எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 22 மே, 2017

பத்மயக்ஞம்.

பத்மயக்ஞம் :-

“என்னை ஏன் படைத்தாய் ?” ஒன்றல்ல இரண்டு பெண்கள் கேள்விக்கணைகளோடு கண்கசிய நின்றிருந்தார்கள் பிரம்மனின் முன். ரூப தீர்த்தத்தில் நீராடிய ஒருத்தியும் நாக குண்ட் இல் நீராடிய ஒருத்தியும் கூந்தல் நீர் சொட்ட கைகூப்பி நிற்க, தலையைப் பாரமாக்கிய க்ரீடத்தைக் கழட்டி வைத்துவிடலாமா என்று யோசித்தபடி நாலாபுறமும் பார்த்தார் நான்முகன்.

”ஏன். ஏன்?” என்று எத்தனை கேள்விக்கணைகள் அவர்முன். ’என்னை ஏன் படைத்தாய்’ என்று நித்தம் நித்தம் எத்தனை கோபாக்கினிகள் ?. அவருக்கு மட்டும் பதில் தெரியுமா என்ன. கைக்கு வந்ததை உருவாக்கி உலவவிடுதலே பணி. கிடைத்த மண்ணில் வனைந்த பாண்டம். கண்மூடி மௌனித்தார் இதைக் கேட்கவேண்டியே டெல்லியிலிருந்து ஒருத்தியும் சிதம்பரத்திலிருந்து ஒருத்தியும் புஷ்கருக்குக் குடும்பத்தோடு வந்திருந்தார்கள்.

”பிதுர்வரம்.” என்ற வார்த்தைகள் உதிர்ந்தன அவர் வாயிலிருந்து. பிரம்மனா பேசினார் ?. ’என்னது, பிதுர்வரமா ?’ சன்னதியில் எதிரெதிரே நின்றிருந்த இருவரும் உடல் சிலிர்த்து ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். என்ன அழகு எத்தனை அழகு கோடிமலர் கொட்டிய அழகு என்றிருந்த நீரஜாவைப் பார்த்த கணத்தில் பத்மாவதியின் புத்தி பேதலித்தது. பிள்ளைகுட்டிகள் நட்சத்திரங்களாய்ச் சூழ பூரணநிலவைப் போலிருந்த பத்மாவதியின் களை நீரஜாவை வைத்தகண் மாறாமல் பார்க்கச் செய்தது.

வெள்ளிக் காசுகளை வெள்ளிக்  கூர்மத்தின் மேல் பதித்துக் கொண்டிருந்தார்கள் பத்மாவதியின் பிள்ளைகளும் மருமக்களும். நாற்பத்தி மூன்று வயது பத்மாவதிக்குப் பதினெட்டிலேயே ராஜகோபாலுடன் திருமணமாகிப் பத்தொன்பதில் பெண்ணும் இருபது வயதில் பிள்ளையும் பிறந்திருந்தார்கள். அவளது நாற்பதாவது வயதில் பெண்ணுக்குத் திருமணமாகி நாற்பத்தி ஒன்றில் பேத்தியும் பிறந்துவிட்டாள். இரண்டு வயது அபியும் அம்மா அப்பாவோடு தொத்திக்கொண்டு காசு பதித்து சந்தோஷத்தில் கைதட்டியது.

பாட்டியைப் பார்த்து ஓடி வந்து காலைக் கட்டிக் கொண்ட அபியை அணைத்த பத்மாவதியின் கண்களில் இருந்து யாரும் பார்க்குமுன் இருசொட்டுக் கண்ணீர் சுண்டித் தெறித்தது கூர்மத்தின் மேல். சிலிர்த்தார் விஷ்ணு. பிரியத்தைக் கொட்டும் கணவன். நிறைவான வாழ்க்கை வாழ்ந்த இவளுக்கென்ன குறையென்று நோக்கினார்.

தொப்பக்கா என்று உறவினர்களாலும் ஜப்பான் சுந்தரி என்று தாத்தாவாலும் கட்டச்சி என்று தம்பியாலும் கருவாச்சி என்று புகுந்த வீட்டாராலும் நாமம் சூட்டப்பட்ட தனக்கு கொள்ளைப் பிரியம் காட்டும் கணவன் கிட்டியிருந்தாலும் என்ன மனக்குறை என்று இவருக்குத் தெரியாதா என்ன ? என் அப்பா அம்மா தாத்தா பாட்டி அனைவரும் என்னைப் போலில்லையே. நான் மட்டும் ஏன் கறுப்பாய்க் குட்டையாய் குண்டாய் சப்பைமூக்காய் இருக்கிறேன் என யோசனையாய் நிமிர்ந்து பார்த்தவள் கண்ணுக்குள் பிரம்மனின் உதடு அசைந்தது.



