பிச்சாடனரின் ஆனந்த தாண்டவம்
முன்னொரு காலத்தில் ஆறு சாத்திரங்களையும் நன்கு கற்று, நான்கு வேதங்களையும் முறைப்படி ஓதி அதன்படி வாழ்ந்து வந்தார்கள் சில முனிவர்கள். அக்னி காரியம் செய்வதும், வேதங்கள் ஓதுவதும் மட்டுமே தமக்குப் போதுமென்று எண்ணி, எல்லாவற்றிற்கும் காரணமான ஈஸ்வரனை மறந்தார்கள். என்னதான் தவவலிமை பெற்றிருந்தாலும், அகந்தையுற்று ஈஸ்வரத் தியானம் செய்யாததால் முனிவர்கள் பட்ட துயரையும், அவர்களை நெறிப்படுத்த ஈஸ்வரன் ஆடிய தாண்டவத்தையும் பற்றிப் பார்ப்போம்.
தாருகாவனம் என்ற வனத்தில் முனிவர்கள் தங்கள் பத்தினிகளுடன் வசித்து வந்தார்கள். சாஸ்திர முறைப்படி அவர்கள் அக்னி ஹோமங்களை வளர்த்து வணங்கி வந்தார்கள். ஆனால் எல்லாவற்றிற்கும் காரணமான ஈஸ்வரனின் நினைவே இல்லாமல் இருந்தார்கள். அவர்களை நல்வழிப்படுத்தும் எண்ணம் கொண்டு ஈஸ்வரன் மகாவிஷ்ணுவோடு அங்கே எழுந்தருளினார். அதுவும் எப்படி?
