எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 16 ஜூலை, 2018

கல்வி வளர்ச்சி நாளில் விடுதலை வேந்தர்கள் வெளியீடு.

காரைக்குடி ராமனாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாள் விழா   பேர்ல் சங்கமம் ரோட்டரியின் தலைவர் திரு. நாவுக்கரசு அவர்கள் தலைமையில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் ஒரு அங்கமாக என்னுடைய ஏழாவது நூலான ( சிறார்களுக்கானது )  ”விடுதலை வேந்தர்கள்” வெளியிடப்பட்டது.  திரு பாகை கண்ணதாசன் அவர்கள் வெளியிட ரோட்டரியின் தலைவர் திரு. நாவுக்கரசு அவர்களும் ரோட்டரி கவர்னர் திரு. முத்துக்குமார் அவர்களும் பெற்றுக் கொண்டார்கள்.

இந்நிகழ்வில் ரோட்டரி சங்கத்தினரும்,  தலைவரும்,  பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் திரு சகாய அமலன் அவர்களும் வாழ்த்துரை நல்கினார்கள்.  பொற்கிழிக் கவிஞர் திரு நாகப்பன் அவர்களும், சுசேந்திரன் என்னும் மாணவன் ஒருவனும் கவிதையில்  வாழ்த்துரை நல்கினார்கள்.

தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கல்லூரியின் பேராசிரியரும் பட்டிமன்ற நடுவருமான  திரு பாகை கண்ணதாசன் அவர்கள் பெருந்தலைவர் காமராஜர் பற்றி சிறப்புரை நல்கினார்கள். திரு பாகை கண்ணதாசன் அவர்களின் பேச்சும் கவிஞர் திரு நாகப்பன் அவர்களின் கவிதையும் வெகு சிறப்பு. நினைவில் இருத்தியவற்றைப் பகிர்ந்துள்ளேன்.

திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் பரிசு பெற்ற மாணாக்கருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. விடுதலை வேந்தர்கள் நூலின் 25 பிரதிகளை பேர்ல் ரோட்டரி சங்கத்தலைவர் திரு. நாவுக்கரசு அவர்கள் வாங்கி அங்கேயே மாணவர்க்குப் பரிசளித்தார்கள். !

இவை அனைத்தும் கீழேயும் விரிவாகக் கொடுத்துள்ளேன்.
கல்விக்கண் திறந்த காமராஜருக்கு மரியாதை. மாணவக் கண்மணிகள் பூத்தூவி வணங்குகிறார்கள்.

வரவேற்புரை கூறி இந்நிகழ்வை  ஆசிரியை திருமதி கோமதி ஜெயம் அவர்கள் தொகுத்து வழங்கினார்கள்.
ஆறாம், ஏழாம் வகுப்பு மாணவர்கள் கலந்து கொண்ட இக்கூட்டம் மிக அமைதியாகவும் கட்டுக்கோப்பாகவும் நடைபெற்றது.  பேச்சாளர்களின் உரையைக் கவனித்து சரியான தருணத்தில் கைதட்டினார்கள். ஊன்றிக் கேட்டதுமல்லாமல் கேட்டவற்றுக்குத் தக்க பதில் சொல்லி அசரடித்தார்கள்.


தலைமை ஆசிரியர் திரு. பீட்டர் ராஜா அவர்கள் உரையாற்றினார்.
பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் திரு அமல சகாயன் உரையாற்றுகிறார்.
மாணவர் சுசேந்திரனின் கவிதை வாசிப்பு.
மாணாக்கியரின் நாட்டுப்புற பாடல் நடனம்.
எளியோருக்கும் கல்விக் கண் திறந்த கர்ம வீரர் காமராஜருக்குப் பூத்தூவி  மரியாதை செலுத்தினோம் அனைவரும்.


குழந்தைகளும் பூத்தூவி வணங்கினார்கள்.

