எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 2 அக்டோபர், 2015

மலைகளைக் கிள்ளும் எலிகளும் நீராதாரங்களைக் கூறாக்கும் நரிகளும்.

சரித்திரப் பிரசித்திபெற்ற கோட்டைகளுடன் கூடிய மலைகளை அறிந்திருக்கலாம். ஆனால் பூகோளத்தில் ஒரு காலத்தில் இடம்பெற்றிருந்தும் கடல் விழுங்காமல் காற்றுக் குடிக்காமல் சிதறிச் சரிந்த மலைகள் மதுரை செல்லும் வழியிலும் திருச்சி செல்லும் வழியிலும் உண்டு.

ஆட்டுக்கிடாய்களின் உப்புக்கண்டக் கவிச்சியைப் போல வெய்யிலில் காயும் வெண் துண்டங்களைக் கண்டு மனம் பதறியதுண்டு. வெட்டிச்சாய்க்கப்பட்ட மரங்களைப் போல வீழ்ந்து கிடக்கும் மலைகளைக் கண்டு கண்கசிந்ததுண்டு.

மழை வளம் , நீர் வளம் , நில வளம் இயற்கை வளம், மூலிகை வளம், வனவிலங்குகள் வளம், மேய்ச்சல் நிலம், அபூர்வ தாவரங்கள், அருவிகள், சுனைகள் இவை எவையுமே இல்லாமல் வெறும் மொட்டைப் பாறைகளாக நின்றாலும் அவை நம் எக்கோ சிஸ்டத்தில் முக்கியப் பங்கு வகிப்பவை.


மேலூருக்கும் மதுரைக்கும் நடுவில் இருக்கும் ஆனை மலைக்கு முன்பாக ஆட்டுக் குட்டிகளைப் போன்ற சிறிய சைஸில் சில மலைகள் உண்டு. அவை இருந்த இடம் இப்போது கிரானைட் குவாரி வெட்டப்பட்ட சுரங்கங்களைப் போலக் கிடக்கின்றன. அவற்றின் கண்ணீர் போலத் தேங்கிக் கிடக்கிறது அவ்வப்போது பெய்யும் மழை நீர்.

மண்ணிலிருந்து இயற்கைப் படிமங்களாக பல்லாண்டுகளாக உருவாகுபவை மலைகள். அவற்றைப் பாலீதீன் குப்பைகளாலும் பீர் பாட்டில்களாலும் மூடி விடும் சுற்றுலாவாசிகள் அங்கே வாழும் உயிரினங்களைப் பற்றிச் சிறிது சிந்திக்க வேண்டும்.

ஜெண்டிங் ஹைலேண்ட்ஸிலோ, கேரளாவின் பொன்முடியிலோ, ஆனை முடியிலோ, ஆந்திராவின் திருப்பதியிலோ , குவாலியர் கோட்டையிலோ மலைமேல் ஒற்றைப் பாலீதீன் பேப்பரைக் கூடப் பார்க்க முடியாது. ஆனால் இங்கே மலை என்றாலே அது ப்ளாஸ்டிக் கழிவுக் குப்பைகளையும் எல்லை தாண்டிய மருத்துவக்குப்பைகளையும்  கொட்டும் இடமாக மாறிவருகிறது.

வனவிலங்குகள் வாழ அச்சுறுத்தல் உள்ள இடமாக மாறி வருகின்றன மலைகள். மக்களின் பயணப் பாதைகள் மலைகளின் குறுக்காக அமையாமல் அவற்றின் வாழ்வின் இறையாண்மை பாதுகாக்கப்படவேண்டும். மலைவாசிகள் தவிர்த்து வேறு யாரும் மலைகளில் இடங்களை ஆக்கிரமிப்பதை அரசாங்கம் வரையறுக்க வேண்டும். அரசின்  சுற்றுலாத்துறையின் இல்லங்கள், சுற்றுலாத்துறையின் வாகனங்கள் தவிர வேறு எவையும் மலையின் மேல் அனுமதிக்கப்படக் கூடாது.

