மாடித்தோட்டம் போடவேண்டும் என பல நாட்களாக ஆசை . ஆனால் தற்போது இருக்கும் ஃப்ளாட்ஸில் மேலே முழுக்க மூடி ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்/இரும்பு ஷீட்ஸ் போட்டுப் பக்காவா இருக்கு. அது புறா பறவை எச்சங்கள் நிறைந்து வாக்கிங் போகவும் அசௌகர்யமா இருக்கு. சின்னஞ்சிறு நிகழ்ச்சிகள் நடத்தலாம். ஆனால் வருடாந்திரம் கூட யாரும் அங்கே ஒரு கெட்டுகெதர் கூட கொண்டாடியதில்லை.
அதை எடுத்தால் சோலார் பவர் நிர்மாணம் செய்யலாம் என்று ரங்க்ஸின் எண்ணம். எனக்கோ என் பழைய வீட்டைச் சுற்றி இருக்கும் தோட்டம் போல மாடி பூரா தோட்டம் அமைக்க எண்ணம். உஷாவின் தோட்டம் பார்த்து நப்பாசையும் கூட.
என் அன்புத் தோழி ஆரண்யா அல்லியை சேலத்தில் அவரது இல்லத்துக்குச் சென்று சந்தித்தேன். ஆர்கானிக் ஃபார்மிங்கில் அவர் எக்ஸ்பர்ட். உரம் பூச்சிக்கொல்லி இல்லாமல் இயற்கை விவசாயம் செய்யவும், மாடித்தோட்டம், பால்கனித் தோட்டம் அமைக்கவும் வழிகாட்டுகிறார்.
அவரது மாடித்தோட்டமே இது.
மூன்று டைப்பான வெல்க்ரோ பேக்குகள் வைத்து அவற்றில் மண், தென்னைக் கழிவான பித், இயற்கை உரம் நிரப்பி உயரத்துக்குத் தகுந்தவாறு புதினா, கொத்துமல்லி, வெந்தயக் கீரை, துளசி, அடுத்த லெவல் பேகில் கத்திரிக்காய் வெண்டை, தக்காளி, அதற்கு அடுத்த லெவல்பேகில் வாழை , முருங்கை எனப் பயிரிட்டு இருக்கிறார்.
பசுமஞ்சள் நல்ல பெரிய கிழங்காக அறுவடை செய்ததைக் காண்பித்தார். ( பேலியோவாசிகளின் கவனத்துக்கு ) . கொத்துக் கொத்தாய் கத்திரியும் தக்காளியும் காய்த்திருந்தது. !
அவரது மாடித் தோட்டத்தைச் சுட்டு வைத்திருக்கிறேன். ஆங்... சொல்ல மறந்துட்டேன் அந்த வெய்யிலிலும் வெள்ளை சாமந்தியும் காலிஃப்ளவரும் கூட இந்தத் தோட்டத்தில் மலர்ச்சியாகப் புன்னகைத்துக் கொண்டிருந்தன. :)
மடல் பிரியும் வாழை.