எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 19 ஜூலை, 2017

கர்ப்பஸ்த்ரியின் அட்ராசிட்டீஸ்




கர்ப்பஸ்த்ரியின் அட்ராசிட்டீஸ் 

அன்புள்ள அத்தான் வணக்கம். 

உங்கள் ஆசைப் பைங்கிளியின் வணக்கம். நிலையாக என் நெஞ்சில் ஒளிவீசும் தீபம். நீயே எந்நாளும் என் காதல் கீதம்.

உங்கள் நினைவுகளே என் நினைவுப் பெட்டகத்தின் பொக்கிஷங்கள். நமக்குப் பிடித்த கவிதை வரிகளை நினைவில் நிறுத்தி ரசித்து ரசித்துச் சுவைப்பது மாதிரி உங்களுடைய நினைவை ரசித்துக் கொண்டிருக்கிறேன்.

சுவையான ஐஸ்க்ரீமை நினைத்து ஏங்கும் கோடைக்காலச் சிறுவனைப் போல நான் இங்கே தவித்துக் கிடக்கிறேன்.  நாட்களும் நகராதோ. பொழுதும் போகாதோ.. மாலை என்னை வாட்டுது.

உன் நெஞ்சில் சாய்ந்து உன் மடியில் அமர்ந்து சின்னப் புள்ளையாட்டம் என்னை விட்டுட்டு ஊருக்குப் போயிட்டியேன்னு அழணும் போலிருக்கு. 

சோலை புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களே. கண்ணாளனைக் கண்டால் என்ன. என் வேதனை சொன்னால் என்ன நல் வார்த்தைகள் தந்தாலென்ன.

நான் என்ன சமைச்சாலும் என்ன அறுதப்பாடாவதியாய்ச் சமைச்சாலும் சகிச்சுக்கிட்டு நல்லாருக்குன்னு சொல்லிச் சாப்பிடுவியேடி என் அழகுக் கண்ணாக் குட்டி. 

எனக்கு இங்கே சாப்பிடும்போது தூங்கும்போது எல்லாம் உங்க நினைப்புத்தான். நான்  நைட் பாத்ரூம்போகும்போது டார்ச் லைட் எடுத்துக்கொண்டு எனக்குக் காவலாய் வருவீங்களே, அப்புறம் நான் சாப்பிடும்போது கீரையை அள்ளி வைச்சு நெறைய சாப்பிடுடின்னு சொல்லிக் கொஞ்சுவீங்களே அதை எல்லாம் நினைச்சுக்கிட்டே நீங்க என் பக்கத்துல இருக்குற மாதிரி நினைச்சுக்குவேன் . சந்தோஷமா இருக்கும். 

ஆண்மையின் கம்பீரத்தில் பூரித்து இருக்கும் உங்கள் புஜத்தில் தலை சாய்த்துப் படுக்க ஏங்குதய்யா இந்த மனசு 

அன்பே ..!
நீ என்னருகில்
இல்லாத நேரங்கள்
ஆமைக்கும் மண்புழுவுக்கும்
போட்டி வைத்த காலங்கள். 

நீ எதிர்ப்படாத
என் பாதைகள்
இராஜபுதனத்துப் பாலைகள். 

நீ என்னருகில்
இல்லாத நாட்கள்
மலர்ந்து செடியிலேயே
வாடிவிடும் ரோஜாப்பூச்சிதறல்கள். 
நீயில்லாத என் சுவாசங்கள்
காகித ரோஜா வாசங்கள். 

உன் நினைவு
காயாத வண்ண ஓவியமாய் என்னுள்
வானவில்லைத் தீட்டிக்கொண்டு.
நீயில்லாத சொர்க்கங்கள் .
எனக்கு அவை நரகங்கள்.

என் கால்களைக் கட்டிப்போட்டுவிட்டு
எங்கேயொளிந்து கொண்டாய் நீ ?
உன் நினைவுகளை மேய்ந்துகொண்டு
கொட்டிலில் கட்டிக்கிடக்கும் நான்

நீ சீக்கிரம் வாயேன்
வந்து இந்த அக்கினி நக்ஷத்திரத்தைப்
பௌர்ணமியாய் மாற்றேன்.

அன்பே..
உன்னின் என்னின்
நம்மின் உதிரத்தில்
உதித்த ஜீவன் ஒன்று
என்னுள்ளே
சப்த ஸ்வரங்களையும் இசைத்தபடி
சிரிக்கிறது.