அருவிகளும் மழையும் அற்றதால் நீரும் உணவும் தேடி மலை வாழ் விலங்குகள் மலையோரக் கிராமங்களில் படையெடுக்கின்றன. வேலிகளில் பொருத்தப்படும் மின் கம்பிகளும் மின்சார போஸ்டுகளும் கூட  இன்னொரு அச்சுறுத்தல் அவற்றுக்கு. அரிய வகை விலங்குகள் மட்டுமல்ல நமது தேசிய விலங்கான புலியே கூட அருகி வருகிறது. இவற்றைப் பாதுக்காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மலைக்காடுகளில் வாழும் ஆயிரக்கணக்கான அபூர்வ உயிரினங்களைக் காக்க வேண்டியது நாட்டை நேசிக்கும் குடிமக்கள் ஒவ்வொருவரின் கடமையும்தான்.

திருப்பூரின் அருகில் இருக்கும் சிவன் மலை செல்லும் வழியில் செடிகள் கொடிகள் ஏன் மலையில் இருக்கும் அனைத்து மரங்களிலும் வேண்டுதல் தொட்டில்கள் போலப் பறந்து கொண்டிருக்கின்றன பாலீதீன் பைகள்.

தமிழ்நாட்டில் சேலம் சேர்வராயன் மலைகளில்  பாக்ஸைட் தாது எடுக்க அனுமதி உள்ளது ஆனால் கோவாவில் மலைகளைத் தகர்த்து இரும்புத் தாது எடுக்கத் தடை செய்யப்பட்டுள்ளது.  தாதுக்களும் தாவர வாழ்வியலும் முக்கியமா. தற்காலிக லாபங்கள் முக்கியமா என்பதை அனுமதி கொடுக்குமுன் சிந்திக்க வேண்டும் அரசாங்கங்கள்.

ஒவ்வொரு ஊரிலும் கூறாக்கப்பட்ட நதிகள் ஏரிகள் குளங்களை பார்த்தால் ரத்தம் கொதிக்கும். நகரின் மையப்பகுதியில் இருப்பதால் ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் ஏரிப் பகுதிகளையும் ஊருணிகளையும் தூர்த்து பண அதிகார அரசியல் பலத்தால் ப்ளாட்டுகளை அமைத்து விடுகிறார்கள். நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் கட்டப்பட்ட வீடுகளில் வாழ்வோர்  நீர்ப் பற்றாக் குறையால் தவிக்கும் கொடுமையைக் காண முடிகிறது. பின்னே முற்பகல் செய்தால் பிற்பகல் விளையாதா என்ன..

அதேபோல் மலைகளுக்கு அருகிலும் ஏரிகளிலும் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் ரியல் எஸ்டேட் அனுமதி மறுக்கப்பட வேண்டும். அப்படி இல்லாவிட்டால் ( வடவள்ளி ) வீட்டிற்கு அருகில் பாம்புப் புற்றுகளும் தினப்படி விருந்தாளிகளாக யானைகளும் படை எடுக்கக்கூடும். சமப்படுத்தப்பட்ட நீர்த்தேக்கங்களில் வீடுகள் கட்டி அவை மழைக்காலங்களில் குட்டைக்குள் மூழ்கிய கப்பல்களாகக் காட்சி அளிப்பதைத் தவிர்க்க முடியும்.

மலையைக் குடைந்து ஆராய்ச்சிக்கூடங்கள் ஏற்படுத்த அனுமதிக்கக்கூடாது. புவி வெப்பமாதலால் இமயமலை ( ஐஸ் மலை ) வெள்ளியங்கிரி மலை, கொல்லி மலை ( இயற்கை வளங்கள் உள்ள மலைகள் ) ஆகியவற்றுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இயற்கை நேசர்களான ஆதிவாசிகளின் வாழ்வும் துன்புறுத்தலுக்கு ஆளாகி உள்ளது.

கிரானைட் கற்களுக்கும் ஆற்று மணலுக்கும் மாற்றாக சிராமிக் டைல்களும் செயற்கை மணலும் அதிக அளவில் பயன்பாட்டில் கொணரப்பட வேண்டும். ( பெட்ரோலியத்துக்கு மாற்றாக ஜட்ரோப்பா கார்கஸும், பாலீதீன் பைகளுக்கு மாற்றாக துணி, பேப்பர் பைகளும் பயன்பாட்டுக்கு வர வேண்டும்.

சாலையோரம் மரங்கள் வீடு தோறும் விருட்சங்கள், வைத்து மலைகளின் வனங்களின் வாழ்வியலைப் பாதுகாத்தல் அத்யாவசியம்.

வனவிலங்குகளைப் பிடித்து சரணாலயக் காப்பகங்களிலும் ஆலயங்களிலும் அடைக்காமல் இருந்தால் அவற்றுக்குப் புத்துணர்ச்சி முகாமே தேவைப்படாது.

சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த மலைகளோ ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த மலைகளோ எலிகளால் கிள்ளப்படுவதில்லை. ஆனால் இயற்கையின் சுழற்சியைப் பாதுகாக்கும், பூகோளத்தில் இருந்தும் வரலாற்றில் இருந்தும் வெட்டி வீழ்த்தப்படும் சின்னஞ்சிறு மலைகளுக்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டே ஆகவேண்டும்.

அதேபோல் (சரஸ்வதி  நதியைப் போலப்) பூமிக்குள்ளே காணாமல் போகும் நதிகளும் குளங்களும் ஏரிகளும் திரும்ப உயிர்கொடுக்கப்படவேண்டும். பாலிதீன் குப்பைகள் மிதக்க சாக்கடைக் கழிவுகள் கலக்க சேலத்தில் சரபங்காவும் சுவேத நதியும் வசிஷ்ட நதியும் செல்லும் பாடு சொல்வற்கு வருத்தமானது.

சாயக் கழிவுகள் இன்னொரு அச்சுறுத்தல் அவைகளுக்கு. வெளிநாடுகளில் அனுமதி மறுக்கப்படும் சாயப் பட்டறைகள் இங்கே நம் மக்களின் வீட்டில் உலை வைப்பதோடு நதிகளுக்கும் நிலத்துக்கும் உலை வைத்துவிடுகின்றன. நொந்து போய் நுரைத்து ஓடும் நொய்யலோ இதற்கு மாபெரும் சாட்சி. நதி நீரை இணைக்கிறோமோ இல்லையோ இருக்கும் நீர் நிலைகளைப் பாதுகாக்க முயற்சி எடுக்கப்பட வேண்டும்.

கோயில் ஊரணிகள் கும்பாபிஷேக சமயங்களில் தூர் வாரப்பட்டு கரைகள் உயர்த்திக் கட்டப்பட்டு ஓரளவேனும் பாதுகாக்கப்படுகின்றன.

வீராணம் புழல் போன்ற சில பெரிய சென்னைக்கு நீர் வழங்கும் ஏரிகளைத் தவிர பிறவற்றை யாவருமே அறியார். மறைந்து கொண்டிருக்கும் ஏரிகளைத் தூர் வாரி அவற்றை மழைக்காலங்களில் நீர் பிடிப்புப் பகுதியாக மாற்றினால் நீர்ப் பற்றாக்குறை ஏற்படாது.

வேடந்தாங்கல் போல மதுரை செல்லும் வழியில் உள்ள வேட்டங்குடி போன்ற ஏரிகளில் பல்வேறு நாடுகளில் உள்ள பறவைகள்  பருவ காலங்களில் வருவதால் இயற்கையின் சுழற்சி முறை பாதுகாக்கப்படுகிறது.

ஏரிகளை ஆறுகளை ஒட்டிய பகுதிகளில் கருவேலம் நீக்கப்பட வேண்டும். இவை உறிஞ்சித்தீர்க்கும் நீர் அளவிடற்கரியது. அதே போல் இந்த நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் அதிக நீர் குடிக்கும் வெள்ளரி போன்றவை பயிர் செய்யப்படுகின்றன.   இவை பற்றியும் ஆராய வேண்டும். மலை ஓரம் உள்ள வயல்களில் அதிக விளைச்சலுக்காகச் சேர்க்கப்படும் செயற்கை உரத்தில் உள்ள நைட்ரேட்  அங்கே உள்ள நீர் நிலையையும் பாதிப்பதால் அதைக் குடிக்கும் வனவிலங்குகள் இறந்துவிடுகின்றன.நிலமும் விஷமாகிறது.

புவி வெப்பமாதல், நீர் ( பற்றாக்குறை ) யுத்தம், உணவுப் பற்றாக்குறை, புதுப்புது வியாதிகள் அகியன தவிர்க்கப்பட வேண்டுமானால் மலைகளையும் நதிகளையும்  ஏரிகளையும் உடனடியாகப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது முதலீட்டாளர்கள்,  அரசாங்கம், பொதுமக்கள், இயற்கையோடு இயைந்து வாழ விரும்புபவர்கள் மட்டுமல்ல மலைகள், நதிகள், மலைவாழ் உயிரினங்கள் ஆகிய அனைவருக்குமே பயனளிக்கக் கூடியதாக இருக்கும்

