கம்பன் அடிசூடி திரு பழ பழனியப்பன் மற்றும் அவரது இளவல்களின் பெருமுயற்சியால் காரைக்குடியில் கம்பர் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
முதல் நாளாம் மக நாளில் ஏகப்பட்ட கொண்டாட்டங்கள். கண்ணுக்கும் செவிக்கும் , மனதுக்கும் , சிந்தனைக்கும் அதன்பின் வயிற்றுக்கும் மாபெரும் விருந்து படைத்தது சிறப்பு வாய்ந்த கம்பன் கழகம்.
காரைக்குடி கிருஷ்ணா கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற இவ்விழாவுக்கு ஸ்ரீராமரும் சீதையும் எழுந்தருளி அருள் பாலித்தனர். கோட்டையூரைச் சார்ந்த புரவலர், வள்ளல் பெருமகள், திருமதி வள்ளி முத்தையா ( வள்ளல் அழகப்பரின் தமையனாரின் மகள் ) அவர்களின் இல்லத்திலிருந்து ஸ்ரீராமரும் சீதையும் தம்பதி சமேதராக திருச்சின்னங்கள் ஒளிர எழுந்தருளி கிருஷ்ணர் கோயிலில் இருந்து ஊர்வலமாக கிருஷ்ணா கல்யாண மண்டபத்தில் எழுந்தருளச் செய்யப்பட்டனர்.
கோயிலில் தீப தூபத்துக்குப் பின் தேவகோட்டை கலைவாணி வித்யாலயா மாணாக்கியர் கொடி பிடித்து மலர் தூவி நடனமாடிப் போற்றித் துதித்து ஊர்வலத்தின் முன்னே வர , சங்கொலிக்க, நாதஸ்வரமும் மேளமும் இசைவெள்ளமாய்ப் பொங்க., தீவட்டி பிடித்தபடி இருவர் முன்னே கட்டியம் கூறிச் செல்ல, வேஷ்டி மற்றும் மஞ்சள் & பிங்க் நிறச் சட்டையணிந்த இளைஞர் பட்டாளம் தோளுக்கினியானில் ஸ்ரீராமர்சீதையைத் தாங்கிக் கவரி வீசி வந்தனர்.
நாட்டியத் தாரகைகள் முன்னே செல்ல கம்பீர அணிவகுப்பில் ஸ்ரீராமரும் சீதையும் கம்பருடன் சேவை சாதித்து அருளினார்கள். ( திரு.வீரப்பன் அவர்கள் கம்பன் புகைப்படத்தைத் தாங்கி வருகின்றார்கள் )
மனம் கவர் தம்பதிகள் கொற்றக் குடையின் கீழ் உலா.