”உன் பிதுர்க்களை நீ அறியவில்லை. உன்னைச் செய்த மண் அப்படி. உன் தாத்தனுக்குத் தாத்தன், பாட்டிக்குப் பாட்டி. அவர்கள் விவசாயிகள், வெள்ளந்திகள். காடுகரையில் உழைத்துக் கறுத்த வலிய தேகம் கொண்டவர்கள். அவர்கள் உனக்களித்த நற்குணங்கள் போல உனக்களித்த தேகம் இது. உன் மரபணுத் தொடரைக்கொண்டே செய்தேன் என்றார். எனக்கு எல்லாமே வண்ணங்களும் வடிவங்களும்தான். அதற்கு மாற்றாக நான் ஏதும் செய்வதில்லை. உன் குணநலன்கள் உன் முன்னோர் கொடுத்தது தேகத்தைப் போல.. நீ ஒரு நீலத்தாமரை. அது உன் பிதுர்வரம். உருவற்ற என்னைப் பார். இங்கே மட்டும்தானே உருவம். இதற்கெல்லாம் நான் வருந்துவதில்லை என்றார்.

நினைவு தெரிந்த நாளிலிலிருந்து குடைந்த கேள்விகள் பதில்களின் உண்மை தாளாமல் தள்ளாடின. பிதுர்சாபம் போலப் பிதுர்வரம். அவர்களின் மிச்சம் நான். ஒன்றிலிருந்து வேறொன்றைச் செய்ய இயலுமா. அவர்களே நான் நானே அவர்கள். நாற்பது வருடமாய் பல்வேறு திக்குகளிலிருந்தும் தனக்குள்ளிருந்து நைக்கும் கேள்விகளில் இருந்து நிம்மதியடைந்தாள் பத்மாவதி. நிமிர்ந்து பார்த்தால் முன்னே நின்றிருந்த பேரழகியைக் காணவில்லை.

”என்ன அழகாயிருந்து என்ன ? அழகிப் போட்டிக்கா போகப்போகிறோம்.?” குகைக்குள் அமர்ந்திருந்த சிவனைப் பார்த்தபடி யோசித்தாள் நீரஜா என்ற யக்ஞப்ரபா. ”யம்மாடி என்ன அழகு” சேப்பு சேப்பா கையும் காலும் என்று கொஞ்சிய உறவினரும். ”செப்புச் சிலையாட்டம் என்ன அழகு” என்று வியந்த கல்லூரி நட்புகளும் மனக்கண்ணில் வந்தார்கள். புற அழகோடு மன அழகும் பொருந்திய அவளுக்குத் தலை எழுத்தில்தான் அழகில்லாமல் போய்விட்டது.

பிரம்மனுக்கு சந்தியா ஆரத்தி நடந்துகொண்டிருந்தது. ஜகத்பிதா என்கிறார்கள் உன்னை. என் ஜகத்தை கருவாக்கி உருவாக்கி அழித்துக் கொண்டே இருக்கின்றாயே ? ஏன்.? புற அழகு கொடுத்த நீ அகநிறைவும் கொடுத்திருக்கலாமே. ? அன்னம் தலையை இசைவற்று அசைத்துக் கொண்டது. சிணுக்கமாய் ஒரு பார்வை. பிரமனின் வாயில் இருந்து அதே சொற்கள் உதிர்ந்தன. நீலத்தாமரையிடம் சொன்னதையே அன்னத்திடமும் சொன்னார். பிதுர்வரம்.

”இதுவா. திடுக்கிட்டு விழித்தாள் யக்ஞப்ரபா. ஆம் உன் முன்னோர்கள் மருந்து வியாபாரிகள். தெரிந்தே காலம் தப்பிய மருந்தை விற்றார்கள். அம்மருந்தை உண்டு ஏகப்பட்ட குழந்தைகள் மரித்தார்கள். அவர்கள் கொடுத்த உடல் உன்னை அடைந்தது போல அவர்கள் எய்த பாவமும் உன்னையே அடைந்தது. குழந்தைகள் உன் கருவில் உருவாகி மரிக்கிறார்கள். ஆனால் உன் ஆதி முன்னோர் செய்த பூர்வ புண்ணியம் உனக்குக் குழந்தை உண்டு. அதை எப்போது செய்யப் போகிறேன் என்பது எனக்கே தெரியாது. அதை நீதான் பெற்றெடுப்பாயா எனவும் தெரியாது.’

