உள்ள நலன் அழிந்ததால் இழிந்த இராவணன்.
உள்ளம் கெடாதவரை எதுவுமே கெடுவதில்லை. உள்ளம் கெட்டால் அனைத்தும் கள்ளமாகும், அது ஒருவனை மலையில் இருந்து மடுவில் மட்டுமல்ல மரணத்துக்கும் செலுத்தும் என்று ஒருவனின் வாழ்க்கை நமக்குப் பாடம் புகட்டுகிறது.
அப்படி உள்ள நலன் அழிந்ததால் இழிந்தவன் சாதாரணன் அல்ல. உலகனைத்தையும் வென்றவனும், மூன்று கோடி வாழ்நாள் உடையவனும், முயன்று பெற்ற தவப்பயனால் யாராலும் வெல்லப்படமாட்டான் என சிவபெருமானே மனமகிழ்ந்தருளி வரம் வழங்கிய தசமுகன் எனப்படும் இராவணன்தான் அவன். அவனைப்பற்றிப் பார்ப்போம் குழந்தைகளே.
தென்கடலில் கெம்புப் பதக்கம் போல் ஒளிவீசி மின்னுகிறது இலங்கை மாநகரம். அங்கே அயோத்திக்கீடாக ஏன் அதை விடவும் அழகான மாட மாளிகை கூட கோபுரங்கள் எல்லாம் ஒளிவீசிப் பொலிகின்றன. அவற்றின் நடுவில் அதோ விஸ்வகர்மா சமைத்து விண்ணளாவி உயர்ந்து நிற்கின்றதே அந்த அரண்மனைதான் இலங்காதிபதி இராவணனின் மாளிகை.
இராவணனின் பெற்றோர் புலஸ்தியரின் பேரனான விஸ்ரவ முனிவரும், அசுரகுலத் தலைவனான கமாலியின் மகள் கேசியும் ஆவார்கள்.. இராவணனின் கூடப்பிறந்தவர்கள் விபீஷணன், கும்பகர்ணன், சூர்ப்பனகை. இவனது மனைவி மண்டோதரி. மகன்கள் இந்திரஜித்து, அட்சய குமாரன், அதிகாயன், பிரகஸ்தன், திரிசரன், நராந்தகன், தேவாந்தகன் ஆகியோர்.