எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 25 ஜனவரி, 2018

தவப்பயனால் தனித்துவம் பெற்ற துருவன். தினமலர் சிறுவர்மலர் - 2

தவப்பயனால் தனித்துவம் பெற்ற துருவன்.

பளிச் பளிச் என்று கண்ணைச் சிமிட்டிக் கொண்டிருந்தது வடக்கு வானில் ஒரு நட்சத்திரம். நிலவு, மற்ற நட்சத்திரங்கள் ஒளிர்கின்றனவோ இல்லையோ தினமும் மாலையிலிருந்து காலைவரை இந்த வடக்கு நட்சத்திரம் மட்டும் ஒளிவீச மறப்பதில்லை.

காந்தப் புலத்தின் மைய ஈர்ப்பாய் ஜொலிக்கும் அந்த நட்சத்திரம் யார் ? நட்சத்திர மண்டலத்துக்கும் சப்தரிஷி மண்டலத்துக்கும் தேவாதி தேவர்களுக்கும் அதி தலைவனாக ஆகும் பாக்கியம், யுகம் யுகமாய் கல்பகாலம் வரை ஜொலிக்கும் பாக்கியம் எப்படிக் கிடைத்தது ? 

அவன்தான் என்றும் நிலையான துருவன். அவன் யார் ? அவனுக்கு நிலையான இடம் கிடைத்தது எப்படி எனப் பார்க்க நாம் வைகுண்டத்துக்கும் அதற்குமுன் சுவாயம்புவமநுவின் மகன் உத்தானபாதனது அரண்மனைக்கும் போகவேண்டும்.

சோர்ந்த மனதைச் சுறுசுறுப்பாக்கும் சுசீலாம்மாவின் கடிதங்கள்.

எவ்வளவு அழகான எழுத்தோ அவ்வளவு கம்பீரமான பேச்சும் மிடுக்கும் கொண்டவர் சுசீலாம்மா. என்றும் நாங்கள் மயங்கும் எங்கள் துருவ நட்சத்திரம். ஆண்டாளின் பல்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்தி அனுமானங்களுக்கு இலக்கியத்தாலேயே நுட்பமான பதிலடி கொடுத்திருக்கிறார். அது தினமணி.காமில் வெளியாகி உள்ளது.இலக்கியச் சுவை மாந்த விரும்புவோர் ஆண்டாளின் பாசுரங்களில் அமிழ விரும்புவோர் இந்த இணைப்பை பார்க்க.

 தீதும் நன்றும்.

என்றென்றும் அவர்களின் மகளாகப் பெருமையுறும் கணம் இந்தக் கடிதங்களையும் பகிர்வதில் பெருமகிழ்வு கொள்கிறேன்.



திருவாலங்காட்டு சபாபதி தேசிகரின் திருமண வாழ்த்து.

திருவாலங்காட்டில் உள்ள சிவன் கோவிலில் பாட்டையா காலத்தில் பசுமடம் அமைத்து கோவில் பூஜைக்குத் தேவையான பால் வழங்கப்பட்டு வந்தது. அதன் பின் ஐயா காலத்திலிருந்து அப்பா அதற்காக வருடம் ஒரு தொகையைக் கோயில் தேசிகரிடம்  கொடுத்துவருகிறார்கள். நித்யக் கட்டளையாக பாலாபிஷேகம் நடந்து வருகிறது.  சபாபதி தேசிகர்  எங்கள் திருமணத்தின் போது எழுதி அனுப்பிய வாழ்த்து மடல்.

காரைக்காலம்மையும் காளியும் சபாரெத்தினத்தோடு உறையும் அத்திருவாலங்காட்டுக்கு வருடம் ஒரு முறை முன்பு சென்று வந்தோம்   இப்போது செல்ல இயலவில்லை. அதை நினைவுறுத்தவே இக்கடிதம் கிட்டியதோ என எண்ணுகிறேன். இந்த வருடம் எப்படியும் சென்று  ரத்ன சபையைத் தரிசித்து வரவேண்டும்.

