ஒருவனுக்கு பிரம்மா விஷ்ணு சிவன் ஆகிய மும்மூர்த்திகள் அஸ்திரம் கொடுத்தும் அதைக் கொண்டு அவன் ஜெயிக்கமுடியவில்லை. ஏனெனில் அவற்றை அவன் நல்லனவற்றுக்குப் பயன்படுத்தவில்லை. தீயோரை ஆதரிக்கப் பயன்படுத்தினான். அதனால் அவை செயலிழந்தன. மும்மூர்த்திகளிடம் அந்த அஸ்திரங்களைப் பெற்ற பெருமைக்குரியவன் அஸ்வத்தாமன். அவனைப் பற்றியும் அந்த அஸ்திரங்கள் பற்றியும் பார்ப்போம் குழந்தைகளே.
துரோணர் கிருபி ஆகியோரின் மைந்தர் அஸ்வத்தாமன். இவன் சிறுகுழந்தையாயிருந்தபோது மிகுந்த வறுமையில்தான் வளர்ந்துவந்தான். துரோணர் கௌரவர்கள் பாண்டவர்களின் ஆசியராக ஆனபின்தான் ஓரளவு செல்வச்செழிப்பை எட்ட முடிந்தது. அதிலும் துரோணர் பாண்டவர்களில் அர்ஜுனனுக்கு மட்டுமே கவனம் செலுத்தி எல்லா அஸ்திர சஸ்திரங்களையும் கற்றுக் கொடுத்து வந்தார்.
இருந்தும் தந்தையும் தனயனும் ஒருவர் மேல் ஒருவர் மிக்க பாசத்தோடுதான் வாழ்ந்து வந்தார்கள். ஏனெனில் துரோணர் பல்லாண்டுகள் சிவனை நோக்கித் தவம் செய்தபின் பிறந்த பிள்ளைதான் அஸ்வத்தாமன். எனவே அஸ்வத்தாமனுக்கு சிரஞ்சீவித்தன்மை வழங்கும்படி கேட்டதால் ஈசனும் அஸ்வத்தாமனுக்கு அமரத்தன்மை வழங்கினார். அதனால் அவருக்கு இறப்பு என்பதே கிடையாது.
