எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 21 அக்டோபர், 2014

நுரைத்துப் பெருகும் அருவி. ( மலைகள் இதழ் )


கண்ணோரம் காக்கைக் கால்களாய்ச் சுருங்கி விரிந்து  கிடக்கின்றன காட்டு விருட்சங்கள்..

நுரைத்துக் கிடக்கும் அருவி பெருகி வீழ்கிறது அந்தரங்கம் திறந்த மனமாய். 

தவளைகள் முணுமுணுப்போது குதித்துச் செல்கின்றன கரையோரம்.

மினுமினுப்போடு  தாவித் தாவி நீந்திக் கொண்டிருக்கிறது நதி.

முங்கிக் குளித்துக் கொண்டிருந்தன கற்கள். கரையோரம் கிடந்தவை கால் நனைத்துக் கிடந்தன.

விருட்சங்கள் விருப்பத்தோடு கரை அணைத்துத் தழுவிக் கொடியாய்க் கிடந்தன.

அள்ளி அள்ளிச் சுழற்றிச் சென்றது நீரை நதி.... குழந்தையைக் கொஞ்சுவதாய்.

எச்சில் நுரையால் முத்தமிட்டபடியே சென்றன தாவரப் பாதங்களை.

ஆனந்த அதிர்ச்சியோடு நீர்ப்பாயைப் பரப்பி விட்டது அருவி. 



மலைக்குகை திரையணிந்து உள் அமர்ந்து இருந்தது..தும்பிக்கையாய் வீழும் நீரினை கையேந்தியபடி.

மடியேற்றிய இன்பத்தில் பள்ளமாகக் கிடந்தன பாறைகள் மயக்க லாகிரியில்

சுற்றியடித்தபடி. காடுகளையும் கற்களையும் கடந்து கம்பீரமாக ஓடிக் கொண்டிருந்தது ஆறு.

கொலுசணிந்த குழந்தையாய் சலங்கை அணிந்த நாட்டியக்காரியாய், சில இடங்களில் சங்கிலி அணிந்த யானையாய்த் திமிறிக் கொண்டிருந்தது.
கற்கள் உருட்டிய நதி மனிதம் கழுவிக் கரை சேர்ந்து கொண்டிருந்தது நதியாய் நெளிநெளி யாய் அலையாய் அலையலையாய், செதில் செதிலாய் தங்கமீனாய், வெள்ளி மீனாய் இரவிலும் பகலிலும்..

முகத்துவாரத்தில் மௌனமாய்க் கரையைக் கடந்து கடலுள் சங்கமித்துக்  கொண்டிருந்தது புயலாய் அடித்து ஓடிவந்த நதி.. உள்வாங்கி நுரைத்துப் பொங்கிக் கொண்டிருந்தது கடல்..
உப்பு நீர்த் தாவரங்களாய் அசைந்துகொண்டிருந்தன கப்பல்களும், படகுகளும்.

ஓசையற்று உலவிக் கொண்டிருந்தது உப்புக் காற்று.

ஓங்கி அடித்துக் கரை திரும்பத் துடித்துக் கொண்டிருந்தது கடல் சேர்ந்த நதி நீர்...
உப்பளத்தில் வெந்து உயர மேகமாகி மலையைப் புணரத் துவங்கி இருந்தது மழை..

கொஞ்சம் கொஞ்சமாய்ச் சேர்ந்து நதியாய்க் கிளைக்கத் தொடங்கியது..

சூரியக் கிளைகள் இருளுள் ஊடுருவ சத்தமில்லாமல் இறங்கத் தொடங்கியது அருவி .. நுரைத்துப் பெருகத் துவங்குகிறது திரும்பவும்.

டிஸ்கி:- மே 25, 2014 திண்ணையில் வெளிவந்தது. 

டிஸ்கி :- ஏப்ரல் 7. 2014 மலைகள் இதழில் வெளிவந்தது.

5 கருத்துகள்:

  1. சிறந்த பகிர்வு
    தங்களுக்கும்
    இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
    http://yppubs.blogspot.com/2014/10/blog-post_21.html

    பதிலளிநீக்கு
  2. அருமையான அருவியாய் கொட்டும் கவிதை! ரசித்தோம்! சகொதரி!

    பதிலளிநீக்கு
  3. எங்கல் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  4. நன்றி யாழ்பாவண்ணன் சகோ

    நன்றி துளசிதரன் சகோ

    உங்கள் இருவருக்கும் இனிய தீபத்திருநாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  5. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...