( எங்கள் குடும்பத்தில் பலருக்கு சபாரெத்தினம் என்ற பெயர் இடப்படுவதற்கு   இத்திருத்தல ஈசனின் பெயரே காரணம் ) 

அப்போது எல்லாம் எப்படி நேரம் கிடைத்து இவ்வளவு அழகான மரபு/வாழ்த்துப் பாடல்கள் எழுதி அனுப்பி இருக்கிறார்கள்.இதய நோயாலும் கண் மங்கலானதாலும்  வர இயலாததால் கடிதத்தில் அவர் அனுப்பிய வாழ்த்தில் இன்றும் அவ்வளவு அன்பும்  உயிர்ப்பும் இருக்கிறது.

அருப்புக்கோட்டையிலிருந்து க சி அகமுடை நம்பியின் கடிதங்கள்.

புதிய பார்வை என்றொரு இதழை நடத்தி வந்தார் எங்கள் கல்லூரியில் படித்த ரத்னம் என்ற அக்காவின் உறவினர். அவர் பத்ரிக்கையிலும் நான் அவ்வப்போது எழுதி வந்தேன். !. வேண்டாம் தட்சணைகள், தூது, சாயம் போன வானவில்கள், ஒரு ஊனம் தேவை ஆகிய கட்டுரை, கவிதை, சிறுகதைகள் அதில் வெளியாகின.

அதன் ஆசிரியர் பெயர் அகமுடை நம்பி என்ற அறிவுடை நம்பி, அறிவன் என்ற பெயரிலும் எழுதி வந்தார். அருப்புக்கோட்டையில் விவசாயப் பொறியாளராகப் பணிபுரிந்துவந்த அவர் புதியபார்வையில் சிறப்பாசிரியராகவும் பணியாற்றி வந்தார்.  பல்வேறு இக்கட்டுக்களுக்கும் இடையில் கைக்காசைப் போட்டு அவ்விதழை நடத்தி வந்தார்.  அருமைமிக்க  அவரின் கடிதங்களைப் பகிர்வதில் பெருமகிழ்வு கொள்கிறேன்.

இன்னும் கொஞ்சம் ஃபோட்டோ கலாட்டா. MY CHILDREN ALBUM - 2

மழலைகள் என்றால் எந்த வயதினருக்கும் விருப்பமே. அதிலும் பதின்பருவத்தில் பார்க்கும் மழலைகளை எல்லாம் எடுத்துக் கொஞ்சுவோம் விளையாட விரும்புவோம். அப்போ நம்ம நெஞ்சைக் கொள்ளை கொண்ட குட்டீஸ் கலெக்‌ஷன் இது. துரு துரு திரு திருவென விழிக்கும் அழகுப் பாப்பாக்கள் அணிவகுக்கிறார்கள்.

சேட்டைக்காரக்குட்டிக :)

செவ்வாய், 23 ஜனவரி, 2018

மதுமிதாவின் மலாய் பாடலும் வள்ளல் அழகப்பர் பற்றிய வில்லுப்பாட்டும்.

அழகப்பா பல்கலைக் கழகத்தில் நவம்பர் மாதம் 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெற்ற ஆசியான் இந்திய கவிஞர்கள் சந்திப்பில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் 28 ஆம் தேதி  மாலையில் நடைபெற்றன.

இதில் ஹைலைட்டாக ( பல்வேறு நிகழ்ச்சிகள் இருந்தாலும்) தமிழகக் கவிஞர் மதுமிதா & மலேஷியக் கவிஞர் சாஸ்த்ரி பார்க்கியின் பாடல் பரிமாற்றத்தைச் சொல்லலாம்.

