பரமபதப் பாம்பு...

மேலே ஏற ஏற
உன்னைக் கீழிறக்கிக்
கொண்டு இருக்கிறது
அதன் கடிவாய்..

சனி, 31 அக்டோபர், 2009

விதி வலியது

ஆமாம்..
கவிதைகள் மட்டுமே எழுதி வந்த என்னை
சகோதரர் மணிகண்டன் தன்னுடைய தமிழ்
வலையுகத்தில் தொடர் இடுகை ஒன்று
எழுத அழைத்து இருந்தார்...
அவரின் அன்பு அழைப்புக்கு இணங்க
இதோ உங்கள் முன்பு எனது படைப்பு...

1. A- Available/single - single ....ABYAN என் மனம்
கவர்ந்த குட்டிப்பையன் ...
ஊசி போட்டு சின்னதாக மட்டும் சிணுங்கி
தன் தந்தைக்கு வலிக்க வைத்தவன்

2. B - Best friend - எல்லோரும்

3. C- Cake or pie - ரெண்டும்

4. D - Drink of choice - ஆரஞ்சு ஜூஸ்

வெள்ளி, 30 அக்டோபர், 2009

டேபிள் ரோஸ்

என்னுடைய அன்பை
கவசமாகவும் சேணமாகவும்
தாலியாகவும் மோதிரமாகவும் மாட்டி
அழகாய் இருக்கிறாய்
என்கிறேன்....

நீ வலிகளைப்
பற்களுக்குள் ஒளிப்பதை
புன்னகைப்பதாக எண்ணி
மகிழ்கிறேன்....

வேப்பம் பூ

சூடிக்கொள்பவன் இல்லாமல்
மழையில் கரைந்து
நிலவு....

காண்போரே இல்லாமல்
பூப்பள்ளத்தாக்கு....
தனிமைக்குப் பயந்து
கூட்டமாய்ப் பூத்து....

புதன், 28 அக்டோபர், 2009

போகன் வில்லாப் பூக்கள்

மாண்டிஸோரியின் குடில்களில்
வளைந்து பரவி இருந்தது
போகன்வில்லா....

தினம் ஒரு பூப்பறித்து
உதட்டில் வைத்துத் தேய்ப்போம்
ரைம்ஸில் வரும் ரோஸி லிப்ஸ்
ஆகுமாவென்று....

வியாழன், 22 அக்டோபர், 2009

நீலோத்பவம்

பர் துபாயின் பேரழகே
நீல வைரமே ...
தேரா க்ரீக்கின் ஆப்ராவில்
உனைக்காண...

யமுனையின் ராதையாயும்
மீராவாகவும் ஆண்டாளாகவும்
சதுர்யுகமாய் உனைத்தேடி...

செவ்வாய், 20 அக்டோபர், 2009

குறிஞ்சிப் பூ

ஊட்டியிலும் கொடையிலும்
ஏற்காட்டிலும் இடுக்கியின்
ஸ்டெர்லிங்கிலும்....

பனிதூவிய பாலேரூமில்
பில்லியர்ட்ஸ் டேபிளில்
நீ மும்முரமாய்....

ஞாயிறு, 18 அக்டோபர், 2009

தெட்சிப்பூ [இட்லிப் பூ]

அட்லாண்டிஸின் பனைமரத்தில்
காட்டர்பில்லர் போல்
ஊர்ந்த மோனோவில்....

அசைவற்ற கடல் சார்ந்த
வீடுகளின் ஊடாக
நாம் பயணித்தோம்....

வாட்டர் தீம் பார்க்குகளில்
சிவந்த தெட்சிப் பூக்களாய்
வெளிநாட்டு மங்கையர்....

சனி, 17 அக்டோபர், 2009

மத்தாப்பூ

'""என் வலைத்தளத்துக்கு வருகை தந்து என்னை
ஊக்குவித்தும் தவறுகளைத் திருத்தியும்
ஆலோசனைகள் கூறியும் ஆற்றுப் படுத்தும்
அன்பு உள்ளத்தினர் அனைவருக்கும் என் மனம்
கனிந்த தீபஒளித்திருநாள் வாழ்த்துக்கள் ...... '""

தீப ஒளித்திருநாளில்
உள்ளமெல்லாம் பெருந்தீபம்
மகர ஜோதியும்
அண்ணாமலைஜோதியுமாய் ...

