மக்கள் திலகம் எம்ஜிஆர்
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்.. உள்ளம் என்றொரு ஊர் இருக்கும். அந்த ஊருக்குள் எனக்கொரு பேரிருக்கும்.. கடமை அது கடமை.. எத்தனை எத்தனையோ நூறு பாடல்கள் இருந்தும் இப்பாடல்தான் மக்கள் திலகம் எம்ஜியாரை மக்கள் தலைவனாக வடிவமைத்த பாடல். நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் என்பதோடு முதன்மையாகத் தாயைத் தெய்வமாகப் போற்றியவர், மக்களிடம் பரிவு கொண்டவர், மனிதாபிமானம் மிக்கவர், விருந்தோம்பல் மற்றும் கொடைக்குணம் கொண்டவர் எம்ஜியார்.
கொடுத்துச் சிவந்த கரம், கலியுகக் கடவுள், பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர், இதய தெய்வம், வாத்தியார், இதயக்கனி என்றெல்லாம் புகழப்படும் திரு எம் ஜி ராமச்சந்திரன் தமிழகத் திரைப்பட உலகையும் தமிழக அரசியலையும் ஒருசேரக் கலக்கியவர். இவருக்கு எத்தனையோ பட்டங்கள் இருந்தாலும் திரு.தமிழ்வாணன் அவர்கள் வழங்கிய மக்கள் திலகம் என்ற பட்டமே மிகப் பொருத்தமானதாக தோன்றுகிறது. நடிகர்களில் ஆலயம் கட்டப்பட்டது என்றால் அது முதலில் எம்ஜிஆருக்கு என்றே சொல்ல வேண்டும். இன்றும் இருக்கும் அந்த ஆலயம் திருநின்றவூர் நத்தம்மேடு கிராமத்தில் உள்ளது. கலைவாணன் சாந்தி தம்பதியினர் எம்ஜிஆருக்காகக் கோவிலை அமைத்துக் கும்பாபிஷேகம் செய்து உள்ளார்கள்.


