எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
ஆசிய இந்திய கவிஞர்கள் சந்திப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆசிய இந்திய கவிஞர்கள் சந்திப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 7 ஏப்ரல், 2018

மலாயில் மொழிபெயர்க்கப்பட்ட எங்கள் கவிதைகள்.

1ஆதிரா முல்லை

சிப்பி
தன் மீது விழத் தயாராக இருந்தது
அந்த மழைத்துளி
அப்போதே
ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும்
முகமேந்தி
அந்தக் குளிர்ச்சியை
வடவாடைக் காற்றாலோ
வனசாரியின் ஈர்ப்பாலோ
விலகிச் சென்றதந்த
இதமான முதல் துளி

வசப்படாத
வாழ்க்கையைக் கடப்பது
எப்படி என்று
வழக்கிடும் இதயத்தோடு
வாழ்தல்
வழக்காகிப் போக
ஏக்கங்கள் தாங்கிச் செல்லும்
அந்த மழைத்துளியைச்
சந்திக்கும் போதெல்லாம்
வாய்க்காத முத்தத்துக்காய்
ஏங்கியபடி
வான் நோக்கிக் கிடந்தந்த
சின்னச் சிப்பி!

வெள்ளி, 16 மார்ச், 2018

இந்திய ஆஷியான் கவிஞர்கள் பன்னாட்டுக் கருத்தரங்கம் ஆரம்பமும் நிறைவும்.

காரைக்குடியில் நடைபெற்ற இந்திய ஆஷியான் பன்னாட்டுக் கருத்தரங்கில் கவிஞராகப் பங்கேற்று என் கவிதைகளை வாசிக்கும் வாய்ப்பு அமைந்தது. என்னுடைய ஒரு கவிதை மலாயில் மொழிபெயர்க்கப்பட்டு வாசிக்கப்பட்டது.


முதல் நாளில் துணைவேந்தர், குன்றக்குடி அடிகளார் ஆகியோர் கலந்துகொண்டு வள்ளல் அழகப்பர் அருங்காட்சியகத்தின் தமிழ்ப் பிரிவைத் திறப்புவிழா செய்துவிட்டு கருத்தரங்கிற்கு வந்தார்கள்.

செவ்வாய், 23 ஜனவரி, 2018

மதுமிதாவின் மலாய் பாடலும் வள்ளல் அழகப்பர் பற்றிய வில்லுப்பாட்டும்.

அழகப்பா பல்கலைக் கழகத்தில் நவம்பர் மாதம் 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெற்ற ஆசியான் இந்திய கவிஞர்கள் சந்திப்பில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் 28 ஆம் தேதி  மாலையில் நடைபெற்றன.

இதில் ஹைலைட்டாக ( பல்வேறு நிகழ்ச்சிகள் இருந்தாலும்) தமிழகக் கவிஞர் மதுமிதா & மலேஷியக் கவிஞர் சாஸ்த்ரி பார்க்கியின் பாடல் பரிமாற்றத்தைச் சொல்லலாம்.

மதுமிதாவின் கவிதைஒன்று மலாயில் இசைக்கப்பட, மலாய்க் கவிதை ஒன்றை மதுமிதாவும் சாஸ்த்ரி பார்க்கியும் பாடியது அற்புதம். (மலேஷியக் கவிஞர் சாஸ்த்ரியின் பாடலை சாஸ்த்ரியும் மதுமிதாவும் பாடினர். மதுமிதா எழுதிய தமிழ்ப்பாடலை சாஸ்த்ரியும் மதுமிதாவும் இணைந்து பாடினர். )

பாரதியின் கூற்றுக்கேற்ப மிகச் சிறந்த கலாச்சாரப் பரிமாற்றமாக அது திகழ்ந்தது.
மாலையில் முதல் நிகழ்ச்சியாகப் பெண்களின் கோலாட்டம், கும்மி ஆட்டம், கரகம், ஆகிய நாட்டுப்புற நடனங்களின் அணிவகுப்பு. காரைக்குடியைச் சேர்ந்த பல்வேறு கல்வி நிறுவனங்களின் மாணவ மாணாக்கியர் மிக ஆர்வமாகப் பங்கேற்றுக் களிப்பித்தனர்.