மதுமிதாவின் கவிதைஒன்று மலாயில் இசைக்கப்பட, மலாய்க் கவிதை ஒன்றை மதுமிதாவும் சாஸ்த்ரி பார்க்கியும் பாடியது அற்புதம். (மலேஷியக் கவிஞர் சாஸ்த்ரியின் பாடலை சாஸ்த்ரியும் மதுமிதாவும் பாடினர். மதுமிதா எழுதிய தமிழ்ப்பாடலை சாஸ்த்ரியும் மதுமிதாவும் இணைந்து பாடினர். )

பாரதியின் கூற்றுக்கேற்ப மிகச் சிறந்த கலாச்சாரப் பரிமாற்றமாக அது திகழ்ந்தது.
மாலையில் முதல் நிகழ்ச்சியாகப் பெண்களின் கோலாட்டம், கும்மி ஆட்டம், கரகம், ஆகிய நாட்டுப்புற நடனங்களின் அணிவகுப்பு. காரைக்குடியைச் சேர்ந்த பல்வேறு கல்வி நிறுவனங்களின் மாணவ மாணாக்கியர் மிக ஆர்வமாகப் பங்கேற்றுக் களிப்பித்தனர்.

திங்கள், 22 ஜனவரி, 2018

திரும்பவும் குழந்தைப் பருவத்துக்கு. MY CHILDREN ALBUM.

போட்டோ வாக்கியப் போட்டி போல குழந்தைப் படங்களை வெட்டி ஒட்டி ஃபோட்டோ கமெண்ட்ஸ் எழுதி வைச்சிருக்கேன் ஒரு காலத்துல. அத இங்கே பகிர்ந்திருக்கேன். ஃபோட்டோவோட கமெண்ட்ஸையும் பாருங்க :)

பேப்பர் கட்டிங்கோ, வாழ்த்து அட்டையோ,நானே வரைஞ்சதோ ( அந்த இம்சை பின்னாடி இடுகைகள்ல வரும்ம்ம்ம்ம்ம் ) என்பதைச் சொல்லிக்கொண்டு இன்னிக்கு ஒரு இடுகை தேத்தியாச்சு என்ற சந்தோஷத்துடன்... :)

சனி, 20 ஜனவரி, 2018

தினமணி - எழுத்தாளர் சிவசங்கரி சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு.

தினமணி -  எழுத்தாளர் சிவசங்கரி சிறுகதைப் போட்டியில் எனது வாடாமலர் மங்கை என்ற சிறுகதைக்கு ஆறுதல் பரிசு கிடைத்துள்ளது.
நன்றி தினமணி.  எழுத்தாளர் சிவசங்கரி & மாலன், தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் ஆகியோருக்கும் மனமார்ந்த  நன்றி.

வியாழன், 18 ஜனவரி, 2018

அன்புப் பரிசு அரசாளும் - தினமலர் சிறுவர்மலர் - 1

அன்புப் பரிசு அரசாளும்

மிக உயர்ந்த ஜாதி மரத்துண்டு அது. மித்ரபந்து தன் மனைவியுடன் நான்கைந்து நாட்களாக அதைப் பார்த்துப் பார்த்துச் செதுக்கிக் கொண்டிருக்கிறார்.

அது என்ன சிலையா இல்லையில்லை.. சிற்பம் போல உருவான ஒரு ஜோடி பாதரட்சை. காலில் அணியும் மரச்செருப்பு. அதைச் செய்தபின் அதன் அழகில் மயங்கி நின்றார் மித்ரபந்து. மிக மிக அழகான வடிவான இது யார் காலை அலங்கரிக்கப் போகிறது ?

யோத்தி அன்று மணக்கோலம் பூண்டிருந்தது. நகரமெங்கும் விருந்தின் வாசனை, நறுமணத் திரவியங்கள் பூசிய ஆடவர்களும், அணிகலன்கள் அணிந்து கலகலவெனச் சிரித்தோடிய இளம்பெண்களுமாக நகரம் களைகட்டியிருந்தது. முதியோர்களும் சிறார்களும் கூட சந்தோஷமாக உரையாடி விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

வியாழன், 11 ஜனவரி, 2018

ஆண்டாள் உலா.