அந்த ஸ்வர்ணநாதத்தை
நீயும் பகிர்ந்துகொள்ள.. ரசிக்க
சீக்கிரம் வாயேன்
சீக்கிரம் வாயேன்.
--மதூ என்ற தேனுப்பொம்மி.

உனக்கென்ன
நண்பர்கள் நண்பிகள்
சினிமா ஆயிரம் ஆயிரம்
ஜாலியாய்ப் பொழுது போகும்
தனிமையில் புழுங்கிப் புழுங்கி
மனக்கணுக்கள் வலிக்கின்றன
கண்ணா சீக்கிரம் இங்கே வா.

எனக்கு எப்பவும் உங்ககூட தனியா இருக்கணும். யுகம் யுகமா ஒண்ணாய்ச் சேர்ந்து இருக்கணும். பிரிவே கூடாது

முத்தம் கொண்ட கன்னம், மோகம் கொண்ட உள்ளம் இன்னும் இன்னும் என்று என்னைத் தொல்லை செய்யும் இடையோடு விளையாட வருவாய் கண்ணா. 

என் அன்பு ஃபேரக்ஸ் குட்டி, லாக்டோஜென் பேபி, க்ளாஸோ கன்னம்,
எப்பிடிம்மா இருக்கே. 

என்னாசை அத்தானுக்கு, இளமனசை அள்ளித்தந்தேன். காதலுக்குச் சீதனமாய்க் கதைகதையாய்ச் சொல்ல வந்தேன். அன்பே வந்தேனே. எனை நான் தந்தேனே. 

பக்கத்திலே நீயிருந்தா சொர்க்கத்திலே நானிருப்பேன். எந்நாளும் சேர்ந்திருப்போம். மதுரை மரிக்கொழுந்து வாசம் என் ராஜாவே உன்னுடைய நேசம். 

சூரியகாந்தியில் எப்படி மனைவி ( ஜெயலலிதா ) கணவனுக்காகவும் கணவனது குடும்பத்துக்காகவும் தன்னை அர்ப்பணித்துக் கொள்கிறாளோ அதுபோல் இருக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு உண்டாகிறது.

உங்கள் குட்டிப் பையனும் வயிற்றுக்குள் கராத்தே குங்ஃபூ ஜூடோவெல்லாம் போடுகிறான். அவ்வப்போது குத்துச்சண்டை சிலம்பம் ஆடுகிறான். சீக்கிரம் வந்து உங்கள் காதை வைத்து அந்த வலம்புரிமுத்தின் ஓசையைக் கேட்க வாங்களேன்.

ஆழக்கடலில் சிறிய முத்து
ஆசைக்கடலில் பெரிய முத்து
என்னடி என் ராஜாக் கண்ணு
ஆயிரத்தில் ஒண்ணே ஒண்ணு
மூழ்கினோம் நீந்தினோம்
உன்னை எடுக்க.
கண்ணா ராஜா ஐயா சின்னையா.

உங்கள் இதயத்தில் எனக்குத்தந்த அரைப்பகுதியில் கால்பகுதியைத் திருடி உங்கள் மகனுக்குக் கொடுத்துவிட்டீர்கள்.  எனக்கு எல்லார் மேலும் பொறாமையாக வருகிறது. உங்கள் அன்பை அனைவரும் பங்கு போட்டுக் கொள்கிறார்களே என்று.

அன்புள்ள அத்தான் வணக்கம் !

நலந்தானா நலந்தானா உடலும் உள்ளமும் நலந்தானா

இனியவனே என்று பாடி வந்தேன் இனி அவந்தான் என்று ஆகிவிட்டேன். நான்பாடும்பாடல்., தேனே தென்பாண்டிமீனே. 

ஊருக்கும் தெரியாது யாருக்கும் புரியாது உன்னை எண்ணிக் கனவு கண்டு உள்ளம் ஏங்குவது. காண்பதெல்லாம் உன் உருவம். கேட்பதெல்லாம் உனது குரல். கண்களை உறக்கம் தழுவாது அன்புள்ளம் தவித்திடும்போது.

பொன்விலங்கை வேண்டுமென்றே பூட்டிக் கொண்டேனே உன்னைப் புரிந்துகூட சிறையில் வந்து மாட்டிக் கொண்டேனே

காலம் வரும் என் கனவுகள் எல்லாம் கனிந்துவரும். காத்திருப்பேன். என் பாதையில் தெய்வம் இணைந்துவரும். 