செவ்வாய், 13 அக்டோபர், 2009

பவள மல்லி

ரேஸ்கோர்ஸின்
கவர்மெண்ட் காலேஜ்
வாசலில்...

நண்பர்களுடன்
கடலைகளைக்
கிண்டல் செய்து
கொண்டிருந்தேன்....

திங்கள், 12 அக்டோபர், 2009

லில்லிப்பூ

ப்ளூ க்ரீன் அல்கே
போல் தண்ணீருக்குள்...
உடல் மறைத்த
லில்லிப் பூவாய்...

வெண்மையாய்க் குவிந்து
மென்விரிந்த முகத்துடன்...
கருப்புச் சிப்பியில்
வெண்முத்தாய்...

சனி, 10 அக்டோபர், 2009

பூசணிப் பூ

தீப்பெட்டித் தொழிற்சாலையின்
வேன்களின் அதிகாலைப்
பொறுக்குதல்களிலும்...

அந்தி மாலை
வீசியெறிதல்களிலும்
குழந்தமையைத்
தொலைத்த நீ ...

வியாழன், 8 அக்டோபர், 2009

எள்ளுப் பூ

காற்றின் திசையில்
தெறித்து விழுந்த
கறுப்பு விதையில்...

வெடித்துக் கிளைத்து
வளர்ந்த பசுமை இலைகள் ..
புல் பூண்டு கூட
களையத்தயங்கும்
என் முன் ...

புதன், 7 அக்டோபர், 2009

துலிப் பூக்கள்

ரஷிதியாவிலிருந்து
எமிரேட் மால்வரைக்கும்
மெட்ரோவில் வந்தேன்...
உன்னைப் பார்க்க...

ஷூமுதல் தலை வரை
சிக்கென உடை அணிந்த
பூவாய் நீ...

திங்கள், 5 அக்டோபர், 2009

கோழிக்கொண்டைப் பூ

மீனாக்ஷி திருக்கல்யாணம்
முடிந்து அழகர் தேனாற்றில்
இறங்கிக் கொண்டிருந்தார்...

சிவப்பு வெல்வெட்
செண்டுகளைச் சுற்றிக்
கட்டியதான கோழிக்கொண்டை
மாலை அணிந்து....

வெள்ளி, 2 அக்டோபர், 2009

ஆர்க்கிட்

என் முதல்
விமான பயணத்தில்
ஜிலீரென்று குளிர்வித்த
ஆர்க்கிட் நீ...

அநேக இதழ்களால்
நீ சிந்திய
அழகுப்புன்னகையில்
வசமிழந்தேன்...

புதன், 30 செப்டம்பர், 2009

பூவரசம்பூ

பயாலஜி லாப்பில்
தவளைக்கும் எலிக்கும்
இனப்பெருக்க உறுப்பும்

இதயம் இணைந்த
சுவாச உறுப்பும்
இருக்கிறதா என

ஆணியும் குண்டூசியும்
மாட்டி தேடிக்
கொண்டிருந்தோம்...

செவ்வாய், 29 செப்டம்பர், 2009

செடிச் சம்பங்கி [பன்னீர்ப்பூ]

நலுங்கிலும் ஊஞ்லிலும்
இப்போதுதான் அமர்ந்து
அப்பளம் உடைத்து
தேங்காய் உருட்டியது
போலிருக்கிறது...

அன்று அணிந்திருந்த
அதே போன்ற
சம்பங்கி மாலை
அணிந்து நீ...

கொடிச் சம்பங்கி

பூக்களுக்கு அனுமதி
இல்லாத இடங்களிலும்
நீ நுழைந்து விடுவாய்
பூப்போல...

பஸ்ஸின் நெரிச்சலில்
எரிச்சலில்
அலுவலகத்துக்கு நானும்
பள்ளிக்கு நீயும்...

