எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 9 செப்டம்பர், 2012

புழுவா.. புலியா.:

செங்கற்கள் வீடு கட்ட அடுத்த காம்பவுண்டில் வேலியற்று அடுக்கப்பட்டிருந்தன. வருடக்கணக்காய் பாழடைந்து கொண்டிருந்த அந்தச் செங்கல்கள் திடீரென ஒரு நாள் வீடு கட்ட முடிவு செய்யப்பட்டு இடம் மாற்றப்பட்டுக் கொண்டிருந்தன. செங்கல்கள் குவிக்கப்படுவதும் அடுக்கப்படுவதுமான சத்தத்தில் அது அடுக்கப்பட்டிருந்த பக்கத்தில் இருந்த ஒரு ஓட்டு வீட்டில் குடியிருந்த அம்மா தன் இரு பெண்களுடன் வந்து எங்கள் பக்கப் படிக்கட்டுக்களில் அமர்ந்து அந்தச் சித்தாள்களிடம் ஒரே விசாரணை. பூச்சி பொட்டெல்லாம் எங்க வீட்டுக்குள் வந்துடப் போகுது . பார்த்துப் பிரிங்கண்ணா என்று.


ஒரு சித்தாள் உடனே இப்போதுதான் இதுக்குள்ளே ஒரு பாம்பைப் பார்த்தோம் என்றார். அப்பிடியா உடனே அடிச்சிடுங்கண்ணா என்றார் பக்கத்து வீட்டுப் பெண்மணி. எவ்வளவு பெரிதாக அது இருந்தது என்று சித்தாளிடம் விசாரித்த போது தன் தொடையைக் காட்டி இவ்வளவு பெரிசு என்றார். பாம்பு என்றால் படையும் நடுங்கும்தானே. உடனே எங்கள் அனைவருக்கும் கிலி பிடித்துக் கொண்டது. இத்தனை நாள் பிரிக்காத செங்கல் அடுக்காக இருந்தபோது என்னென்ன பூச்சிகள் எல்லாம் இருந்ததோ என்று அடுத்துப் பேசத் துவங்கினோம்.

ண்கொத்திப் பாம்பாய் அந்தச் சித்தாள்கள் பிரித்து அடுக்கும் செங்கல்களைப் பார்வையிட்டபடி. அவர்கள் வீட்டில் இந்தப் பக்கம் இருக்கும் துளைகள் வழியாக அணில்களும் ஒரு முறை ஒரு எலியும் இன்னொரு முறை பறவைகள் கொத்தியபடியும் இருந்ததைப் பார்த்திருப்பதாகச் சொன்னேன். ஆமாம் எவ்வளவு வாடகை தருகிறீர்கள். ஓட்டை எல்லாம் வீட்டுக்காரரை அடைக்கச் சொல்லுங்கள் . என்று கூறியபோது அது சும்மாதான் இருக்கோம். அது ஒரு வக்கீலோட வீடு. யாருமில்லாமல் பாழாப் போயிடும்னு எங்களை இருக்கச் சொல்லி இருக்கார் என்றார்.!.

யாருமில்லாமம் பாழாய்ப் போவதை விட ஒரு குடும்பத்தை வைத்து காவலுக்குக்கான காசை மிச்சம் பிடித்து இருக்கிறார் அவர் எனத் தோன்றியது. இவர்களும் இலவசம்தானே எனக் குடி வந்திருக்கிறார்கள். மற்ற ஜந்துக்கள் எல்லாம் சகஜமாக இவர்கள் வீட்டுள் வந்து போக தற்போது பாம்பு மட்டும் கிலி ஏற்படுத்துவதாக இருந்திருக்கிறது. வளர்ப்புப் பிராணிகள், மற்ற பூச்சி பொட்டுக்கள், தோட்டத்துப் பூச்சிகள் என்றாலே அலர்ஜியான நமக்கு பாம்பு என்றால் எப்படி இருக்கும்.

