பகைவனுக்கும் அருளிய மெய்ப்பொருள் நாயனார்
தன் குடிமக்களுக்கு நன்னெறியின் எடுத்துக்காட்டாய் விளங்கி, பகைவரிடத்தும் அறநெறி தவறாத அரசர் ஒருவர் முற்காலத்தில் இருந்தார். அவர் சிவனடியார்களை எல்லாம் சிவத் திருவுருவாகவே எண்ணிப் போற்றிப் பூசித்தவர். அப்படிப்பட்டவரைத் தன் தவ வேடத்தால் ஏமாற்றினான் பகைவன் ஒருவன். அவனது திருவேடத்தை உண்மை என்று நம்பியது மட்டுமல்ல, அவன் அடுத்துக் கெடுத்தபோதும் அத்திருவேடத்துக்காகவே அவனை நமர் என்று கூறிக் காப்பாற்றினார் அவ்வரசர்.
சோழவள நாட்டிற்கும் தொண்டை நாட்டிற்கும் இடையில் அமைந்திருந்தது திருக்கோவிலூர் என்னும் ஊர். அதை ஆண்ட குறுநில மன்னர் மாபெரும் சிவபக்தர். சிவனையே மெய்ப்பொருள் என்று கருதியதால் அவர் மெய்ப்பொருள் நாயனார் என்றும் அழைக்கப்பட்டார். சிவாலயங்களில் ஆறுகால பூசைகளையும், விழாக்களையும் குறைவற நடத்தி வந்தார். சிவனடியார்கள் யார் வந்தாலும் அவர்களுக்கு வேண்டியதை எல்லாம் வாரி வாரி வழங்குவார்.
