பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் பார்த்திபன் கனவு ஆகியவற்றின் ரசிகை நான். அதே போல் முன்பே அலை ஓசை, தியாகபூமி, கள்வனின் காதலி, பொய்மான் கரடு, மோகினித் தீவு படித்திருந்தாலும் திரும்ப ஒரு முறை இப்போதும் ரசித்துப் படித்தேன். படித்ததில் பிடித்ததைப் பகிர்கிறேன்.
பொதுவாக கல்கியின் நாவல்களில் என்னைக் கவர்ந்த அம்சம் இயற்கை வர்ணனை. அதிலும் நீல உத்தரீயத்தைப் விரித்துப் போட்டதுபோல விரியும் கடல் என்னை மயக்கி இருக்கிறது. நிலவைப் பற்றிய வர்ணனைகளும் அப்படியே. பூக்கள் என்றால் அத்தனை விதமான பூக்களும் மலரும் , பறவைகள் என்றால் விதம் விதமான பறவைகளும் சிறகடித்துப் பறக்கும் எழுத்து அவருடையது.
சரித்திரக் கதைகளில் நம்முன் ராஜபாட்டைகளும் கோட்டை கொத்தளங்களும் விரிவது போல சுதந்திரப் போராட்டக் கதைகளில் யுத்தங்கள், படையெடுப்பு, அரசியல் நிலை, உலக அரசியல், அரசியல்தலைவர்களின் செயல்பாடுகளை விவரித்தல், பொருளாதாரம், அறிவியல், நடப்பு மக்களின் மனோபாவம், காந்தி மகான் போன்றோரிடம் பேரன்பு , மக்கள் புலம்பெயர்தல் பற்றிய துயரம் ஆகியன கதாபாத்திரங்களின் உரையாடல் வழி வெளிப்படும். சினிமாத்துறை என்றால் அது சம்பந்தமான தேவையான விஷயங்கள் அனைத்தும் இடம் பெறும். நடுநடுவே அருமையான இசைப்பாடல்கள் வேறு., அவற்றை எந்த எந்த ராகத்தில் பாடவேண்டும் என்று குறிப்புகளோடு இடம் பெற்றிருக்கும்.
அலை ஓசை
:-
சமூகநாவல் இது. அதிகம் சுதந்திரப் போராட்டத்தோடு சம்பந்தப்படுத்தி நிறைய விஷயங்கள் விவாதிக்கப்படுகின்றன. லலிதா, சீதா, தாரிணி, சௌந்திரராகவன், சூர்யா ஆகிய பாத்திரப் படைப்புகளின் பேச்சுக்களிலே அநேகமாகக் கதை நகர்கிறது. ஆண்கள் சிலகாலம் பழக நேர்ந்தாலும் அந்தப் பெண்ணிடம் கொள்ளும் நேசம் பட்டென்று வெளிப்படுகிறது . உதாரணமாக பட்டாபிராமன் சீதாவிடம் தனிமையில் பேசும் காட்சி, இதே போல சூர்யா சீதாவிடம், தாரிணியிடம் நேசம் கொள்வதும் அதன் பின் பாமாவை மணப்பதும் என அதிவேக ரயிலைப் போல விரைவுக் காட்சிகள் நாவல் எங்கும். சுதந்திரம் பெற்றுத் தந்த மகான்களின் பெருமையைப் பேசும் அதே கணம் வாழ்க்கையின் தத்துவ விசாரங்களையும் மனித மனத்தின் விகாரங்களையும் ஒருங்கே படைத்திருப்பது சிறப்பு. விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கும் குறிப்பிடப்படுகிறது. சீதாவின் வாழ்வியல் துயரில் நம் மனம் ஆழ்ந்தவுடன் சீதாவுக்கு மட்டும் கேட்கும் அலை ஓசை நம் காதுகளிலும் அடிப்பது விநோதம்.பம்பாயில் வளர்ந்துள்ள சீதா, டெல்லியில் வளர்ந்த தாரிணி, கல்கத்தாவுக்கு இவர்கள் பயணிப்பது , அவர்களது மொழிப் பரிச்சயம் என்று தமிழ்நாட்டு வாழ்க்கையையும் வட இந்திய வாழ்க்கையையும் ஊன்றிக் கவனித்து எழுதி இருக்கிறார். சுதந்திரப் போராட்டத்தின் ஒவ்வொரு விஷயத்தையும் நுண்மையாகக் கதையுள்ளே கொண்டுவந்துள்ள மாபெரும் நாவல் இது.