மாணாக்கருக்குக் கல்வியின் முக்கியத்துவம் பற்றிக் கூறிய ரோட்டரி தலைவர் திரு நாவரசு அவர்கள் அங்கேயே 25 பிரதிகள் விடுதலை வேந்தர்களை வாங்கிப் பரிசளித்தார்.
ரோட்டரியின் சார்பாக விருந்தினருக்கும்  பள்ளியின் சார்பாக ரோட்டரி அங்கத்தினருக்கும் பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசு வழங்கினார்கள்.



திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் முதல் இரு இடங்கள் பெற்ற மாணவ மாணவியருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.





கவிஞர் நாகப்பன் பேசும்போது காமராஜரை  நாடார் அவர் புகழைநாடார் என்று சிலேடையாகக் கூறி சிலாகித்தார். மேலும் தமிழகம் முழுக்கக் கல்விக்கண் திறந்த காமராஜர் போல, தலைமை ஆசிரியர் திரு பீட்டர் ராஜா அவர்களை காரைக்குடிக்கு சிறப்பாகக் கல்வி அளித்தவர் என்பதால் காரைக்குடி காமராஜர் என்று சிறப்பித்துக் கூறினார். அவர் வந்தபின்பு அந்தப் பள்ளி பல்வேறு விதங்களிலும் முன்னேறி இருப்பதையும் பெருமை பெற்று விளங்குவதையும் கூறி இன்னும் பல்லாண்டுகள் சேவை செய்ய வாழ்த்தினார்.

பட்டிமன்றப் பேச்சாளர் திரு பாகை கண்ணதாசன் கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் தனது தெள்ளிய பேச்சால் அவையைக் கட்டிப் போட்டிருந்தார்,

காமராஜரின் வாழ்க்கையில் நடந்த பல்வேறு சம்பவங்களையும் சுவாரசியமாகக் கூறினார்.  எளிய மக்களும் படிக்க வேண்டி மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தவர் , கடைசி வரை சிக்கனமாகவே வாழ்ந்து சென்றவர், தான் கற்க வாய்ப்பு இல்லாவிட்டாலும் கல்வி சீட்டு வேண்டி கைநாட்டுப் போட்ட மகஜர்களில் அவர்களின் பிள்ளைகள் படிக்க வேண்டி இட ஒதுக்கீடு கொடுத்தவர் என்று அவரது பல்வேறு பரிமாணங்களைப் பாராட்டினார்.

இல்லத்தில் இருந்தவரை மோஹன்தாஸ், காமராஜ் என்று  வெறும் பேரோடு இருந்தவர்கள் இல்லம் விட்டு உலக சேவைக்கு வந்ததும் மகாத்மா, அண்ணல், பெருந்தலைவர் என்று பேர் பெற்றதைக் குறிப்பிட்டார்.

தந்தையையும் தாயையையும் பிரியத்தோடு மதிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். பாசத்தோடு தழுவிக் கொள்பவள் தாய் என்றும், நம்மை இவ்வுலகத்துக்குத் தந்தவர் தந்தை என்றும் கூறியவிதம் சிறப்பு.

அவ்வப்போது இசைப்பாடல்களும், திருக்குறளும் , மேற்கோள்களும் கூறி கூட்டத்தை கலகலப்பாக வைத்தார். கம்பராமாயணப் பாடல்களைக் கூறும்போது இசை நயத்தோடு இருப்பதாகக் கூறி இரு பாடல்களைப் பாடிக்காண்பித்தார். சங்கத்தமிழும் புகுந்து விளையாடியது அவ்வப்போது.

பிரம்மச்சாரியாக வாழ்ந்து நாட்டு சேவைக்குத் தம்மை அர்ப்பணம் செய்தவர்களைப் ( வாஜ்பாய், கலாம், காமராஜர் )  பற்றிச் சிறப்பித்துக் கூறினார். குழந்தைகள் மனதில் பசுமரத்தாணிபோல் இவரது பேச்சு பதிந்திருக்கும்.

