எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 24 அக்டோபர், 2014

பேரன்பின் அருணாசல ஐயாவுக்கு நூற்றாண்டு விழா.

எங்கள் அன்பு ஐயா.
அம்மா என்றால் அன்பு என்றோரு பாடல் உண்டு ஆனால் எங்களுக்கோ எங்கள் அப்பத்தாவீட்டு  (அருணாசல) ஐயா என்றால் அன்பு.  பொங்கும் கருணையும் அன்பையும் எங்கள் ஐயாவின் கண்வழியேதான் பார்க்கவேண்டும்.



ஒருவருக்குக் கடிதம் எழுதவேண்டும் என்றால் எங்கள் ஐயா எங்களை எழுதச் சொல்லும்போது “ எனது பேரன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய “ என்றுதான் எழுதத் தொடங்கச் சொல்லுவார்கள். 

மிக அரிதான சமயங்களில் அவர்கள் தன் கைப்பட எனக்கு எழுதிய கடிதங்களை பொக்கிஷமாக லாக்கரில்  வங்கி லாக்கரில் வைத்துள்ளேன். ஆறுதலும் தேறுதலும் தன்னம்பிக்கையையும் தரும் கடிதங்கள் அவை.

என்றும் தலை கோதிவிடும் லாகவமாய் அன்பாய் அவர்கள் பேசும் வார்த்தைகளும் எழுதும் வார்த்தைகளும் இருக்கும்.

///கோதுதல்..:-
*******************
ஒரு தூக்கம் வரும்போது
ஒரு சோகத்தை விழுங்கும் போது
ஒரு கோபத்திலிருந்து விடுபட
ஒரு துக்கத்தை வெளியேற்ற
தேவையாய் இருக்கிறது
தலை கோதுதல்.

தாத்தாவின் முடியடர்ந்த
மார்பில் படுத்தபடி
கதை கேட்டு உச்சுக்கொட்டி
முகம் பார்த்து மல்லாந்திருக்க
தலை கோதும் அவர் கைக்குள்
சுருண்டு வருகிறது
மந்திரக் கோலால்
தொட்டதுபோல் தூக்கம்.

படிப்பு மந்தமோ.,
திருமண பந்தமோ
பார்வையாலே கோதி
தாத்தா வருடும்போது
ஒரு சமரசம் வருகிறது
ஜெயித்து விடுவோமென.

நல்லெண்ணையும் சீயக்காயும்
தாத்தாவின் தலைப்பக்கம்
தொட்டுவைத்துத் திரும்பும் போது
துக்கம் கோதுகிறது
தொண்டையை.
கேவலாய் வெளிப்பட்டு.

தங்கம் உரசி நாவிலிட்டு
பெயரிட்டு அள்ளிக் கொண்டவர்
திரும்பப்போவதில்லை
எத்தனை முறை கூவினாலும்.
பயணப்பட்டுக் கொண்டிருந்தார்
கேளாச் செவியும் பாராமுகமுமாய்
பச்சை ஓலையில்..

அலமாரி லாக்கரைத்
திறக்கும் போதெல்லாம்
மறைந்த தாத்தா
சந்தனப் பாக்கெட்டுகளோடு
வார்த்தைகளால் கோதியபடி
இருந்தார் பாதுகாத்து
வைத்திருந்த பழைய கடிதங்களில்..

டிஸ்கி:- இந்தக் கவிதை 14.8.2011 கல்கியில் வெளிவந்துள்ளது:)///
இந்தக் கவிதை 2012 ஜூன் மாத குங்குமத்திலும் வெளிவந்தது..  :)

அவர்கள் நினைவில் எழுதியது இக்கவிதை. கல்கி, குங்குமம் ஆகிய இரு இதழ்களிலும் வெளிவந்தது சிறப்பு. 

அவர்களைப் பற்றிச் சொல்ல ஆயிரம் உண்டு. ஆனால் இங்கே இடம் பத்தாது . மேலும் நான் மட்டுமல்ல. எங்கள் குடும்ப உறுப்பினர் அனைவருக்குமே அவர்களைப் பற்றிச் சொல்லப் பல விஷயங்கள் உண்டு. அனைத்தும் மனம் சார்ந்தது என்பதால் இங்கே பகிரவில்லை.

என்றென்றும் எங்களுக்கு அன்பும் பாசமும் தவிர வேறொன்றும் தந்தறியாத எங்கள் அன்பின் ஐயாவுக்கு ( இன்று இருந்திருந்தால் ) இந்த அக்டோபர் 25 ஆம் நூறு வயது.