நீராதாரங்கள், மலைகள் பற்றிய ஆவணக் காப்பகங்கள், அருங்காட்சியகங்கள், புகைப்பட கேலரிகள், தீம் பார்க்குகள்  உருவாக்கப்பட வேண்டும். பூங்காக்களுக்கும் அறிவியல் கண்காட்சிகளுக்கும், சிறப்பான திரைப்படங்களுக்கும் அழைத்துச் செல்லப்படுவது போல,  மலையேற்றம்  , நதி நீர் , ஏரி போன்றவற்றுக்கும் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டு பள்ளிக் குழந்தைகள் அழைத்துச் செல்லப்பட வேண்டும்.பொதுமக்களுக்கும் பத்ரிக்கை தொலைக்காட்சி  போன்ற ஊடகங்கள் மூலம் இவற்றின் சிறப்பையும் பாதுகாக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் பரப்ப வேண்டும்.

இளஞ்சிறார்களின் உள்ளத்தில் இவற்றைப் பாதுகாப்பதற்கான விதைகள் விதைக்கப்படவேண்டும். இவை சம்பந்தமான ஆவணப் படங்கள் குறும்படங்கள் , திரைப்படங்கள், டிஜிட்டல், கிராஃபிக்ஸ் கார்ட்டூன் படங்கள் உருவாக்கப்பட வேண்டும். பாடத்திட்டத்தில் இவற்றின் முக்கியத்துவம் சேர்க்கப்படவேண்டும்.

நதிக்கரையோர நாகரீகங்களில் தழைத்தவர்கள் நாம். கைபர் போலன் போன்ற கணவாய்கள் வழிவந்த மக்கள் வாழ்வும்  சிந்து சமவெளி நாகரிகமும் மலை சார்ந்தும் நதி சார்ந்தும் உருவானவை.

கல்லூரிகளில் விண்வெளி விஞ்ஞானத்துக்கும் அணு ஆராய்ச்சிக்கும் வழங்கப்படும் சம முக்கியத்துவம் பூமியைப் பற்றிய ஆராய்ச்சிப் பாடத்துக்கும்  ( ஜியாலஜி ) வழங்கப்பட வேண்டும்.

இயற்கைத் தாயின் அமுதசுரபியாம் மலைகளையும் நீராதாரங்களையும் அவற்றின் இயல்பிலேயே வைத்திருப்போம். இயற்கை சுழற்சியைப் பாதுகாப்போம். இச்செல்வங்களைப் பாதுகாப்பதன் மூலம் உலக நாடுகளில் வல்லரசாக நாம் உயர்ந்து நிற்போம்.

வகை-(2) சுற்றுச்சூழல் விழிப்புணர்வு - கட்டுரைப் போட்டி

- 1. இது எனது சொந்தப் படைப்பே என உறுதி கூறுகிறேன்.

(2) இப்படைப்பு, “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“க்காகவே எழுதப்பட்டது”

(3)“இதற்கு முன் வெளியான படைப்பல்ல, முடிவு வெளிவரும் வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது“ என்னும் உறுதிமொழி அளிக்கிறேன். 


4.நிறைவுத் தேதி. 2. 10. 2015. வகை-(2) சுற்றுச்சூழல் விழிப்புணர்வு - கட்டுரைப் போட்டி


5.“வலைப்பதிவர் திருவிழா-2015-புதுக்கோட்டை“
“தமிழ்நாடு அரசு – தமிழ் இணையக் கல்விக் கழகம்“
...இணைந்து நடத்தும்...
உலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகளுக்காக எழுதப்பட்ட கட்டுரை. 

டிஸ்கி :- இவ்விடுகை வெளியிடக் காரணமாயிருந்த துளசி சகோ & கீத்ஸுக்கு நன்றி :) 

 

5 கருத்துகள்:

  1. வலிக்கும் உண்மை. நன்றி தேன். வளம் பெற வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. அருமை அக்கா...
    வெற்ரி பெற வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. மனதை வலிக்கச் செய்யும் வலிமையான செய்திகள், நிகழ்வுகளின் தொகுப்பு. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. நன்றி வலைப்பதிவர் சந்திப்பு - 2015. & டி டி சகோ

    நன்றி வல்லிம்மா.

    நன்றி குமார் தம்பி

    ஆம் துபாய் ராஜா சகோ. ஹ்ம்ம்.

    பதிலளிநீக்கு
  5. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...