தியாக பூமி:-
சினிமாவாகவும் வந்திருக்கிறதாம். நிறை மனிதர் சம்பு சாஸ்த்ரிகளின் நல்மனமும் (பாபநாசம் சிவன் ) , அவரது மகள் சாவித்ரியின் துக்கமும், அவளது குழந்தை சாரு ( பேபி சரோஜா) வின் பாடல்களும் மனதை அசைப்பவை. மணமகனின் விருப்பமில்லாமலே செய்யப்பட்ட ஒரு விவாகத்தின் மூலம் அழகான குழந்தைக்குத் தாயாகும் சாவித்ரி படும் பாடுகளும், அதன் பின் சம்பு சாஸ்த்ரியும் சாருவும் சுதந்திரப் போராட்டத்துக்கான பாடல்கள் பாடியபடி செல்வதும், கடைசியில் சாவித்ரி பணக்காரி ஆவதும் ,அவளும் அவளது கணவன் ஸ்ரீதரனும் சுதந்திரப் போராட்டத்தில் ஒரே மனதோடு ஈடுபடுவதும் நெகிழ்ச்சி. மிக அருமையான கட்டுக்கோப்பான கதை இது. நெடுங்கரை சங்கர தீக்ஷிதர் என்ற எதிர்மறை மனிதர் ஒரு கேரக்டராக வருகிறார். மற்றபடி நேர்மறை சிந்தனைகள் கொண்ட சுதந்திரத்தின் மேலும் மகான்களின் மேலும் மிகவும் பரிவும் மரியாதையும் கொண்ட எழுத்துக்கள். வாசிக்க மட்டுமல்ல. வணங்கவும் வைத்தவை.
கள்வனின் காதலி:-
கைட் என்றொரு படம். இதில் அப்பாவி தேவ் ஆனந்தை டான் ஆக நடிக்க வைத்து அப்படி இன்னொருவர் இருக்கிறார் என நம்பவைத்து இவரை அவராக மாற்றுவார்கள். இந்த கதையில் முத்தையன் என்ற சாமான்ய இளைஞன் தன் சகோதரியுடன் கிராமம் விட்டு கிராமம் பிழைக்கச் செல்கிறான். அவன் தங்கையிடம் தவறாக நடந்த ஒரு தர்மகர்த்தா அவனை உசுப்பேற்றிக் கைதியாக்குகிறான். அதன் பின் முத்தையன் தப்பிப்பதும் அவன் செய்த சிலவும் அவன் செய்யாத பலவும் அவன் மேல் சுமத்தப்பட்டு மாபெரும் கொள்ளைக்காரன் ஆகிறான். அவனை விரும்பிய கல்யாணி நடைமுறை வாழ்க்கையில் அவன் இல்லாமல் இன்னொரு முதியவருக்கு வாழ்க்கைப்படுறாள். அவர் நோய்மையால் இறந்துவிட தனித்திருக்கும் அவள் வீட்டில் அவன் கொள்ளையடிக்க வருகிறான். அதன்பின் இருவரும் சந்திக்கிறார்கள். அவன்மேல் கொண்ட பேரன்பால் அவனுக்கு இன்னொரு தொடர்பு இருக்குமோ என்ற கோபத்தில் தன்னையறியாமல் அவன் இருக்கும் இடத்தைக் காவலரிடம் அவள் சொல்லிவிட மிச்சம் என்ன ஆகிறது என்பதுதான் கதை. முத்தையனின் இறப்புக்குப் பின்னும் நித்யமானது ப்ரேமை. காதல் ஒன்றுதான் அதைத் திருடமுடியாது என்று கூறி கள்வனின் காதலி ராதையைப் போலக் கடவுளின் காதலியாகிறாள். , தன் சொத்தை ஏழை எளியவர்களின் துயர் தீர்க்கப் பயன்படுத்தினாள் என முடித்திருப்பது மனித குலத்தின் பால் இந்தச் சமுதாயத்தின்பால் அவருக்கு இருந்த நேசத்தை வெளிப்படுத்தியது.
