8
கல்யாணப் படைப்பு படைக்க வேண்டிக்கொண்டு அக்கினியாத்தா வீட்டில்
படைச்சிக்கினு இருந்தாக ஆவுடையப்பன் குடும்பத்தார். ”இது கோழிப்படைப்புன்ன. ராத்திரி
வெகு நேரமாகும். இந்த ரொட்டியத் தின்னுட்டு நீ போய் ஒறங்கப்பச்சி. சாமி கும்பிடும்போது
எழுப்பிவிடுறேன்” என்று சாஞ்சாடிக் கொண்டிருந்த பேரனைச் சீராட்டிக் கொண்டிருந்தாக பங்காளி
வீட்டு வள்ளியாச்சி.
சிவகாமிக்கும் சொக்கலிங்கத்துக்கும் கல்யாணமாகி மறுவீடு, மூணாம்
வீடு வந்து போய் ஒருவாரம் கழிச்சு வீட்டுப் படைப்பு. எடயில பால்பழம் வைச்சுக் கும்பிடவும்
பால்பழம் சாப்பிடவும் ஆத்தாவீடு வந்து போனாக. ”பாட்டையா பாட்டியாயா ஆத்தா எல்லாரையும்
நெனைச்சுக் கும்பிட்டுக்காத்தா.” கல்கண்டுபோட்டுப் பாலைக்காய்ச்சி வெள்ளைப் பணியாரம்
சுட்டு வைத்திருந்தார் கருப்பையாண்ணன். கருப்பஞ்செட்டி
வகைப்பழங்களும் பூமாலைகளும் பூச்சரமும் வாங்கி வைத்து இருந்தாக. புதுமணத் தம்பதிகள்
பேழையின் முன் விழுந்து வணங்கி ஆவுடையப்பன், கருப்பஞ்செட்டி கையால் விபூதி பூசிக்கினாக.