ப்ளஸ்டூ பருவம். மார்கழிக் காலை, பாமா அக்காவின் வீடு. ஊதுபத்தி, துளசி மணம், மெல்லிய பனி பெய்யும் காலை, வாசலை அடைத்துக் கோலம் பூசணிப்பூ, கை நிறைய கலர் கலராக டிசம்பர் பூக்கள்.

கொஞ்சம் சாமந்திகளும் நிவேதிக்க முந்திரி நிரடும் நெய் ஏல வாசனையில் சர்க்கரைப் பொங்கலோ, வாசத்திலேயே நெய்யும் மிளகும் உறைக்கும் வெண்பொங்கலோ கதகதப்போடிருக்க,  இரண்டடி அகல குழலூதும் கிருஷ்ணன் படத்தை வைத்துச் சுற்றியபடி

“ நீளா துங்கஸ் தனகரி “

“ பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண் தோள் மணிவண்ணா
உன் செவ்வடி செவ்வித் திருக்காப்பு.” ( மனதில் அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் என்ற வரியைச் சொல்லியபடி )

”அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு
வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
வடிவார் ஜோதி வளர்த்துறையும் சுடராழியும் பல்லாண்டு
படைபோர் புக்குமுழங்கு மட்பாஞ்ச சன்யமும் பல்லாண்டே”.

என ஆரம்பிக்கும் எங்கள் பாடல்கள்.,

திங்கள், 8 ஜனவரி, 2018

வாடாமலர்கள். MY FLOWER ALBUM - 2.

அடடா திரும்ப பழைய ஆல்பம் கையில கிடைச்சிருச்சு போலயே. ஒரே பூவா எடுத்துப் போட ஆரம்பிச்சிட்டியா என திட்டமுடியாதபடி நான் வரைந்த சில ஓவியப் பூக்களையும் போட்டிருக்கிறேன் :)
டேலியா & கினியா.

காரைக்குடிச் சொல்வழக்கு. லெக்ஷ்மி குழம்பும் பொருமா மிளகுபொடியும்.

911. முறுக்கிக்கிறது. - ஒரு விஷயத்தைச் செய்ய மாட்டேனெனப் பிடிவாதம் பிடித்தல். அல்லது அதில் விருப்பம் காட்டாதிருத்தல். தனக்கு அந்த விஷயம் அற்பமானது சமமானதில்லை எனக் கருதுவது.

912. எகனைக்கு மொகனை - ஏட்டிக்குப் போட்டியாக நடந்துகொள்ளுதல். (பாட்டில்  எதுகை மோனை என்பது போல் )

913. லெக்ஷ்மி குழம்பு - சும்மா குழம்பு என்று ஒரு குழம்பு வைப்பார்கள். சின்னவெங்காயம் ஐந்தாறை நறுக்கிப் போட்டு கடுகு வெந்தயம் தாளித்து உப்புப் புளி கரைத்து சாம்பார் பொடி அல்லது மிளகாய்ப் பொடி போட்டு உடனடியாக வைப்பார்கள். இது சோற்றுக்கும் இட்லி தோசைக்கும் தொட்டுக் கொள்ள ஆகும். காய் இல்லாமல் வைப்பதால் சும்மா குழம்பு. ஆனால் அதை சும்மா என்று சொல்லக்கூடாது என்று லெக்ஷ்மி குழம்பு என்பார்கள்.

914. மொட்டட்டின்னு போட்டுட்டாக. - அக்கறை இல்லாமல் ஒரு விஷயத்தைக் கைவிடுவது. ஒன்றும் இல்லை என்று கருதுவது.

915. வெள்ளமா வைச்சாக - சீர் செனத்தி அதிகம் வைப்பதைக் குறிப்பது.  தாய்வீட்டில் பெண்ணுக்கு அதிகமாக சீர் செனத்தி வைப்பதைக் குறிப்பது. வசதி படைத்தோர் ஊசியிலிருந்து கப்பல்வரை சீர் பரப்புவார்கள்.