திங்கள், 28 செப்டம்பர், 2009

மேரி கோல்டு [தங்க அரளி]

நாட்டியப் பள்ளி வாசலில்
பூத்துஇருந்தது
மேரி கோல்டு...

உன் சாரதியாய்
வந்த நான்
வெளியில் காரில்...

செண்பகப்பூ

காண்டாமணி ஒலிக்க
கலியுகத் தெய்வம்
ஐயனாரும் சாத்தையனும் ...

கருவிழி முறுக்கு
மீசையுடன் கருப்பரும்
எடுப்பான புரவிகளுடன்
அமர்ந்த கோயில்...

ஞாயிறு, 27 செப்டம்பர், 2009

நந்தியாவட்டை

விடியலின் ஈரத்தில்
புஷ்கரணியில் குளித்து
நந்தவனத்தில் உலா...

தளிர்க் கைகளால்
நந்தியாவட்டைகளைக்
கொய்து கொண்டிருந்தாய்...
என் மனசைக் கொய்வதாய்...

செவ்வந்தி

பிறந்ததில் இருந்து
காதலித்துக் கொண்டே
இருக்கிறேன் உன்னை...

ஐந்து வயதில் தான்
என் அருகு வந்து
அமர்ந்தாய் நீ...

இன்று வரை
என்னை விட்டுப்
பிரியவில்லை...

சனி, 26 செப்டம்பர், 2009

முருங்கைப்பூ

அவென்யுவின் அழகுக்காய்
பூச்செடிகள் வளர்க்க
வாஸ்துவில் இருந்து
தப்பி வளர்ந்தது
முருங்கை ஒன்றும்..

விழுந்த குப்பையெல்லாம்
கூட்ட வந்த நீ
முருங்கை போல
முறுக்கு ஏறி..

நீலச்சங்குப்பூ

கறுப்பு வெதை போட்டு
சிறு வயசுப்பசங்க நாம
தினம் தண்ணீ
ஊத்திவந்தோம்...

பச்சையாய்
எலை வந்து
ஆகாயம் போல்
பூப்பூத்துச்சு...

வெள்ளி, 25 செப்டம்பர், 2009

கனகாம்பரம்

ஊர்த்திருவிழா...
கிலுகிலுப்பை, ஊதல்
சின்னவனுக்கு...
பலூனும், பஞ்சு மிட்டாயும்
பெரியவளுக்கு...

தேரில் வந்த சாமி பார்த்து
தேங்காயுடைச்சு
முடிச்சாச்சு...

மாதுளம்பூ

அராபிக் மெஹந்தியும்
கோல்ட் :.பேஷியலும்
வீடியோ வெளிச்சத்தில்
பூச்செண்டுகள் சூழ ரிஸப்ஷன்....

பெற்றோர் நடத்திய
பொருந்திய திருமணம்...

காக்கரட்டை மல்லி [காட்டு மல்லி]

மூக்கிலே புல்லாக்கு...
முகம் நெறைய மேக்கப்பு...
கார்பாவும் தாண்டியாவும்
பாங்ராவும் ஆடிய நீ ....
கோலாட்டம் கும்மியிலே
என் மனசை சேர்த்தடிச்சே...

பள்ளிக்கூட ஆண்டு விழா...
கரகமா, காவடியா...
கதகளியா, மோகினி ஆட்டமா...
ஒடிஸியா, குச்சுப்புடியா,,,
எதையாடப்போறே நீ...?

முல்லை

வரவேற்பறையில்
முகமகன்கள்கூறி
அவரவர் ப்ரபஞ்சத்தில்
ஆழ்ந்திருந்தோம்...

கணினித்திரையில்
அவசரச் செய்திகள்..
மயில் மேல் முருகனாய்
உலாவியில் சுற்றி
உடனுக்குடன் முடித்து
உலகு மீண்டோம்...

வியாழன், 24 செப்டம்பர், 2009

ஆவாரம் பூ

பொங்கலுக்குப் பொங்கல்
விடுமுறையில் ஊர் வாரேன்..
புது நெல்லு வாசத்தில் நீ
வெல்லமிட்ட பொங்கல் தின்ன...

