பரமாத்மாவுடன்
கலந்த பறவைகளின் அரசன்.
கருமேகங்கள் சூழ்ந்து நிற்கின்றன. இன்றைக்கு
என்ன வெளிச்சத்தையே காணமுடியவில்லையே. உயர்ந்து ஓங்கி வளர்ந்திருந்த ஒரு ஆலவிருட்சத்தில்
அமர்ந்திருந்த அந்தப் பறவைகளின் அரசன் தன் இறக்கைகளைச் சோம்பல் முறித்து விழிக்கிறார்.
சடசடவென தெறித்து விழுகின்றன முதிர்ந்த மரத்தின் சுள்ளிகள்.
அவருக்கு வயது
60,000 ஆண்டுகள்.உள்ளத்தில் நன்னெறிகள் நிரம்பியதால் இன்னும் பறந்து விரிந்த பிரம்மாண்ட
சிறகுகளும் தீட்சண்யமான பார்வையும் கொண்டு திடமாகத்தான் விளங்குகிறார்.
வானம் இன்னும்
மேகமூட்டத்துடந்தான் இருக்கிறது. இன்று என்னவோ ஒரு அசம்பாவிதம் நிகழப்போகிறது என்று
ஏனோ தோன்றியது அந்தப் பறவைகளின் அரசனான ஜடாயுவுக்கு. மனதில் இனம் தெரியாத ஒரு அவசம்.
என்னவானால் என்ன எதிர்கொள்ளத்தானே வேண்டும். தன் தினப்படி காரியங்களை முடித்துவிட்டு
நிஷ்டையில் அமர்ந்திருக்கிறார்.
அது சரி இந்த ஜடாயு
யார். அவர் மனதை அச்சுறுத்திய அசம்பாவிதம்தான் என்ன ?
”பெரியப்பா.. பெரியப்பா” என்ற குரல்கள் அசைக்கின்றன. ஆனால் கண்
விழிக்க இயலவில்லை. அரைக்கண் மூடியபடி பார்க்கிறார் ஜடாயு. தயரத புத்திரர்கள்தான்.
ஒருவித ஏலாமையுடன் அவர்களிடம் அந்த அசம்பாவிதத்தைச் சொல்லியவுடன் அவரது கண்கள் நிரந்தமாக
மூடுகின்றன.