யக்ஞப்ரபா தலை கவிழ்ந்தாள். அன்னம் சோர்ந்து அமர்ந்தது. ’ஆமாம் நானும் என் கணவர் வாகீசனும் ஆனந்த் நகரில் வசுதா என்னும் ஒருத்தியைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறோம் எங்கள் குழந்தையைச் சுமக்க. என்னுடைய கரு முட்டையையும் அவருடைய விந்தணுவையும் சேர்த்து உருவாகப்போகும் குழந்தையை நீ பத்திரமாகச் செய்து தா ப்ரஜாபதி. ’ கைகூப்பி உருகியது அன்னம். ’என் பிதுர்வரத்தை நான் வாங்கிக் கொள்கிறேன். என் குழந்தையை நீ பத்திரமாக அவளிடம் உருவாக்கிக் கொடு’.

பிஞ்சுப் பிஞ்சுப் பாதங்கள் அவள் நினைவு வெளியில் புரண்டன. கண்கள் படகுகளைப் போல மிதக்க கண்ணீர் வெள்ளமாய்ப் புரண்டது. இமைகள் தட்டித் தட்டி அடக்கினாள். இனிக் கண்ணீர் எதற்குக் காரணம் பிடிபட்டுவிட்டபின். எத்தனை குழந்தைகள் மரித்தார்கள். எத்தனை நாத விந்து எத்தனை மோனத்தவம். எல்லாவற்றுக்கும் விடிவு வந்துவிட்டது.

பிரம்மனைச் சுமந்த அன்னம் மெல்ல நடையிட்டது. நீலத்தாமரையைப் பார்த்தது. அதற்கான இடம் வந்ததும் தாமரை தரை தொட்டது. ஹிரண்யகர்பா இதுதான் உன் இடம் இங்கே யக்ஞம் செய். இந்தப் பாவிகளை மன்னித்து விடு. ஆசையாலும் காமத்தாலும் பாசத்தாலும் கொழுந்துவிட்டெரியும் எங்கள் உள்ளம்தான் உன் அவிர்பாகம். எடுத்துக் கொள். எங்களைப் புனருத்ரதாரணம் செய்.

மனம் கசிந்தார் ப்ரம்மா. என்ன செய்ய என்ன செய்ய. ஒன்றைப் பார்த்து ஒன்று ஏங்கவும் ஒன்றைப்போல ஒன்று இருக்கமுடியாமல் போகவும் வைத்த தனது தொழிலை விடமுடியாமல் ஏங்கினார். கூர்மமாய் நின்ற தகப்பனின் நாபிக்கமலத்தில் அடைக்கலமாகும் ஆசை வந்தது. வருந்திய பிரம்மனைப் பார்த்துக் கூர்மம் சொன்னது , ”கடமையைச் செய் பலனை எதிர்பாராதே”. என்று. படைத்தல் மட்டுமே உன் தர்மம். அதன் பிரதிபலன்கள் உன்னைச் சார்ந்தவை அல்ல.

யக்ஞத்தீயில் கொழுந்து விட்டு எரிந்தது அக்னி. பக்கத்தில் பிரதட்சணம் வந்த பத்மாவதி கால் இடறி யக்ஞப்ரபாவின் கையைப் பிடித்துக் கொண்டாள். பற்றிய கரத்தின் பரிதவிப்பில் இருவருக்கும் ஒருவரை ஒருவர் புரிந்தது. நீலத்தாமரை நாணியது. அன்னம் நடை மெலிந்தது. வெவ்வேறு இடமிருந்த இரண்டும் நீரில் இணைந்து ஒன்றை ஒன்று பற்றிக் கொண்டன. நம் குற்றமன்று பிதுர்க்கள் தந்த வரம் இன்று நாம் இவ்வாறு வாழும் பாக்யம். குறையொன்றுமில்லை வாழ்வை நிறையாக்கத் தெரிந்தால் என யாகத்தீ பரவி அனைவரையும் செக்கச் சிவக்க வைத்திருந்தது. 


4 கருத்துகள்:

  1. //மனம் கசிந்தார் ப்ரம்மா. என்ன செய்ய என்ன செய்ய. ஒன்றைப் பார்த்து ஒன்று ஏங்கவும் ஒன்றைப்போல ஒன்று இருக்கமுடியாமல் போகவும் வைத்த தனது தொழிலை விடமுடியாமல் ஏங்கினார். கூர்மமாய் நின்ற தகப்பனின் நாபிக்கமலத்தில் அடைக்கலமாகும் ஆசை வந்தது. வருந்திய பிரம்மனைப் பார்த்துக் கூர்மம் சொன்னது , ”கடமையைச் செய் பலனை எதிர்பாராதே”. என்று. படைத்தல் மட்டுமே உன் தர்மம். அதன் பிரதிபலன்கள் உன்னைச் சார்ந்தவை அல்ல. //

    அருமை. வித்யாசமான புராணக்கதைகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  2. அருமையான கதை. அழகான பாத்திரங்கள். பாடம் தரும் நிகழ்வுகள்.

    பதிலளிநீக்கு
  3. THanks VGK sir

    Thanks Jambu sir

    THanks Bala sir

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...