காணும் பொங்கலன்னிக்கு
கன்னுப்புள்ளையும் நெக்கதிரும்
ஆவாரம் பூவும் சொமந்த காலம்
என் நெனைப்பில் ஓடுதடி...

மகிழம்பூ

அக்ரஹாரத்தின்
நீண்ட தெருக்களில்
வாழையும் தென்னையும்
மாடும் கன்றும் செறிந்த
உன் வீட்டின் எல்லைச்
சுவரோரம் மகிழமரம்...

பூத்திருப்பது தெரியாவிட்டாலும்
முற்றத்தில் அமர்ந்து
உதிர்ந்த மகிழம்பூக்களை நீ
கோர்த்துக்கொண்டிருப்பது தெரியும்...

வாடாமல்லி

உருவத்தில் ஆணாகவும்
உள்ளத்தில் பெண்ணாகவும்
பருவ வேறுபாடு இல்லாத
பச்சிளம் குழந்தை நீ...

எல்லோருடனும் சேர்ந்து
வாழும் ஆசையில்
கதம்பத்தில் இணைந்தாய்...

தனித்துத் தெரிவது
உன் நிறம் மட்டுமல்ல
குரலும்தான்...

புதன், 23 செப்டம்பர், 2009

செம்பருத்தீ

செம்பருத்தித் தைலத்தில்
தோய்ந்த என் கூந்தல்
மிகப்பிரியம் உனக்கு...

கார்மேகத்தையும்
கடலலைகளையும்
கைகளால் அளையும்
ஆசையில் நீ பின்தொடர...

நீ துரத்துவதுபோல்
நான் வேகமாய்
முன்னேறி...

மல்லிகை

கல்லூரி வகுப்பறை
நண்பர்கள் பேப்பர்
அம்புகளை எய்து
கொண்டிருந்தபோது...
நீ பார்வை
அம்புகளை எய்தாய்...

உன் பார்வை விடு
தூதில் ஒவ்வொன்றும்
மல்லிகையாய் மெத்தென்று
என் மனதில்...

செவ்வரளி

அநேகப் பூக்களை
மனிதர் சூட
தெய்வத்துக்கு மட்டுமே
உரிய பூ நீ...

சிவப்பு சிந்தனையிலும்
சித்தாந்தங்களிலும்
செந்நிறமாகவே
பிரசவிக்கப்பட்டவள் நீ...

விதைகளில் எல்லாம்
சயனைடு குப்பி
மாட்டியே பிறந்தாய்...

டேலியா

காவலர்களின் பாதுகாவலில்,
டில்லி முகல் கார்டனில்,
பனி பர்தாவில்,
பீட்ரூட் நிறத்தில்,
விரிந்த மயிலாய்....

பூக்களிலே புஷ்டியான
பூ நீதான்...
பிரிய மனமில்லாமல்
பிரிந்து வந்தேன்...

செவ்வாய், 22 செப்டம்பர், 2009

தாமரைப்பூ

அல்லியும் ஆம்பலும்
குமுதமும் கொட்டிக்கிடக்கும்
குளத்தில் இறங்கி
என்னை மட்டும்
பறித்துச் சென்றாய்...

தனிமைப் படுத்தப்பட்டதாய்ப்
பதறினேன் நான்...

தாழம் பூ

பூஜைக்கு
மறுக்கப்பட்டாலென்ன
பூப்படைந்தபெண்களின்
கூந்தலில்
மடல்மடலாய் நான்...

சூரிய காந்தி

நீ உதித்து
உலா செல்லும்
திசையெல்லாம்
உனைக் காண
முகம் திருப்பி
ஒயிலாகப்புன்னைகைத்து...

நான் மட்டும்
இரவெல்லாம்
தனித்திருந்து
விழித்திருந்து...

சாமந்தி

ஆடி மாசம்
அம்மன் கோயில்
கொடை...

மஞ்சள் பூசி
மஞ்சள் சூடி
மஞ்சள் அணிந்து
மகிமையாய் நீ...

