கானகத்தில் ஒரு கஸ்தூரி மான்.:-
அம்பையின் காட்டிலே ஒரு மான் பற்றிப் படித்தபோது எனக்கு எங்கள்
ஃபாத்திமா அம்மா சொல்லும் ஒரு கதை ஞாபகம் வந்தது. ஒரு பெரிய கானகத்தில் அருவி பொழியும்
அடர்வனத்தில் ஒரு மான்குட்டி துள்ளிக்குதித்து ஆடிக்கொண்டிருந்தது. மிக அழகிய பெரிய
கண்களும் புள்ளிகள் வரைந்த உடலும் கொண்ட ஓவியம் உயிர்பெற்றது போல இருந்தது அது. ஏதோ
ஒரு நறுமணம் அதன் நாசியைத் துளைத்துக்கொண்டே இருந்தது. அந்த மணம் எங்கிருந்து வருகிறது
என்று அதனால் கண்டுபிடிக்கவே முடியவில்லை. அது துள்ளிக்குதித்துக் காடுமுழுதும் அந்த வாசம்
வரும் இடத்தைக்காண அலைந்தது. அது செல்லும் இடமெல்லாம் அந்த வாசனை அடித்துக்கொண்டே இருந்தது.
கொடியை, செடியை, மலையை, மரத்தை, மண்ணை முகர்ந்து பார்த்துக்கொண்டே மலைமடுவெல்லாம் கடந்தது.
ஓய்ந்து ஒரு இடத்தில் கால்மடித்து அமரும்போது அதன் முகம் அதன் உடல்நோக்கித் திரும்பியது..
அப்போது புரிந்தது அந்த மனங்கவர் மணம் தன் மேலேதான் வீசிக்கொண்டிருக்கிறது என.. அதுதான்
அந்தக் கஸ்தூரி மானின் வாசம். தன்னிடமிருந்தே வீசும் இந்த வாசத்தைக்காணவா இவ்வளவு
தூரம் பயணித்தோம் எனத் தோன்றியது அதற்கு.
இதைப்போல உங்கள் ஒவ்வொருவரிடமும் திறமைகள் ஒளிந்துள்ளன. அந்த
மான்குட்டிகள் போலத்தான் நீங்கள் அனைவரும். உங்கள் மணத்தை வேறெங்கோ தேடுகின்றீர்கள்.
உங்களிடமே அவை அனைத்தும் உள்ளன என்பதைக் கண்டடையுங்கள் என்பார்.
சுசீலாம்மாவும் ஃபாத்திமா அம்மாவும் எங்கள் ஃபாத்திமா கல்லூரியில்
எங்கள் இரு கண்கள் மாதிரி. தமிழ்த்துறை ஆசிரியைகள். இன்று கலை அறிவியல் கல்லூரிகளில்
தமிழுக்கும் ஆங்கிலத்துக்கும் இடமில்லை. வாழ்க்கைக்கு இலக்கியம் தேவையில்லை என்று கலை
அறிவியல் கல்லூரிகளே முடிவு செய்துவிட்டன. லைப்ரரி ஹவர்ஸ் தேவையில்லை. சப்ஜெக்ட் மட்டும்
போதும் என.
நாங்கள் கல்லூரியில் சேர்ந்தபோது முதல் இரு வருடங்கள் ஆங்கிலமும்
தமிழும் கட்டாயம் உண்டு. அது போக முதலிரு வருடங்கள் ஒரு (ஆன்சிலரியும்) துணைப்பாடமும்,
இரண்டாம் மூன்றாம் வருடத்தில் இன்னொரு துணைப்பாடமும் ,நாம் தேர்ந்தெடுக்கும் துறைப்பாடம், (மெயின் கோர்ஸ்) மூன்று வருடமும் உண்டு.
பள்ளிகளில் தமிழ் படித்த காரணத்தால் தமிழே பிடித்தமானதாய்
இருக்க நாங்கள் சிலர் மொழிப்பாடமாய் தமிழ் எடுத்தோம். சிலர் மதிப்பெண் முழுமையாக வாங்க ஹிந்தி, சமஸ்கிருதம்,
ஃப்ரெஞ்ச் எடுத்துப் படித்தார்கள். அப்போது சக்தி பெருமாள் தமிழ்த்துறைத்தலைவராக இருந்தார்.
பூ சொல்விளங்கும் பெருமாள் அவர்களின் கணவர். தொலைக்காட்சி எல்லாம் மிகப்பிரபலமாகி இருக்காத
சமயம் இவர்கள் பட்டிமன்றங்களில் மிகப்பிரபலமான ஜோடியாக விளங்கினார்கள். ஒரு முறை இவரிடம்
என்னுடைய கவியரங்கக் கவிதை ஒன்றை ( கல்லூரிகளுக்கிடையான நிகழ்ச்சியில் வாசிக்க ) இவரிடம்
காட்ட கல்லூரிக்கு எதிரில் இருந்த இவரது இல்லத்துக்குச் சென்றிருக்கிறேன்.