எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 18 நவம்பர், 2016

பேரனுண்டா.. பேரன் பிறந்திருக்கிறானே.

481.* பெண்பிள்ளை புஷ்பவதி ( பூப்பெய்துதல் , பெரிய பெண்ணாக ஆதல் ) ஆனால் பேரனுண்டா அல்லது பேரன் பிறந்திருக்கிறானே எனக் கேட்பார்கள். ஏனெனில் சமைதல் என்பது  பெண் தனது குழந்தையை ( அம்மா அப்பாவுக்கு ஒரு பேரனை)ச் சுமக்கும் அளவு உடல் பக்குவம் அடைந்திருக்கிறாள் என்பதைச் சொல்லவே இவ்வாறு குறிக்கப்பட்டது. மங்கள நீராட்டு என்று ஏதும் செய்ய மாட்டார்கள் .

சமைந்தது தெரிந்ததும் எண்ணெய் சீகைக்காய் தேய்த்துத் தலை குளிக்க வைத்து கோலமிட்ட இடத்தில் தடுக்குப் போட்டு அமரவைத்து கீரை விதை கொடுத்து தண்ணீரோடு விழுங்கச் சொல்வார்கள்.தலை வாழை இலையில் பருப்பு மசித்துப் பாயாசத்தோடு சாப்பாடு போடுவார்கள்.

ஆனால் பதினாறு நாள் தினமும் அதிகாலையில் பச்சை முட்டை, அதே அளவு நல்லெண்ணெய், குடிக்கச் சொல்வார்கள்.  ( பாசிப்பருப்பு +பச்சரிசி +கருப்பட்டி, வெல்லம்+ நல்லெண்ணெய்+ நெய்யில் செய்த ) கும்மாயம்,  தினம் ஒரு பலகாரம் செய்து கொடுப்பார்கள். இடுப்பு பலம் பெற எண்ணெய்க் குளியல் உண்டு.  கீரை, நெய், காய்கறி , பயறு வகை, காய்கறி/அசைவ சூப்பிகள், அசைவம் சார்ந்த சத்துள்ள உணவு வகைகள் கொடுக்கப்படும்.

அதன் பின் 486,*மிட்டாய்த்தட்டு/சடங்குத்தட்டு வைத்தல் என ஒன்று வைத்து உறவினர் பங்காளிகளை அழைப்பார்கள். வீட்டில் சமுக்காளம் விரிக்கப்பட்டிருக்கும். பொதுவாக முதலில் 487.*குங்குமம் சந்தனம் அடங்கிய ஸ்டாண்டில் கண்ணாடி பதித்த வெள்ளித் தட்டு ஒன்று இருக்கும். சடங்கு கேட்க வந்தவர்கள் சந்தனம் குங்குமம் இட்டுக் கொள்வார்கள்.

அதன் பின் ஆறு அல்லது நான்கு தொன்னைகள் கொண்ட வெள்ளி மிட்டாய் ஸ்டாண்டில் பிஸ்கட்கள், வேஃபர்ஸ் , வெளிநாட்டு சாக்லெட்டுகள், தேங்காய் மிட்டாய், கல்கண்டு, இன்னபிற இனிப்புகள் இருக்கும், இவற்றையும் வந்தவர்கள் எடுத்துக் கொள்வார்கள்.

அதன் பின் 488.*கலர்/பனீர் லெமன் சோடா/காளிமார்க் பானம்/ரசனா/டாங்க்/ஃப்ரூட்டி/ஆப்பி/இன்னபிற கூல்ட்ரிங்க்/காஃபி/டீ இன்னபிற பானங்கள் அருந்தி விட்டு வெள்ளி வெற்றிலைத் தட்டில் வைக்கப்பட்டிருக்கும் வெற்றிலை பாக்கைப் போட்டுக் கொள்வார்கள். 

அவ மக 489.*சமைஞ்சிட்டாளா இல்லாட்டி பேத்தி சமைஞ்சிட்டாளா என்று பேச்சு வழக்கில் கேட்பதுண்டு. வீட்டுக்கு வருபவர்கள் 490.*பேரனுண்டா அல்லது பேரன் பிறந்திருக்கிறானே எனக் கேட்பார்கள்.

சடங்கு கழித்தல் :- பதினாறாம் நாள் சடங்கு கழிப்பார்கள்.நடுவீட்டுக் கோலமிட்ட இடத்தில் தடுக்குப் போட்டுப் பெண்ணை நிற்கவைத்து 482 *நொச்சி இலையில் சுட்ட அடையைத் தலை, தோள்பட்டை, மடித்துக்கூட்டிய முழங்கை, பாதங்கள் ஆகிய ஏழு இடங்களில் வைத்து வேப்பந்தழையால் அல்லது குச்சியால் தட்டி அத்தை சடங்கு கழிப்பார்கள். அன்றைக்கு 483.*சடங்குக்கு 484.*பங்காளிகள்,  485.* தாயாதிகள்- தாயபிள்ளைகளுக்கு சடங்குக்கு வடிப்பார்கள். சைவ, அசைவப் பந்திகள் தனித்தனியாக இருக்கும்.

