நகர மலர் (7)
1976 இல் ஆரம்பித்து பல்வேறு புதுமைகளோடு ஒரு சில ”நகரமலர்”கள் கைக்குக் கிட்டின.
அவற்றைப் பற்றிப் பதிவு செய்துள்ளேன். சிற்றிதழ்கள் வரிசையில் இவை நகரத்தார் சமூகக் கலை இலக்கியத் திங்களிதழ். முன் அட்டை உட்பக்கம், பின் அட்டை தவிர வேறு எங்குமே விளம்பரங்கள் இல்லை.
”சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான்
பெற்றத்தால் பெற்ற பயன் “
என்ற குறளைத் தங்கள் முத்திரை வார்த்தைகளாகப் பதித்துள்ளார்கள். முன் அட்டையில் குத்து விளக்கு லோகோவாக உள்ளது.
ஆண்டுக்கட்டணம் 10/- ரூ. வெளிநாடுகளுக்குச் சந்தாக் கட்டணம் 11/- ரூ. இதன் பதிப்பாசிரியர் நா. இளங்கோவன். நிர்வாகி. இராம. ஆண்டியப்பன், சிறப்பு ஆலோசகர்கள் வி. என். சிதம்பரம் & டாக்டர். தமிழண்ணல்.
அட்டைப்படத்துக்கு ஏற்ப உள்ளே ஒரு வாழ்த்துப்பா, ”எங்கள் உள்ளம்” என்ற தலைப்பிலே தலையங்கம், வாழ்த்துகள், வாசகர் கருத்துகள், எங்கள் ஊர், குரு பீடங்கள் கேள்வி பதில், மாதாமாதம் ஈற்றடி முதலடி கொடுத்து வெண்பாப் போட்டி, சிறுகதைகள், ஒப்பாரி, தாலாட்டுப் பாடல்கள், நிகழ்வுப் பதிவுகள், செய்திகள், ஏண்டி ஆத்தா தாக்க(ல்) தெரியுமா, பங்குசந்தை/வரி/தொழில் நடத்துவது சம்பந்தமாகத் தகவல்கள், கல்வி உதவித் தகவல்கள், வேலை வாய்ப்புக்கான தகவல்கள், ஆங்கிலக் கவிதைக்கான தமிழ் மொழி பெயர்ப்புகள், இளைஞர்களுக்கான உத்வேகமளிக்கும் கட்டுரைகள், சங்கக் கூட்டம் பற்றிய தகவல்கள், கோயில் விசேஷங்கள், திருமணத் தகவல்கள், வேண்டாம் வரதட்சணை என வலியுறுத்தும் கட்டுரைகள், பெண்களை வேலைக்கு அனுப்பச் சொல்லி வலியுறுத்தும் கட்டுரைகள், ஏனையவற்றில் பெண்களின் எண்ணங்கள் எனச் சிறப்பாக வெளிவந்துள்ளது இப்பத்திரிக்கை.
சமையல் குறிப்புகள், ஜோசியம், கவிதை எல்லாம் இல்லவே இல்லை !.ஓரிரு பாடல்கள் உள்ளன. மதுரை பாலஸ் ரோட்டில் இருந்து இப்பத்திரிக்கை வெளியாகி உள்ளது.
தற்போது நகரத்தார் மலர் என்ற ஒன்று வருகிறது. அதுவும் இதுவும் ஒன்றா எனத் தெரியவில்லை.
”வாழ்வரசி” என்ற பெயரில் தமிழண்ணல் அழகான தொடர்கதை ஒன்றை எழுதி இருக்கிறார்.வ.தேனப்பன் அப்பத்தா, ஐயா, மாமனார் மாமியார் என்ற தலைப்புக்களில் சுவாரசியமான கட்டுரைகள் படைத்துள்ளார். காசியில் நகரத்தார் பற்றிப் பரணீதரன் அழகாக எழுதி உள்ளார்.
சக்கரை வியாதி , கல்லீரல் நோய், சூரிய ஒளியின் பயன்கள், சித்த வைத்தியம், கீரைகளின் பயன்கள்,ஆகியன பற்றியும் ஆன்மீகம் பற்றி அதிகமாகவும் வந்துள்ளது.
கவிஞர் சிவல்புரி சிங்காரம், கண. சிற்பேசன், வாரியார், வ. தேனப்பன், தமிழண்ணல், பரணீதரன், டாக்டர் எஸ் சந்திரசேகர், ஆகியோர் சிறப்பான பங்களிப்புச் செய்துள்ளனர். மொத்தத்தில் மிக அருமையான நூல்.
நூல் :- நகர மலர
வகை:- சிற்றிதழ்கள்.
முதல் நூல் வெளிவந்த ஆண்டு – 1976 ஆவணி.
ஆசிரியர் :- நா. இளங்கோவன்

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!