அவர்கள் 80 ஆவது பிறந்த தின நாளில் பிள்ளையார்பட்டியில் நடந்த சதாபிஷேகத்தில் காப்பியக் கவிஞர் நா. மீனவர் அவர்கள் வாசித்துஅளித்த வாழ்த்து மடல். 

1975 இல் சாந்தியும் ( சஷ்டியப்த பூர்த்தி ), 1996 ஜனவரியில் சதாபிஷேகமும் ( 80 வது பிறந்த நாள் -- ஆயிரம் பிறை கண்ட நாள் ) கொண்டாடினார்கள். இப்போது இருந்திருந்தால் கனகாபிஷேகம் ( 100 பிறந்தநாள் ) கொண்டாடி இருக்கலாம். எங்களுக்குக் கொடுத்து வைக்கவில்லை. எங்கள் தெய்வத் திரு ஐயாவின் பிறந்தநாளைப் பத்ரிக்கைகளிலும், வலைத்தளத்திலும் முகநூலிலும் கொண்டாடி மகிழ்கிறோம். என்றும் என்றென்றும் எங்கள் உடனிருங்கள் ஐயா , வழி நடத்துங்கள் ஐயா. உங்கள் அன்பை என்றென்றும் நாடும் பேரன் பேத்தியர் உங்கள் பொற்பாதங்களில் எங்கள் இதயப் பூவை சமர்ப்பிக்கிறோம்.

இறைவன் பாதத்தில் ஒரு இணையற்ற இடத்தில்தான் தாங்கள் உறைந்திருப்பீர்கள். உள்ளும் புறமும் உறையும் அன்பில் அந்த இறைவனையே கலந்திருப்பீர்கள் ஐயா.

மங்காத புகழோடு இதேபோல் இறையருளில் உறைந்து  வாழ்க வளமுடன், நலமுடன், பல்லாண்டு.


13 கருத்துகள்:

  1. என்றுமே மனதைவிட்டகலாத நினைவுகள். இறுதிவரைக்கும் இருந்துகிட்டே இருக்கும். மனதைதொட்ட கவிதை வரிகள். வணங்குகிறேன் நானும்.ஐயாவின் அன்பும் ஆசியும் உங்களுக்கு எப்போதும் இருக்கும்.

    பதிலளிநீக்கு
  2. ஐயாவை பற்றிய கவிதை நெஞ்சை நெகிழ வைத்து விட்டது.
    ஐயாவின் ஆசிகள் என்றும் குடும்பத்தினர்களை வழி நடத்தும் தேனம்மை.

    பதிலளிநீக்கு
  3. சிறந்த பதிவு
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  4. நன்றி ப்ரியசகி

    நன்றிகோமதி மேம்

    நன்றி யாழ்பாவண்ணன் சகோ

    பதிலளிநீக்கு
  5. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  6. கண்களில் கருணையும்
    பேச்சினில் பரிவும்
    உரிமையுடன் உறவையும்
    கொண்டிருந்த அம்மான்

    பதிலளிநீக்கு
  7. அழகான வார்த்தைகளுக்கு நன்றி ராமு மாமா.

    பதிலளிநீக்கு
  8. ///கோதுதல்..:- என்பது ஒரு மிகச்சிறந்த அன்பின் வெளிப்பாடு. அதனை இயல்பாக உங்கள் கவிதா சொல்கிறது ///கோதுதல்..: உணர்ந்தவற்கே, அனுபவ பூர்வமாகத் தெரியும். நன்று, தங்கள் நடை நன்று. அப்பத்தா ஆயா அய்யா அம்மாக்களே இந்த சுகமான உணர்வை தர முடியும். வாழ்க . அன்புடன்
    சோமலே

    பதிலளிநீக்கு
  9. முத்து சபா - உங்களுக்கு முத்து சபாரத்தினம் ஆச்சி யை தெரியுமா அவர் கீழ்க்கண்ட ஆயாள் வீட்டின் காயா நினைவுகள்: கவிதை யை வெகு சிறப்பாக ஆக்கியுள்ளார் :

