சூரியனும் சந்திரனும்தான் ஏற்கனவே ஒளியோடு உலாவருகிறார்களே இதென்ன புதுக்கதை என்கிறீர்களா குழந்தைகளே. ஆம் புதுக்கதைதான். ஏற்கனவே ஒளியோடு இருந்த சூரியன் ஒளியிழந்தது எப்படி என்பதையும் அவன் திரும்ப ஒளி பெற்றதையும் பார்ப்போம். அதே போல் சந்திரன் ஒளிவீசித் திகழ்வது எப்படி என்பதையும் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
பிரம்மதேவரின் மானஸபுத்திரர்களுள் ஒருவர் அத்திரி மகரிஷி. இவருடைய மனைவி அனுசூயாதேவி. யாரிடமும் அசூயை இல்லாமல் கோபப்படாமல் பழகுவதால் அனுசூயாதேவி அனைவராலும் விரும்பப்பட்டவளாகத் திகழ்ந்தாள்.
அதேபோல் அத்திரி முனிவரும் அனைவராலும் விரும்பப்பட்டார். ஆயுர்வேத மருத்துவம், ஜோதிட சாஸ்த்திரம் ஆகியவற்றில் கரை கண்டவர். இந்த உலகம் தோன்றியபோது இவரும் அவதரித்தார். பல்லாயிரம் குழந்தைகள் பெற்றார். அவர்களுள் பதஞ்சலி, தத்தாத்ரேயர் ஆகியோர் குறிப்பிடத் தகுந்தவர்கள்.
அத்திரி முனிவர் தெளிந்த மெய்ஞானம் கொண்டவர். ஈரேழு பதினாலு லோகத்திலும் அவர் புகழ் பரவிக் கிடந்தது. அவரை மனதில் தியானித்து அவரது மனைவி அனுசூயை மும்மூர்த்திகளைக் குழந்தைகளாக்கியதும் பின் முப்பெரும் தேவியரின் வேண்டுகோளின்படி அவர்களைத் திரும்ப மும்மூர்த்திகளாக்கியதும் நாம் அறிந்ததே.