ஒரு வேளை அவர்கள் பிரித்து அடுக்கும்போது பால்கனியில் நாம் வைத்து இருக்கும் அடைசல்களுக்குள் அவை புகுந்து விட்டால்.. வெளியே வைத்திருந்த ஷூக்களைப் பார்க்கக் கூட பயமாக இருந்தது. அன்று முழுவதும் காத்திருந்தும் பாம்பு எங்கள் கண்ணில் அகப்படவேயில்லை. ஒரு வேளை அந்த சித்தாளின் பிரமையாய் இருக்கலாம் என சமாதானப்படுத்திக் கொண்டு வந்து பாத்ரூமில் கை கால் கழுவலாம் என்று நுழைந்தால் நெளு நெளு என்று சுவற்றில் கிட்டத்தட்ட மினி பாம்பு சைஸில் ஒன்று.. உய்.. என்று ஒரே கூச்சல். பக்கத்து வீட்டு அம்மா வந்தாரோ இல்லையோ எங்கள் பில்டிங்கில் இருந்தவர்களெல்லாம் ( மாடியில் தானே இருக்கிறோம் நம்ம வீட்டுக்கு பாம்பு என்ன நடந்தோ ஊர்ந்தோ வரப் போகிறதா என்று எண்ணமிட்டவர்கள் போல எங்களைப் பகலில் பார்த்தவர்கள் எல்லாரும்) கீழே ஓடி வந்தார்கள்.

படங்களில் ரஜனி திக்குவது போலா பா... பா.. என்றும் மட்டுமே சொல்ல முடிந்தது. ம்பு என்று சொன்னால் கூட அது காதில் கேட்டு ஓடிப் போய் விடுமோ என்ற பயமோ அல்லது யாராவது உள்ளே தைரியமாக நுழைந்து அதை அடித்து விட்டால் தேவலாம் என்ற எண்ணமோ. ஒரு வேலைக்காரப் பெண் வந்தவள் பாத்ரூமில் நுழைந்து அக்கா இது என்ன மண்புழுவைப் பார்த்து எல்லாம் பாம்புன்னு கத்துறீங்க என்று ஒரு தென்னந்துடைப்பக் குச்சியால் அதை எடுத்து வந்து வெளியே போட்டாள். அட ஆமாம் இது மண்புழுதான். அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல அந்த ஓரடி நீள மண்புழுவைப் பாம்பாக எண்ணியதை நினைத்து வெட்கமாகிவிட்டது. இருந்தாலும் அந்தப் பாம்பு எங்கே ஒளிந்திருக்குமோ என்ற எண்ணம் வரும்போதெல்லாம் அடுத்து இருக்கும் தோட்டங்களுக்குள் ஒளிந்து உயிர் வாழச் சென்றிருக்கலாம் எனத் தோன்றுகிறது.

இதுபோல் புலி என நினைத்து நான் பயந்திருந்ததெல்லாம் ( ஒரு காலத்தில் நிஜப்புலிகளைத் தரிசித்த உணர்வில்) உள் ஒளிந்திருக்கும் பூனை என அறிய நேர்ந்ததில் சந்தோஷம் என்றாலும் நிஜப் புலிகள் எங்கே.. தாங்கள் தாக்கப்படாதவரை யாரையும் தாக்காமல் எங்கோ இருந்த அவை தங்கள் வாழ்வியல் ஆதாரங்களையும் தங்கள் உயிர்ப்பையும் தக்க வைத்துக் கொண்டனவா என்பதை அறிய ஏனோ ஆவல் மேலிட்டது.


6 கருத்துகள்:

  1. அருமை அக்கா.
    உண்மையா இல்லை கதையா...

    நல்லாயிருக்கு... கடைசிப் பாரா எதையோ உணர்த்திச் செல்கிறது.

    பதிலளிநீக்கு
  2. உண்மைதான்.நாம் பயப்படவேண்டிய பொருட்களும் நிறைய இருக்கிறார்கள்.
    இது புலி ,இது பூனை என்று யார் சொல்வது.அருமையான கதை தேன்.

    பதிலளிநீக்கு
  3. மனசுல பயம் வந்துட்டா பாம்புக்கும் பழுதுக்கும் வித்தியாசம் தெரியறதில்லைதான். அருமையான பகிர்வு.

    கடைசிப்பத்தி சரவெடி :-)

    பதிலளிநீக்கு
  4. மண்புழு ஒரு அடி நீளம் இருக்குமா? புது செய்தி.

    ஒருவேளை நிஜம்மாவே பாம்பப் பார்த்தா,மண்புழுன்னு அலட்சியமா இருந்துடக்கூடாதேன்னு பயம்ம்ம்ம்ம்மா இருக்கே!! :-)))))))

    பதிலளிநீக்கு
  5. நன்றி தொழிற்களம் குழு

    நன்றி குமார்

    நன்றி வல்லிசிம்ஹன்

    நன்றி சாரல்

    நன்றி ஹுசைனம்மா.. நிஜமா இருக்கு நான் பெங்களூருவில் பார்த்தேன். நல்ல மண் வளம் உள்ள ஊர் அது.

    பதிலளிநீக்கு
  6. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...