சீதைக்குத்தான் தாயே இல்லையே. ஜனக மகாராஜா ஒரு வேள்வி முடிந்ததும் பூமியைக் கலப்பை கொண்டு உழுதபோது பூமியில் இருந்து வெளிப்பட்டவள்தான் சீதை. மிகவும் அழகுடன் திகழ்ந்த அக்குழந்தையை ஜனகமகாராஜா தன் மகளாக எடுத்து வளர்த்து வந்தார் என்பது தெரிந்ததே. ஆனால் அசோகவனத்தில் சீதையைக் காவல் காத்த இயக்கர்குலப் பெண்ணான திரிசடை சீதைக்கு எப்படித் தாயாவாள். அதைப் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
ஆரண்யவாசத்தில் ஒரு நாள் மாரீச மாய மானை உண்மை மான் என நம்பி சீதை கேட்டதும் ராமன் அதைப் பிடிக்கச் சென்றார். அப்போது சந்நியாசி வேடத்தில் வந்து இராவணன் சீதையைப் பூமியோடு பேர்த்து புஷ்பக விமானத்தில் இலங்கைக்கு எடுத்துச் சென்று தன்னை மணக்கும் படி வேண்டினான். சீதை மறுக்கவே அவளை அசோகவனத்தில் சிறைவைத்தான். அப்போது அவளைக் காவல் காக்க பல இயக்கர் குலப் பெண்களை நியமித்தான். அவர்களுள் ஒருத்திதான் திரிசடை.
ஆமாம் யார் இந்த திரிசடை. அண்ணனே ஆனாலும் இராவணனின் அநியாயத்தை எதிர்த்து நியாயத்துக்குக் குரல் கொடுத்த விபீஷணனின் மகள்தான் இவள். இவளும் பண்பும் அன்பும் வாய்ந்தவள்.