குல்மோஹர்

குல்மோஹரின்
ரத்தச் சிகப்புப்
பூக்களைப் போல
ஒளிர்ந்தது
உன் கண்களில்
என் மீதான காதல்....

ஞாயிறு, 20 செப்டம்பர், 2009

ரோஜா

நேற்றுப் பெய்த மழையில்
மாடியின் தளத்திலும்
கைப்பிடிசுவற்றிலும்
ஈரப்பூக்கள் பூத்துக்
கொண்டேயிருந்தன...

வெள்ளி, 18 செப்டம்பர், 2009

மனைவி

எந்நேரம் வந்தாலும்
எனக்காக கதவடியில்
காத்திருந்திருப்பாய்..

அதீதப்பேச்சால்
அயர வைத்தது போல்
அன்பாலும்...

பணிக்கான ஓட்டத்தில்
ஊர் விட்டு ஊர் ஓட
என்னுடனே துணை வருவாய்...

விட்டில்

யார் தடுத்தும் கேளாது
மாயக்கனவுக்குள்
வீழ்ந்து கொண்டு...

வலைகளை விரித்து
எலிகளை இயக்கி...
இன்னும் எனக்கான
பொறிகளைப் பெருக்கி...

ட்விலைட்டின் வேம்பயர் நீ...
உன்னால் உறிஞ்சப்பட
கழுத்தெல்லாம் ரத்தம் சேமித்து...

வியாழன், 17 செப்டம்பர், 2009

காதல்

மகிழ்ச்சி குமிழ்குமிழாய்
காற்றில் பரவி
வீடு முழுதும்
பொங்கி வழிந்து...

கடலுள் களிக்கும்
டால்பின் மீனாய்
நீச்சல்லில்லாத
மிதக்கும் வட்டாய்...

இதயத்தில் இருந்து
வெடித்துக்கிளம்பி
பார்வைகள் வழியே
ரோஜாக்கள் விரிந்து...

புதன், 16 செப்டம்பர், 2009

நட்பு

எல்லா அளவு கோல்களாலும்
அளந்த பின்னும் தொடங்கியது
நமது நட்பு...

தனித்தனியே ஜனித்தாலும்
எண்ணங்களால் இணைந்தோம்
நீண்ட மௌனத்துக்குப்பின்...

பிறகு நாம் நிறுத்தாமல் பேசியதை
இரவு நேரக்கூகையும் அர்த்தசாமச் சேவலும்
விடிகாலைக்காக்கையும் பிறைநிலவும்
பௌர்ணமியும் சொல்லும்...

திங்கள், 14 செப்டம்பர், 2009

முகமூடி

பஞ்சுமிட்டாய்க்காரனும்
ஜவ்வுமிட்டாய்க்காரனுமாய்
ஈர்க்கும் கதைசொல்லி...

தெரு கடந்து சென்றபின்னும்
கைக்கெடிகாரம் ஒட்டிய
கையெல்லாம் சர்க்கரைப்பாகு...

தோல்பாவைக்கூத்துக்களில்
கயிறு கட்டி அவன் ஆட்டுவிக்க
காண அமரும் நானும் முகமூடியுடன்...

ஞாயிறு, 13 செப்டம்பர், 2009

வரம்

ஒளிவட்டம் சுழல
இறகை உதிர்த்து
தேவதை பிறந்தாள்
பூங்கொத்துச் சிரிப்புடன்...

ரோஜாப் பாதம்
பஞ்சு இளம் மேனி
நஞ்சில் உதித்த
பாற்குட தேவதை....

பளிங்குக் கண்கள் மிளிர
ஒளிரும் கறுப்பு நிலவுகள்
மினுமினுப்பாய்...
மாதுளம் பூக்கள் கன்னத்தில்...

மழை

குளிரும் மழையும் பொருத மாலை,
முணுமுணு தூறலில் சுவரின் ஓரம்,
சொட்டுச்சொட்டாய் தண்ணீர்க்க்ரீடம்....!

மலைமுகடில் முகமறைத்த
இளஞ்சிறு சூரியன் எதிர்ப்பட..
என் மகனின் வண்ணக்கிறுக்கலாய்
எதிர்சுவர் வானில் வானவில்...!