வெள்ளி, 22 டிசம்பர், 2017

மதுரைப் பெண்ணும் மலேஷியக் கவிஞர்களும்.

காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் பழனியப்பா அரங்கத்திலும் செமினார் ஹாலிலும் நடைபெற்ற இந்திய மலேஷிய கவிஞர்கள் சந்திப்பில் கலந்துகொண்டபோது எடுத்த சில புகைப்படங்களும் நிகழ்வின் பதிவும்

முத்து நிலவன் சார், தென்றல் சாய் ஆகியோர் பேசியதும் , முதல் நாள் கலை நிகழ்ச்சிகளும் மறுநாள் நிகழ்ச்சி நிறைவு விழாவும் பின்னர் பகிர்கிறேன்.
பழனியப்பா அரங்கில் முதல் நாள் நிகழ்வுக்கு பத்து மணிக்கு இருக்கவேண்டுமே என ஒன்பதே முக்காலுக்கே ஓடினால் ஒருவரைக்கூடக் காணவில்லை. நிடா எழிலரசி தனது கணவருடன் வந்திருந்தார்.

பின்னர்தான் தெரிந்தது மலேஷியக் கவிஞர்கள் மற்றும் நம் கவிதாயினிகள் அனைவரும் விழா சிறப்பு விருந்தினரோடு வள்ளல் அழகப்பர் மியூசியத்தின் புதிய பகுதியின் திறப்புவிழாவுக்குச் சென்றிருந்த விபரம்.
மேளதாளம் முழங்க பூரண கும்ப மரியாதையுடன் சிறப்பு விருந்தினரும் அவர்களும் வரும் முன்பு நாம் விரைந்து சென்று வசதியான சீட்டைப் பிடித்துக் கொண்டோம். ( இங்கேதானே வந்தாகணும் என்று :)

வெள்ளி, 1 டிசம்பர், 2017

ஆசிய இந்திய கவிஞர்கள் சந்திப்பு. ASEAN - INDIA POETS MEET.

இந்திய ஆசிய கவிஞர்கள் சந்திப்பில் 31 தமிழ்க் கவிஞர்கள் கலந்து கொண்டோம்.

இது பற்றி முபீன் சாதிகா கூறியிருப்பதை அப்படியே பகிர்கிறேன்.

////காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் இந்திய-ஆசியான் எழுத்தாளர்கள் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடக்கவிருக்கிறது. இதில் கலைஞன் பதிப்பகத்தின் உரிமையாளர் திரு.நந்தன் மாசிலாமணி அவர்களின் முயற்சியால் 38 கவிஞர்களுக்கு 38 நூல்கள் வெளியிடப்படவிருக்கின்றன. இந்த நூல்களைத் தொகுக்கவும் கவிஞர்களை நேர்காணல் செய்யவும் எனக்கு வாய்ப்பளித்த திரு.நந்தன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். ஒத்துழைப்பு நல்கிய 38 கவிஞர்களுக்கும் என் நன்றிகள். இதற்காக 3500 பக்க கவிதைகளைப் படித்து, 1000 பக்க நேர்காணல்களை வாசித்து 300 பக்கங்கள் எழுதி 38 நூல்களுக்கும் மெய்ப்பு பார்த்து தொடர் வேலையாகச் செய்யவேண்டியிருந்தது. நூல்கள் வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. பெண் படைப்பாளர்களுக்கு எனத் தனியாக ஒரு கூட்டம் நடத்தவேண்டும் என்று கருதி அவர்களில் ஓரளவு அதிகம் அறியப்படாதவர்களும் இருக்கவேண்டும் என்று பார்த்து தேர்ந்தெடுக்க வைத்து அங்கீகாரம் தர எடுத்த முயற்சி பாராட்டுக்குரியது. எல்லோருடைய நூல் வந்தாலும் சிலரால் நிகழ்ச்சிக்கு வர இயலவில்லை. வரப் போகவும் தங்கவும் கலைஞன் பதிப்பகமே ஏற்பாடு செய்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியை மலேஷிய பல்கலைக்கழகமும் அழகப்பா பல்கலைக் கழகமும் இணைந்து நடத்துகின்றன. காரைக்குடியில் 27, 28 தேதிகளில் காலை 10.30லிருந்து மாலை 5.30 வரை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. வாய்ப்புள்ளவர்கள் கலந்துகொள்ளலாம். இடம்:காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம்.////

///காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் திங்கள், செவ்வாய் கிழமைகளில் நடைபெற்ற பன்னாட்டுக் கருத்தரங்கத்தில் 38 கவிஞர்களின் நூல்கள் வெளியிடப்பட்டன. அதில் 31 கவிஞர்கள்தான் பங்கேற்றார்கள். பல சூழ்நிலைகள் காரணமாக மிச்சமிருந்த கவிஞர்கள் பங்கேற்கவில்லை. விழாவுக்கு முந்தைய நாளும் விழா நாளும் தங்குவது உணவு உட்பட பல அடிப்படை அம்சங்களில் பெரும் குறைகள் இருந்தன. நிறைவு நாளில் குறைகள் களையப்பட்டன.

கவிஞர்கள் பேச, கவிதை படிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. மலாயின் கவிஞர்களும் கவிதைப் படித்தார்கள். அவற்றை தமிழில் மொழிபெயர்த்துக் கொண்டுவந்தார்கள். அவற்றை நான் வாசித்தேன். என் குரல் பலருக்கும் பிடித்திருந்தது மகிழ்ச்சியை அளித்தது. நிறைவு விழாவில் ராஜேந்திரன் ஐஏஎஸ்ஸும் நிர்மலா ஐஏஎஸ்ஸும் வந்திருந்தார்கள். எங்களுக்கு பெரும் ஆதரவையும் ஊக்கத்தையும் கொடுத்தார்கள். பெண் கவிஞர்கள் அனைவரும் பெண்ணியத்தின் ஒரே அம்சத்தைத் திரும்பத் திரும்பப் பேசியதாக மலேஷிய பேராசிரியர் கிருஷ்ணன் மணியம் கூறினார். தமயந்தி, மதுமிதா, பிரேமா ரேவதி, சக்தி ஜோதி போன்றவர்களின் உரைகள் ஆக்கப்பூர்வமான கருத்துகளை முன்வைத்தன.

பல குறைகள் சில நிறைகள். நூல்கள் வெளிவந்தது மகிழ்ச்சி. சக்தி ஜோதியின் முயற்சிகளால்தான் எல்லோருக்கும் தங்கும் இடவசதி உணவு உட்பட விருந்தோம்பலும் கிடைத்தன. அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
ஆண் எழுத்தாளர்களை இடையில் பேசவிட்டது உற்சாகத்தைக் குன்றச் செய்தது.

பெண் கவிஞர்களுக்கு என்று தனிப்பட்ட கூட்டம் நடத்தி நூல்களை வெளியிட்டு மையப்படுத்தியதற்கு கலைஞன் பதிப்பக உரிமையாளர் நந்தனுக்கு நன்றிகளும் பாராட்டுகளும். ஊக்கமளித்து ஆதரித்த எல்லா பெண் கவிஞர்களுக்கும் மற்றும் பிற எழுத்தாளர்களுக்கும் நண்பர்களுக்கும் என் உளமார்ந்த நன்றிகள்.////

சொல்ல வார்த்தையில்லை. இன்னுமொருமுறை புதிதாய்ப் பிறந்தோம். உங்களால் சிறப்புற்றோம். அன்பும்  மகிழ்ச்சியும் முபீன்.
தோழிகள்.
வெளியிடப்பட்ட எனது நூல்.
Related Posts Plugin for WordPress, Blogger...