    ஆயாள் வீட்டின் காயா நினைவுகள்

    புள்ளி மான்போல்
    துள்ளி விளையாண்ட
    கொல்லை வாசல்
    குவித்திடும் நினைவுகள்
    முற்றம் முழுதும்
    மெத்தை விரித்த
    முருங்கைப் பூக்கள்
    பருப்புப் போட்ட
    பக்குவத் துவட்டல்
    ஆயாள் கையால்
    இருப்புச் சட்டியில்
    இன்னிசை பாடும்!
    இன்றும் நினைத்தால்
    எச்சில் ஊறும்!!
    கொட்டில் மாடும்
    கத்தும் கன்றும்
    எட்டாத் தொலைவில்
    இருக்குது இன்று!
    அவரைப் பந்தல்
    அதற்கொரு சங்கு
    அதிகாலை எழுந்து
    ஆயாள் ஊதும்
    அழகே நன்று!
    மோரில் குளித்து
    தடுக்கில் தவழ்ந்து
    வெயிலில் காயும்
    மிளகாய்கள்!
    வத்தல் போட்ட
    மூக்கு மாங்காய்
    வாரித் தின்றபின்
    வலிக்கும் வயிறு
    வளவில் ஆடிட
    வாகான ஊஞ்சல்
    அளவில்லாத
    ஆனந்தம் கூடும்!
    வங்காள அண்டாவில்
    வந்துவிழும் மழைத்தண்ணி
    தூப்பாயை அடைத்துவைத்து
    துணிதுவைக்க நீர்கட்டி
    மழைபேஞ்சா வளவோடு
    வாருங்கோல் விளையாடும்!
    பளபளக்கும் பட்டாலைப்
    பட்டியக் கல் அழகும்!
    பர்மாப்பாய் விரித்த அழகும்
    பார்த்தாலே மனம்நிறையும்!
    சிறுகுறும்பு செய்கின்ற
    சின்னக் குழந்தைகூட
    பொட்டிமேசை முன்னாலே
    வட்டிக் கணக்கெழுதி
    அட்டணக்கால் போட்டு
    அசையாமல் நிமிர்ந்திருக்கும்
    வீரப்ப அம்மானின்
    விழிகண்டால் வாய்பொத்தும்!
    அடுக்கடுக்காய் அதிரேசம்
    மனகோலம் மாவுருண்டை
    எடுக்க எடுக்கக் குறையாத
    எண்ணில்லாத பலகாரங்கள்
    எறும்புக்கு வேலியிட்டு
    விளக்கெண்ணெய்த் துணிசுற்றிய
    வெண்கலப் பானையில்!
    ஓட்டில் வறுத்துத்
    திருகையில் திரித்த
    வேங்கரிசி மாவு!
    அரிசிமாவில் அதிசயம் காட்டும்
    மொறுமொறுப்பான
    ஜிலேபி முறுக்குகள்
    பாசியில் பின்னிய
    ஓவியம் காட்டும்
    ஓலைக் கொட்டான்
    சித்திரை வெயிலின்
    சிந்தும் வியர்வையில்
    சத்தகம் கையில்
    சதிராடி நின்று
    பொத்திய பொட்டிகள்!
    குத்திய புளிகள்!!
    வண்ணம் பின்னிய
    பாய்கள் தடுக்குகள்!
    வளவளப்பான
    வாருங்கோல்கள்!!
    ஆயாள் கைவண்ணம்
    அழகாய் மின்னும்!
    சின்ன அம்மான்
    சிரித்த முகம்போல்
    விரித்த இலையில்
    விளையும் அன்னம்!
    பெரிய அம்மான்
    பெண்டிர் கையால்
    பிசைந்து ஊட்டும்
    அரிய நினைவுகள்
    அமுதக் காட்சிகள்!
    சர்க்கரைக் கரைசலில்
    சத்து மாவுடன்
    தட்டானின் தங்கம்போல்
    கொட்டானில் தேங்குழலுடன்
    மூணரை மணிக்கு
    தினமும் காப்பி!
    நாலரை மணிக்கு
    நற்சிவன் கோவில்!
    ஏழரை மணிக்கு
    இரவு உணவுபின் இனியநித்திரை!
    காலைமுதலாய் இரவுவரையில்
    வேலைகள் எல்லாம் விதிப்படி நடக்கும்!
    ஆயாள்வீட்டின் அழகியநினைவுகள்!
    காயாநினைவுகள் கட்டும் நினைவுகள்!
    -திருமதி . முத்து சபாரத்தினம் ஆச்சி

    யார் இவர் ? தெரிந்தால் அறிமுகம் தாருங்கள். அன்புடன்
    சோமலே - ஈமெயில். somle@nagarathar.net

    பதிலளிநீக்கு
  10. சும்மாவின் அம்மாவாகிய நான் எழுதியது இந்தக்கவிதை திரு சோமலே அவர்களே.

    தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி.


    பதிலளிநீக்கு
  11. அய்யாவை வாழ்த்த முடியாது ஆனால் நூறாண்டு காணும் அய்யாவின் நினைவை எண்ணி வணங்குவோம்

    பதிலளிநீக்கு
  12. நன்றி சோமலே அவர்களே

    நன்றி கவியாழி கண்ணதாசன் சார்

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...