திரைத்துணியின் மஞ்சள் ஆரஞ்ச் கொடிகளாய்
மலைமுகடெங்கும் தங்கம் தழுவிய
தடம் கதகதப்பாய்...

சனி, 12 செப்டம்பர், 2009

காந்தப்புலன்

சூரியனும் வெளிச்சமுமாய்
உலகைப் புணர்ந்து
உயிர்கள் பெருக்கி...

வால்நட்சத்திரங்கள்விழுங்கும்
வியாழன் கோளாய்
என்னைப் பதுக்கி...

நிலவாய் வந்து
அலையான என்
உன்மத்தம் பெருக்கி...

வெள்ளி, 11 செப்டம்பர், 2009

குடி மகன்கள்

தினமும் கேட்கும் பதட்டமான சப்தங்கள் இன்றும்..
எங்கள் அவென்யுவின் எதிர்வரிசை காரை வீட்டை
ஒட்டிய ஒலைக்குடிசையிலிருந்து....

வாழ்வோடும்., வியாதியுற்ற குழந்தையோடும்.,
போராடும் அவள் வாழ்க்கைப்பட்டவனோடும்
போராடிக்கொண்டு...

ஆணாதிக்கக்கொம்புகள் முளைத்த மூர்க்கமிருகமாய்
அருந்திய சாராயம் தந்த அசுர பலத்தில் அவன்...
கொண்டையிட்ட பெண்புலியாய் அவள்...

புதன், 9 செப்டம்பர், 2009

முருங்கை மரம்

காலையின் பசுமை வணக்கம்...
காக்கைகளின் ஊஞ்சல்...
வண்டுகளின் சாமகானம்...

கிளைக்கரங்களால் தழுவுவது
போல் ஆரவார வரவேற்பு..,
பூக்களெனும் புன்னகையும்,
காய்கள் எனும் கனிவும் காட்டி..

செவ்வாய், 8 செப்டம்பர், 2009

வாஸ்து

வாஸ்துப்படிக்
கட்டிய வீட்டில் மனைவி..,
வெளி நாட்டில் கணவன்...!!!

எமக்குத் தொழில் எழுத்து

அதிகமாய் எழுதிய
அலெக்ஸாண்டர் டூமாஸும்...
ஆத்ம சிந்தனையில்
மார்க்க அரேலியரும்
எனை ஈர்க்க...

ஷேக்ஸ்பியரும், தாகூரும்...
பார்த்திபன் கனவும்,
பொன்னியின் செல்வனும்
எனை மயக்க...

ஞாயிறு, 6 செப்டம்பர், 2009

சரஸ்வதி வணக்கம்

பேரன்பிற்கினியவளே....
பெருமதிப்பிற்குரியவளே...
கனிவான சரஸ்வதியே...

ஆசிரியப்பெருந்தகையே...
என் இனிய சுசீலாம்மா....!!!
கம்பீரக் குரலழகி... !!!
உலகமெல்லாம் உன்
வீணை ஒலி...!!!

தலை நகரில் உறைந்துள்ள
எங்கள் தலைவியே...
ஏடும் எழுத்தாணியும் கொண்டு
இன்னும் நீயே எழுதுகின்றாய்...

விருந்து

பவள மல்லியும்,
மகிழம் பூக்களும்
இரவுச்சரத்தை வாசமேற்ற...

தலை கலைந்த பனையும்
நிலவு வருடும் தென்னையும்
சிற்பமாக...

குழந்தைகள் சிரிப்பை
அள்ளி விசிறியதாய்
நட்சத்திரங்களும்...

வியாழன், 20 ஆகஸ்ட், 2009

காட்டாறு

நீர் தேங்கிக் கிடக்கிறது
வாய்க்காலின் மையத்தில்.,,,
கையில் அள்ளிப்
பருகத்தான் வேண்டாம்...
அட கால் நனைத்தாலாவது
கலக்கிச்சென்றாலென்ன...?

விவசாயம் காணாமல்..
மாட்டின் கூர்வாய் அறியாமல்..
மரங்கள் துப்பிய
எச்சில் இலைகளுடன்...