தாம் பேசும்போதெல்லாம் பதில் கூறி வந்த ஒர்  சிறப்பு மாணக்கனை  பேச்சுப் போட்டிக்குத் தயார் செய்யும்படிக் கூறினார். தலைமைப் பண்பு, ஆளுமைப்பண்பை வளர்த்துக் கொள்ளவேண்டியது பற்றியும் போதித்தார்.

வந்திருந்த அனைவரையும் அவ்வப்போது பாராட்டிக்கூறி சபையோர் அனைவரையும் அந்த முக்கால் மணி நேரமும் தனது பேச்சால் கட்டிப் போட்டிருந்தார்.

மேலும் எனது நூலினை வெளியிடும்முன் ஒரு க்ளான்ஸ் பார்த்த அவர் அதில் கர்நாடகா, மத்யப் ப்ரதேசத்தின் வீராங்கனைகளான கிட்டூர் சென்னம்மா, அவந்திபாய், அப்பக்கா தேவியைக் குறிப்பிட்டு விட்டு நமது தமிழகத்தின் வீராங்கனையான வேலு நாச்சியாரைக் குறிப்பிடவில்லையோவென நினைத்துப் புரட்டிப் பார்த்ததாகச் சொன்னவர் ”அவரும் இந்த நூலில் இருக்கிறார், யாரையும் விட்டுவிடாமல் இருக்கிறீர்கள். நம் சுதந்திர சரித்திரம் அவர்கள் எல்லாம் இல்லாமல் எழுதப்பட முடியாது” என்று பாராட்டினார்.

நூல்களை வாசிப்பதன் அவசியத்தைக் கூறினார். புத்தகம் புதுப்பிக்கும் என்ற செய்தியைச் சொன்னார். மிகச் சிறப்பான பேச்சு இவருடையது.

இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக அமர்ந்திருந்த மாணவர்கள்.

இவ்விழாவின் ஒரு அங்கமாக எனது விடுதலை வேந்தர்கள் நூல் வெளியிடப்பட்டது.

திரு பாகை கண்ணதாசன் அவர்கள் வெளியிட காரைக்குடி பேர்ல் சங்கமம் ரோட்டரி சங்கத்தின் தலைவர் திரு . நாவரசு அவர்களும், கவர்னர் திரு. முத்துக்குமார் அவர்களும் பெற்றுக் கொண்டார்கள்.




மிகச் சிறப்பாகக் கவனித்துப் பதில் கூறிய மாணவனுக்கு ரோட்டரி சார்பாக பொன்னாடை போர்த்தினார்கள். நாங்களும் புத்தகம் ஒன்றைக் கொடுத்து மகிழ்ந்தோம்.

கல்வி வளர்ச்சி நாள் விழாவில் காமராஜர் நினைவில் தோய்ந்து வந்தது மிக மகிழ்ச்சி அளித்தது.



கோகுலத்தில் பன்னிரெண்டு வாரங்கள் தொடராக வந்த இக்கட்டுரைகளைத் தொகுத்து நூலாக்கம் செய்து அதை கல்கி குழும நிறுவனர் , நாட்டு விடுதலைக்காக இருமுறை சிறைக்குச் சென்ற திரு கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்குச் சமர்ப்பித்துள்ளேன். மன நிறைவு அளித்த நூல் இது. நன்றி அனைவருக்கும்.

கல்வி வளர்ச்சித் திருநாளில் தங்கள் பள்ளியில்  சிறார்களுக்கான இந்நூலை வெளியிடக் களம் அமைத்து சிறப்பாக வெளியிட்டமைக்கு என்னுடைய மனமார்ந்த அன்பும் நன்றிகளும்  தலைமை ஆசிரியை திரு பீட்டர் ராஜா சார் அவர்களுக்கும் திருமதி கோமதி ஜெயம் மேம் அவர்களுக்கும். ! இப்பள்ளிக்கு சென்ற ஆண்டே என்னை அறிமுகம் செய்த காரைக்குடி நலந்தா புத்தக நிலையத்தின் திரு நலந்தா செம்புலிங்கம் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...