ஒருவர் தன் வாழ்க்கையில் நிறைய உதவி செய்தவர்களை நினைத்து ”உங்களுக்கு மனசுக்குள்ள கோயில் கட்டிக் கும்பிடுறேன்” என்று புகழாரமாகச் சொல்வார்கள். நிஜமாகவே மனசுக்குள் கோவில் கட்டினார் ஒருவர். அதுவும் மாபெரும் ராஜா ஒருத்தர் கஷ்டப்பட்டுக் கட்டின நிஜக்கோயிலுக்குக் கூடப் போகாமல் அன்பாலே அமைந்த இந்த ஆலயத்துலதான் முதல்ல எழுந்தருள்வேன். ராஜாவே கட்டினதா இருந்தாலும் எல்லாம் அடுத்தபடிதான்னு சிவனே கனவுல சொன்னாராம். அது என்னன்னு பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
காஞ்சி மாநகரம். கைலாசநாதருக்காகக் கற்றளியில் மாபெரும் கோவில் அமைத்துக் கொண்டிருந்தான் மன்னன் காடவர்கோன். பார்ப்பவர் அனைவரும் வியக்கும் வண்ணம் மாபெரும் யாளிகளும் சிம்மங்களும் நந்திகளும், யானைகளும் கொண்டதாக உருப்பெற்றுக் கொண்டிருந்தது அந்தக் கோவில். அதன் கொடுங்கைகள் எல்லாம் கல்லாலே அமைக்கப்பட்டு பார்ப்பவர்க்கு அதுதான் உண்மையான கைலாயமோ என்று மயக்கம் ஏற்படும் அளவுக்கு இருந்தது.
அதே சமயம் தொண்டை நாட்டில் திருநின்றவூர் என்ற ஊரில் வாழ்ந்து வந்த பூசலார் என்ற எளியவர் இறைவனுக்குக் கோயில் கட்ட விரும்பினார். ஆனால் அவரிடம் அதற்கேற்ற பொருள் வசதி இல்லை. ஆனால் மனதிலேயே கோவிலுக்குத் தேவையான கற்கள், மரம் ஆகியன இருப்பதாக எண்ணி பூமி பூஜை செய்து திருக்கோயில் கட்டும் பணியை ஆரம்பித்தார்.