புதன், 19 ஆகஸ்ட், 2009

அகம் புறம்

காய்ந்த துணிகளின் மேல்
காக்கை எச்சமாய்
பார்வைகள்...

மடித்து வைத்த
பின்னும் தட்டுப்படும்
கறைகளாய்...

சர்க்கரைப் பாகே
ஆனாலும் அதிகமானால்
பாகலை விடக் கசப்பாய்...

புதன், 12 ஆகஸ்ட், 2009

ஆனந்த அலைகள்

காலையில் கைகளில்
தவழ்ந்த எதிர்த்த வீட்டுக்
குழந்தையின் வாசம்
குளித்தபின்னும் என் மேல்...

பஞ்சுப் பொதியாயும்,
ரோஜாக் கூட்டமாயும்,
தண்ணென்ற குளுமையுடன்
சுகந்தமான சுமையாய்...

திங்கள், 10 ஆகஸ்ட், 2009

கணவன்

அர்த்தமில்லாமல் தொணதொணக்கும்
மனைவியின் முன்
புன்னகை மன்னன்!!!!
பூவிழிக் கண்ணன்!!!!!

வியாழன், 6 ஆகஸ்ட், 2009

பேரின்பப் பெட்டகமே

வாழ்நாள் முழுவதும்
வாழ்ந்து காதலிக்க
பெற்றோர் தேர்ந்தெடுத்த
பேரின்பப்பெட்டகமே!!!
பொறுமையின் திலகமே !!!

வேலையற்றவனின்
வீண்பொழுதாய் நானிருக்க
காலச் சக்கரத்தைக்
காலில் மாட்டி
பேச நேரமில்லாப்
பெருமகனே நீ வந்தாய் .

புதன், 5 ஆகஸ்ட், 2009

ஆயாவின் வீடு

ஐயாவின் பட்டாலை,
கணக்கப்பிள்ளைகளின் முகப்பு,
ஆயாவின் சமையற்கட்டு,
பாட்டியின் இரண்டாம் கட்டு...
எந்தப் பொறியாளரும் வியக்கும்
செட்டி நாட்டுக்கட்டுமானம்.....!

சின்னஞ்சிறு வயதில்,
விடுமுறை நாள்களெல்லாம்
ஆயா வீட்டுப் பசுமை...!

ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2009

பிருந்தாவனம் தெரு

அந்தத் தெருவிலேதான் இருந்தது,
எங்கள் வீட்டை வாங்கியவரின் வீடும்......

வாங்குவதற்கு எந்த முகாந்திரமும்
இல்லாததுபோல, விற்பதற்கும்
எந்த முகாந்திரமும் இல்லாமல் இருந்தது,
பராமரிக்க முடியவில்லை என்பது தவிர. .....

நூறாண்டுகளுக்கும் மேலாய்
முன்னோர்களெல்லாம்
ஒரே வீட்டில் வாழ்ந்திருக்க,
நூறு நாட்கள் கூட
இருக்க இயலாமல்
பணிக்கான மாறுதலில்
பிரிந்து வந்தோம்......

சனி, 1 ஆகஸ்ட், 2009

நாம் தமிழர்

ராஜராஜன் காலத்துக்கும்
முற்பட்ட குரோதம் இது

தஞ்சையில் நாம் சிங்கள நாச்சியார்
திருக்கோயில் எழுப்பியுள்ளோம்
ஆனால் நம் சீதையைக் கூட
சிறை வைத்தவர்கள் அவர்கள்

வெலிக்கடைச் சிறையிலும்
முள்ளிவாய்க்காலிலும் மாளவும்
முள் வேலியில் பாழ் வெளியில்
வாழவுமா நாம் பிறந்தோம்?

வெள்ளி, 31 ஜூலை, 2009

அபியும் நானும்

பிறந்தபோதும், அமர்ந்தபோதும்,
அனுப்பிய புகைப்படத்தில்,
அபிக்கான அறிமுகம் எனக்கு....