பொய்மான் கரடு:-
ஒரு பயணப் பொழுதில் ட்ரைவர் சொன்னதாகச் செல்லும் கதைப் போக்கு வித்யாசமாக இருந்தது. பொய்மான் கரடு உண்மையிலேயே இல்லாத, கண்ணுக்கு மட்டும் கானலைப் போலத் தெரியும் சம்பவங்களின் தொகுப்பு. செங்கோடக் கவுண்டனும் செம்பகவல்லியும் நம்மைக் கொள்ளை கொள்கிறார்கள். மோகமெனும் பொய்மானைத் துரத்தி செங்கோடன் மாட்டித் தவிக்க அதிலிருந்து எப்படித் தப்புகிறான், செம்பகவல்லியை மணக்கிறான் என்பதைச் சுவாரசியம் குன்றாமல் கொடுத்திருக்கிறார்.
மோகினித் தீவு :-
நண்பரான கவிராயர் சொல்வது போல அமைந்த கதை. உலக யுத்தத்தில் பர்மாவை விட்டு ஓடி வந்த மக்களின் துயரான வாழ்க்கை சொல்லப்படுகிறது. அவர்களின் புலம் பெயர்தலின் போது ஒரு கப்பலில் செல்ல நேர்கிறது. அப்போது ஒரு தீவின் பக்கம் ஒதுங்கும் கப்பலில் இருந்து அந்த நகரைக்காணச்சென்ற மனிதரிடம் இந்தக்கதையை நாயகன் சுகுமாரனும், நாயகி புவனமோகினியும் நிலவொளி அடர்ந்த இரவில் மோகினித்தீவில் ஒரு குன்றின் உச்சியில் அமர்ந்து விவரிக்கிறார்கள். நமக்கும் இரவின் பால்கிரணங்களில் அமர்ந்து கதை கேட்டதும் மோகினித் தீவுக்கே சென்ற இன்பலாகிரி உண்டாகிவிடுகிறது. மனைவிக்காக ராஜ்ஜியத்தையே ராஜன் விட்டுத்தர சுபமாக முடிகிறது. மிக அழகான கதை.
கதைகள் அனைத்திலும் வேறு வேறு களம். நல்லவற்றைச் சொல்லியே ஆகவேண்டும் என்ற சமூகப் பிரக்ஞையுள்ள கதைகள். எத்தனை முறை வேண்டுமானாலும் வாசிக்கலாம். நேர்த்தியான கதைகள். சினிமா, குறும்படம், சீரியல் எடுக்கத் தகுதியானவை. டைம் மெஷின் போல உலகம் விட்டு உலகம் கடத்தும் தன்மை வாய்ந்தவை. வாசிக்கும் நாம் அவரை, அவரின் விரிந்த நல் உணர்வுகளாய் சுவாசிக்கிறோம்., கல்கியின் நாவல்களில். அமரராகி அறுபது வருடங்களுக்குப் பின்னும் கல்கி இன்னும் தனது எழுத்துக்களில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார் என்பது திண்ணமான உண்மை !!!.
நூல் :- கல்கி நாவல்கள் ( வால்யூம் -2 )
ஆசிரியர் :- கல்கி
பதிப்பகம் :- எல்கேஎம் பப்ளிக்கேஷன்
பக்கம் :- 704.
விலை :- ரூ. 800 ( இரண்டு தொகுதிக்கும் சேர்த்து )

கல்கியின் எழுத்துக்களைப் படிப்பது அலாதி இன்பம்தான்
பதிலளிநீக்குநன்றி ஜெயக்குமார் சகோ
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!