புதுக்கவிதை இயல்புகள்:- ( அசைன்மெண்டை கவிதையா எழுதி இருக்கேன். :)
12.3.84.
ச. தேனம்மை
இளம் அறிவியல்
வேதியல் இரண்டாமாண்டு.
முன்னுரை :-
புதுக்கவிதை புதியவர்களின்
சிந்தனையைப் ’புதுக்க விதை’
புதைக்கின்றது.
கருத்துக்களைக் காப்பியடித்துக்
கொண்டிருந்த காப்பி(ய)
நாயகர்களின் முகத்திரையைக்
கிழித்தது புதுக்கவிதை.
வார்த்தைகளைக் கோர்த்து
வாய்ச்சாலம் பண்ணுவதல்ல இது.
‘பொங்கிவரும் வலிமைமிக்க
உணர்ச்சிகளின் வெளிப்பாடுகள் அவை’
யாப்பினை அறிந்தும்
யாப்பினை மீறி வெளிப்படும்
கவிதா விலாசங்கள்.
கவிதா விசாலங்கள் இவை.
‘உள்ளுறை உவமை’யையும்
உவப்பக் கொண்டவை.
பரமவைரியைப்
பக்கதில் பார்த்தாற்போல்
பளிச்சென்று துப்பிக்
குற்றங்களைச் சாடுபவை.
ஜீவா பாரதி தாசன்கள்,
பாலா, நாமக்கல்லின்
கவிதா விலாசங்கள்.
கவிதா விசாலங்கள்.
