எந்தச் செயலைச் செய்வதற்கும், “உன்னால் முடியும் தம்பி” என்று ஒருவர் சொன்னால் அதை நம்ப வேண்டும் அப்படித் தன் மறந்து போன திறமையை ஒருவர் ஞாபகப்படுத்தியவுடன் தன்னால் முடியும் என்று விண்ணிலே பறந்த ஒருவரைப் பற்றிப் பார்க்கப் போகிறோம் குழந்தைகளே.
கேசரி அஞ்சனை ஆகியோருக்கு வாயுபுத்திரரின் அருளால் பிறந்தவர் ஹனுமன். இவர் சிறு வயதில் மிகுந்த சுட்டிக் குழந்தையாய் இருந்தார். ஒருமுறை தாய் ஏதோ வேலையாக இருக்கும்போது இவருக்குப் பசி எடுத்துவிட வானில் தோன்றிய சூரியனைப் சிவப்புப்பழம் என நினைத்துத் தாவிப் பிடிக்கப் போனார். அதைக் கண்டு பதறிப்போன இந்திரன் சின்னக் குழந்தையான அனுமனைத் தாடையில் அடிக்க அவர் மயக்கமுற்று விழுந்தார்.
இதனால் வாயு பகவான் கோபப்பட்டுத் தன் இயக்கத்தை நிறுத்த அனைத்து உயிர்களும் காற்றில்லாமல் தவித்தன. உடனே சூரியன் முதலான தேவர்கள் அனுமனை மயக்கம் தெளிவித்துப் பல்வேறு வரங்கள் வழங்கினார்கள். அணிமா மஹிமா லகிமா ஆகிய சித்திகளும், காற்றில் பறக்கும் சக்தியும் பெற்றார் அனுமன்.