வியாழன், 4 ஜனவரி, 2018

நலந்தாவின் கருத்துப் பேழையில் தென்றல் சாயின் தனித்தமிழ் கட்டுரை.

தென்றல் சாய் காரைக்குடியில் தனது பெற்றோர் நடத்தி வந்த கார்த்திகேயன் பள்ளியைத் தனது சகோதரியுடன் நடத்தி கல்விச் சேவை ஆற்றி வருகிறார். மிகச் சிறந்த் ஆளுமை மிக்க பெண் அவர். அவரது எழுத்துக்களும் செறிவானவை. நந்தவனம் என்ற பத்ரிக்கையில் தொடர்ந்து கட்டுரைகள் படைத்து வருகிறார் . காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் பல்வேறு தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகள் பங்களிப்புச் செய்துள்ளார்.

தென்றலின் பார்வையில் தேனம்மைலெக்ஷ்மணனின் படைப்புலகம்.

காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற இந்திய ஆசிய கவிஞர்கள் சந்திப்பில் கலைஞன் பதிப்பகம் வெளியிட்ட  36 நூல்களில் எனது நூலும் ஒன்று.
காரைக்குடியில் கார்த்திகேயன் பள்ளியை நடத்திவரும் தென்றல் சாய் அவர்களும் அங்கே கட்டுரை வாசித்தார்கள். தங்கம் மூர்த்தி கவிதைகளையும் சிலாகித்தார்கள். எங்களுக்கு அங்கே அறிமுகமானவுடனேயே எங்கள் நூல்களை வாங்கி உடன் படித்துக் குறிப்பெடுத்துக் கொண்டார்கள்.
சுறுசுறுப்பின் மறுபெயர் தென்றல் சாய். உடனடியாகப் பாராட்டி அதை முகநூலிலும் எழுதிவிட்டார்கள். டிசம்பர் 14 அன்று அவர்கள் எழுதியதை இன்றுதான் பார்த்தேன். அவ்வளவு சுறுசுறுப்பு நாம :)
உன் கருத்துக்களுக்கு  அன்பும் நன்றியும் தங்கையே. 

செவ்வாய், 2 ஜனவரி, 2018

வைரவன்பட்டியில் ஒரு வண்ணமயமான சதாபிஷேகம்.

காரைக்குடி அருகே குன்றக்குடி பிள்ளையார்பட்டி தாண்டி இருக்கும் நகர வைரவன்பட்டியில் ஸ்ரீ வைரவர் கோயில் உள்ளது. இங்கே பெரும்பகுதி மக்கள் திருமணம், சஷ்டியப்த பூர்த்தி, பீமரத சாந்தி, சதாபிஷேகம் ஆகியன கொண்டாடுகிறார்கள்.

இக்கோயில் பற்றி முன்பே எழுதி இருக்கிறேன். சங்கு ஊதிக் கருப்பர், ஏறு அழிஞ்சில் மரம், தன ஆகர்ஷண பைரவர், வளரொளிநாதர், வடிவுடையம்மை, துலாபாரம், கோபுரங்களில் அறுமுகன், நான்முகன், ஏன் வீணை மீட்டும் பத்துத்தலை ராவணன் கூட இடம் பெற்றிருக்கிறார்கள். கோபுரம் கட்டாயம் காணவேண்டிய பேரழகு உடையது. அதே போல் மழை நீர் சேகரிப்பும் கண்மாய் நீர்ப் போக்குவத்தும் கொண்ட வைரவ தீர்த்தம் காணற்கரியது
வளரொளி நாதர் , வடிவுடையம்மை. 
அக்கோயிலில் இன்று எனது முகநூல் நண்பரும், மனிதநேயமிக்க மனிதருமான திரு தேனப்பன் செல்லம் ( செல்லம் மனைவி பெயர் அதையும் தன் பெயருடன் இணைத்துக் கொண்டுள்ள இனிமையான மனிதர் இவர் ), அவர்களின் சதாபிஷேக விழா நடந்தது.
Related Posts Plugin for WordPress, Blogger...