இந்திய ஆசிய கவிஞர்கள் சந்திப்பில் 31 தமிழ்க் கவிஞர்கள் கலந்து கொண்டோம்.
இது பற்றி முபீன் சாதிகா கூறியிருப்பதை அப்படியே பகிர்கிறேன்.
////
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் இந்திய-ஆசியான் எழுத்தாளர்கள் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடக்கவிருக்கிறது. இதில் கலைஞன் பதிப்பகத்தின் உரிமையாளர் திரு.நந்தன் மாசிலாமணி அவர்களின் முயற்சியால் 38 கவிஞர்களுக்கு 38 நூல்கள் வெளியிடப்படவிருக்கின்றன. இந்த நூல்களைத் தொகுக்கவும் கவிஞர்களை நேர்காணல் செய்யவும் எனக்கு வாய்ப்பளித்த திரு.நந்தன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். ஒத்துழைப்பு நல்கிய 38 கவிஞர்களுக்கும் என் நன்றிகள். இதற்காக 3500 பக்க கவிதைகளைப் படித்து, 1000 பக்க நேர்காணல்களை வாசித்து 300 பக்கங்கள் எழுதி 38 நூல்களுக்கும் மெய்ப்பு பார்த்து தொடர் வேலையாகச் செய்யவேண்டியிருந்தது. நூல்கள் வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. பெண் படைப்பாளர்களுக்கு எனத் தனியாக ஒரு கூட்டம் நடத்தவேண்டும் என்று கருதி அவர்களில் ஓரளவு அதிகம் அறியப்படாதவர்களும் இருக்கவேண்டும் என்று பார்த்து தேர்ந்தெடுக்க வைத்து அங்கீகாரம் தர எடுத்த முயற்சி பாராட்டுக்குரியது. எல்லோருடைய நூல் வந்தாலும் சிலரால் நிகழ்ச்சிக்கு வர இயலவில்லை. வரப் போகவும் தங்கவும் கலைஞன் பதிப்பகமே ஏற்பாடு செய்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியை மலேஷிய பல்கலைக்கழகமும் அழகப்பா பல்கலைக் கழகமும் இணைந்து நடத்துகின்றன. காரைக்குடியில் 27, 28 தேதிகளில் காலை 10.30லிருந்து மாலை 5.30 வரை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. வாய்ப்புள்ளவர்கள் கலந்துகொள்ளலாம். இடம்:காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம்.////
///காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் திங்கள், செவ்வாய் கிழமைகளில் நடைபெற்ற பன்னாட்டுக் கருத்தரங்கத்தில் 38 கவிஞர்களின் நூல்கள் வெளியிடப்பட்டன. அதில் 31 கவிஞர்கள்தான் பங்கேற்றார்கள். பல சூழ்நிலைகள் காரணமாக மிச்சமிருந்த கவிஞர்கள் பங்கேற்கவில்லை. விழாவுக்கு முந்தைய நாளும் விழா நாளும் தங்குவது உணவு உட்பட பல அடிப்படை அம்சங்களில் பெரும் குறைகள் இருந்தன. நிறைவு நாளில் குறைகள் களையப்பட்டன.
கவிஞர்கள் பேச, கவிதை படிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. மலாயின் கவிஞர்களும் கவிதைப் படித்தார்கள். அவற்றை தமிழில் மொழிபெயர்த்துக் கொண்டுவந்தார்கள். அவற்றை நான் வாசித்தேன். என் குரல் பலருக்கும் பிடித்திருந்தது மகிழ்ச்சியை அளித்தது. நிறைவு விழாவில் ராஜேந்திரன் ஐஏஎஸ்ஸும் நிர்மலா ஐஏஎஸ்ஸும் வந்திருந்தார்கள். எங்களுக்கு பெரும் ஆதரவையும் ஊக்கத்தையும் கொடுத்தார்கள். பெண் கவிஞர்கள் அனைவரும் பெண்ணியத்தின் ஒரே அம்சத்தைத் திரும்பத் திரும்பப் பேசியதாக மலேஷிய பேராசிரியர் கிருஷ்ணன் மணியம் கூறினார். தமயந்தி, மதுமிதா, பிரேமா ரேவதி, சக்தி ஜோதி போன்றவர்களின் உரைகள் ஆக்கப்பூர்வமான கருத்துகளை முன்வைத்தன.
பல குறைகள் சில நிறைகள். நூல்கள் வெளிவந்தது மகிழ்ச்சி. சக்தி ஜோதியின் முயற்சிகளால்தான் எல்லோருக்கும் தங்கும் இடவசதி உணவு உட்பட விருந்தோம்பலும் கிடைத்தன. அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
ஆண் எழுத்தாளர்களை இடையில் பேசவிட்டது உற்சாகத்தைக் குன்றச் செய்தது.
பெண் கவிஞர்களுக்கு என்று தனிப்பட்ட கூட்டம் நடத்தி நூல்களை வெளியிட்டு மையப்படுத்தியதற்கு கலைஞன் பதிப்பக உரிமையாளர் நந்தனுக்கு நன்றிகளும் பாராட்டுகளும். ஊக்கமளித்து ஆதரித்த எல்லா பெண் கவிஞர்களுக்கும் மற்றும் பிற எழுத்தாளர்களுக்கும் நண்பர்களுக்கும் என் உளமார்ந்த நன்றிகள்.////
சொல்ல வார்த்தையில்லை. இன்னுமொருமுறை புதிதாய்ப் பிறந்தோம். உங்களால் சிறப்புற்றோம். அன்பும் மகிழ்ச்சியும் முபீன்.
தோழிகள்.
வெளியிடப்பட்ட எனது நூல்.