ரேஸ்கோர்ஸ் வீட்டில்தான்
அவள் என்னுடன் நெருக்கமானாள்,
ஒரு பூந்தோட்ட வண்ணத்துப்பூச்சி போல....

உரையாடல்களால் வாழ்ந்தோம்.
தொடர்பு கொள்ள மட்டுமல்ல,
உணர்வதற்காகவும் அது நிகழ்ந்தது,

விடுதலை

பேரன்பே பெருநெருப்பாம்
மானிடர்க்கு

அன்பு கூட வலைதான்
பறக்க இயலாதபோது

சொடுக்கும் வார்த்தைகளால்
இளம் பறவைகள்
தாய்ப்பறவையைச் சீறும்

வியாழன், 30 ஜூலை, 2009

சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி

ஈழப்போரையும்
ஈராக் யுத்தத்தையும்.
நாமென்ன விமர்சிப்பது

நம்மிடமே உண்டு
குத்தீட்டீக் கண்களும்
கொடு வாளாய் நாக்கும்

அஹிம்ஸா தேவதை அவதாரம்
உடல் மொழியாலே உதறித் தள்ளுவோம்
ஒருவரை அறியாமலே.

புதன், 29 ஜூலை, 2009

அம்மாவின் அன்பு

நான்கும் ஒன்று என்று சொன்னாலும்
சில சமயம் தெரிந்துவிடுகிறது
அம்மாவின் தனிப்பட்ட அன்பு.

ஒரு தட்டில் மட்டும் வீழும்
அதிகப்படியான முருகலும் வறுவலும்.

எந்த ஒரு தனித் திறமையும் வெல்வதில்லை
அவளின் மனச் சூலின் தேனை அருந்த
அவளாக மனம் வைத்தால் உண்டு.

திங்கள், 27 ஜூலை, 2009

ஃபீனிக்ஸ்

கூட்டுப் புழுவைப்போல் கூண்டுக்குள் இருந்தேன்,
கூட்டை உடைத்த போது தெரிந்தது நான்
வண்ணத்துப் பூச்சிதானென்று. ...!!!!

அன்னத்தைப் போல் இல்லையே என வருந்தினேன்,
என் குரல் வெளிப்பட்ட போது தெரிந்தது நான்
குயில் தானென்று.....!!!

தன்னை அறிதல்

அவரவர்க்கான தேடலில் அவரவர்.
பால் சுயம்போ கல்கியோ ரோஸோ
இருப்பை வெளிப்படுத்தவேணும்
உரக்கச்சொல்ல வேண்டும்

இவர்கள் திருநங்கைகள்
உணர்வால் மங்கைகள்
உலகின் இறை சக்திகள்

தேடல்

ஓசையிலாத இசையும்
வர்ணங்களில்லாத நிறமும்
மேகங்களை ஒத்த உருவமும்
நீரைப் போல உணர்வும் கொண்டு அலைகிறேன்

குழந்தை வளர்ப்புத் தொழிலாளிகள்

சிறகை இழந்த பறவைகள்
ஒரு போதும் பறக்கவே முயல்வதில்லை,
சிறகு வளர்ந்த பின்னும்.

இருப்பதற்கும் இரைப்பைக்கும்
இறகை சிறிது அசைப்பது தவிர
உயரப் பறக்க இசைவதில்லை
உள்ளமெல்லாம் பறந்தாலும்.

வியாழன், 16 ஜூலை, 2009

நன்றிகள்

என்னை நாடியும் சில பறவைகள்....
புதிய உயிராக்கிய வேரே... உனக்கு நன்றி !
விளை நிலமே ! என் இடு உரமே !
என் தாய் மண்ணே !
எனக்குப் பறக்கக் கற்றுத் தந்தவளே !!
உன் காலடியில் சர்வமும் சரணம் !!
நன்றி ! நன்றி !! நன்றி !!!!

புதன், 15 ஜூலை, 2009

அம்மாவுக்கு...

அம்மா உந்தன் நெற்றிப் பொட்டாய் ஆக மாட்டேனா
அழகொளியாய் நெற்றி வானில் மினுங்க மாட்டேனா
Related Posts Plugin for WordPress, Blogger...