தற்போது கொஞ்சம் கொஞ்சமாக அருகிவரும் சீர் செனத்தி முறைகளை ஆவணப்படுத்தவே இவற்றை உறவினர் இல்லத் திருமணங்களிலும் சடங்கு இல்லங்களிலும் படம் பிடித்தேன்.

குழந்தை பிறந்தால், பேத்தி சமைந்தால், திருமணத்தின் போது பெண்ணுக்கு,மாமியாருக்கு, மாப்பிள்ளைக்கு என சாமான்கள் பரப்புவது வழக்கம். சாமான்களை அடுக்கி வைப்பதை 491*சாமான் பரப்புதல் என்று சொல்வார்கள். அவற்றில் சில இங்கே உங்கள் பார்வைக்கு.
ஒரு உறவினரின் பேத்தி சமைந்தபோது எடுத்தது. நகைகள், புடவை, வெள்ளிச் சாமான்கள், பிள்ளையார்.
$93*முறைக்குக் கொடுக்கும் பழங்கள்.
இது ஒரு திருமணத்தில் 493.*பெண்ணுக்குப் பரப்பிய சாமான்கள்.

வியாழன், 17 நவம்பர், 2016

பாம்பின் கண். ஒரு பார்வை. ( THE EYE OF THE SERPANT )



பாம்பின் கண். ஒரு பார்வை.


தியடோர் பாஸ்கரன் அவர்கள் 1997 இல் ஆங்கிலத்தில் எழுதிய திரைப்படத்துறை பற்றிய நூல் THE EYE OF THE SERPANT. இது 97 ஆம் ஆண்டின் சிறந்த நூலுக்கான இந்தியக் குடியரசுத் தலைவரின் தங்கத்தாமரை (SWARNA KAMAL) தேசிய விருது பெற்றது.  இது கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளுக்குப் பின் கிழக்குப் பதிப்பகத்தின் மொழிபெயர்ப்பாக வெளிவந்துள்ளது. மொழிபெயர்ப்பு நூல் என்றே தெரியாத அளவு சரளமாக மொழி பெயர்த்திருப்பவர் திரு லதானந்த் அவர்கள்.

புதன், 16 நவம்பர், 2016

எனப்படுவது எனது பார்வையில் :-



எனப்படுவது எனது பார்வையில் :-

எனப்படுவது

எனப்படுவது என்றொரு தலைப்பை இதற்கு முன் கேட்டதில்லை. எனவே இதை டிஸ்கவரியில் வாங்கினேன். கிட்டத்தட்ட ஒரு வருடமாக குங்குமத்தில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பே எனப்படுவது.

அது என்ன எனப்படுவது..? கண்ணாடி எனப்படுவது, தற்கொலை எனப்படுவது, சபதம் எனப்படுவது, தண்டனை எனப்படுவது, சிறை எனப்படுவது, கடிதம் எனப்படுவது, கடத்தல் எனப்படுவது, வளர்ப்புப் பிராணி எனப்படுவது, தூது எனப்படுவது என்று சற்றேறக்குறைய 38 தலைப்புக்களில் உள்ள கட்டுரைகள் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன. பொருட்கள் உணர்வுகள் செயல்கள் என எல்லையற்று விரிந்த என்சைக்ளோபீடியாவே இந்தப் புத்தகம் என இதைப் பதிப்பாசிரியர் கூறி இருக்கிறார்.

செவ்வாய், 15 நவம்பர், 2016

இன்னுமொரு நான் - எனது பார்வையில்..



இன்னுமொரு நான் எனது பார்வையில்..


இன்னுமொரு நான்

வார்த்தைகளின் நர்த்தனக்காரி ராஜாமகளின் இன்னுமொரு நான் படித்தேன். படித் தேன் ருசித் தேன். முகநூலில் நிலைத்தகவல்களிலேயே ஓரிரு வார்த்தைகளில் கலக்கி வருபவர் நான் ராஜாமகள் என்னும் தேன்மொழி என்னும் தேனு ( இன்னுமொரு தேனக்கா J ). பெண்குரலாய் ஒலிக்கும் இக்கவிதைத் தொகுப்பைத் தன் தாய் கோதைநாயகி அம்மாவுக்கு  சமர்ப்பணம் செய்திருப்பது மிகப்பொருத்தமே.

Related Posts Plugin for WordPress, Blogger...