துன்பம் நேர்கையில் யாழெடுத்து இசைத்தெனக்கு இன்பம் சேர்க்க மாட்டாயா கண்ணா..

உயிரே உனக்காக நான் ஆணையிட்டேன். உடனே கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லச் சொல்லக் கல்லும் முள்ளும் பூவானது மெல்ல மெல்ல. 

கண்ணைத் தொட்டு நெஞ்சைத் தொட்டுப் பெண்ணைத் தொட்டது காதல். காதல் படகில் யாரோ பாட காற்றில் வந்தது ஓசை. 

என் மனதின் மூடுபனி விலகி கிழக்கு வெளுத்திருச்சு. நேரம்தான் நல்லாயிருக்கையில் முத்துக்கள் மூன்றில் தங்கமகன் உங்கள் கையால் மூன்று முடிச்சு வாங்கியாச்சு.

அக்கம்பக்கம் சுற்றிப் பார்த்துத் தலைக்குக் கொஞ்சம் தண்ணீர் ஊற்று என்றுதானே சொன்னேன். நீங்களோ நிலாக் காயுது நேரம் நல்ல நேரம் நெஞ்சில் பாயுது காமன் விடும் பானம் என்று சொல்லி இந்தப் பூ மலர்ந்திட நடமிடும் பொன்மயில் நீங்கள். நின்றாடும் பொன்பாதம் உன்பாதம் 

பூவில் வண்டு கூடும் கண்டு பூவும் கண்கள் மூடும். 
 
இரவுக்காய் உறவுக்காய் ஏங்கும் இந்த ஏழைக்காய் நீயும்காய் நிதமும்காய், நேரில் நிற்கும் இவரைக்காய்.

அத்தான் உங்கள் மோகம் 30 நாளுமில்லை. ஆசை 60 நாளுமில்லை. அவள் மஞ்சில் விரிஞ்ச பூக்கள். அங்கே நீங்கள் நாயகன், அவளோ அடிமைப்பெண். 

ஒரேநாள் உன்னோடு ஒரேநாள் உறவினில் ஆட புதுசுகம் காண காண்போமே எந்நாளும் திருநாள்.

இணையத் தெரிந்த தலைவா உனக்கு என்னைப் புரியாதா. 

நீலவண்ணக் கண்ணா வாடா. நீ ஒரு முத்தம் தாடா. கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான் கள்வெறி கொள்ளுதய்யா.

உயிர்தீயினிலே வளர் ஜோதியே எந்தன் சிந்தனையே எந்தன் சித்தமே..

அன்பு என்னும் நல்ல தேன் கலந்து இங்கு நான் கொடுத்தேன் ஒரு நல்விருந்து. நீ எங்கே என் நினைவுகள் அங்கே. நீ ஒருநாள் வரும்வரையில் நான் இருப்பேன் முகப்பறையில். ( ஹிஹி )

அன்பே நீ அங்கே நான் இங்கே வாழ்ந்தால் இன்பம் காண்பது எங்கே அன்பே. 

மாம்பூவே சிறு மைனாவே நீ மச்சானின் பச்சைக்கிளி 

ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன் உன் காலடி ஓசையிலே உன் ஆசையை நான் அறிவேன்.

கணையாழி இங்கே மணவாளன் அங்கே காணாமல் நானும் உயிர்வாழ்வதெங்கே. 

பொன்னின் நிறம் பிள்ளை மனம் வள்ளல் குணம் யாரோ . மன்னன் என்னும் தேரில் வரும் தேவன் மகன் நீயோ.

பூவை எடுத்து ஒரு மாலை தொடுத்துவைச்சேனே என் சின்ன ராசா உன் தோளுக்காகத்தான் அந்த மாலை ஏங்குது. 

நல்ல கணவனுக்கு மனைவியானவள் அந்தக் கடவுளுக்கே நன்றி கூறுவாள். நம் உயிரைவிட விலைமதிக்க முடியாத செல்வம் நம் அன்புத் திருமகன். 

வாரோம் வழி பார்த்திருப்போம் வந்தால் எம்மைத் தந்திடுவோம்.
என்றும் அன்புடன் உன்னுடைய கண்ணன்தேனு & தம்பையா.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...