எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 5 ஏப்ரல், 2023

5.டிஸ்மெனோரியா ஏன் ஏற்படுகிறது ?

5.டிஸ்மெனோரியா ஏன் ஏற்படுகிறது ?


பூப்படையும் பதின் பருவத்தில் ஒவ்வொரு இளம்பெண்ணும் அனுபவிக்கும் முதல் துயரம் டிஸ்மெனோரியா. அடிவயிற்றிலும் தொப்புளைச் சுற்றிலும் ஏற்படும் தாங்கொணா வலி டிஸ்மெனோரியா எனப்படுகிறது. பல்வேறு வயதிலும் தொடரும் இதற்குப் பல்வேறு காரணங்களும் உண்டு. இவற்றை எப்படி எதிர்கொள்வது என்பதையும் பார்ப்போம்.

முதல் காரணம் எண்டோமெட்ரியத்திலிருந்து இரத்தம் வெளியேறி ஆனால் அது பெண்ணுறுப்பிலிருந்து வெளியேறாமல் உள்ளே தங்கிவிடுவதும் பின் தேங்கித் தேங்கிக் கட்டிகளாக வெளியேறுவதுமே இந்த டிஸ்மெனோரியா என்ற வலி மிகுந்த மாதவிடாய். சில வளரிளம் பெண்களுக்குத் தொடர்ந்து ஆறு மாதங்களோ அதற்கும் மேலோ இந்த வலி தொடர்ந்து வந்து அதன் பின்புதான் பூப்பெய்துவார்கள். பூப்பெய்தியபின் ஒவ்வொரு மாதமும் எட்டு முதல் பத்து நாட்கள் வரை கடுமையான வலியோடு ரத்தக் கட்டிகளுடன் கூடிய ரத்தப்போக்கு ஏற்படும்.

சாதாரணமாக மாதவிலக்கு சுழற்சி என்பது 28 நாட்களுக்கு ஒருமுறை ஏற்படும், அதுவும் மூன்று முதல் ஐந்து அல்லது எட்டு நாட்கள் வரை நீடித்துப் பின் குறையும். இதுவே சரியான சுழற்சி. ஆனால் டிஸ்மெனோரியாவில் இது 28 நாட்களுக்கு முன்பேயும் ஏற்படும் மற்றும் வலியுடன் எட்டுநாட்களுக்கு மேலும் தொடரும். இதனால் அதிக இரத்த இழப்புடன் இரத்த சோகை, ஹீமோக்ளோபின் எண்ணிக்கை குறைதல், சோர்வு, அசதி, மயக்கம், ஆகியன ஏற்படும்.  

டிஸ்மெனோரியாவை இரண்டு வகைகளாகப் பிரிக்கிறார்கள். இது முதன்மை நிலை டிஸ்மெனோரியா மற்றும் இரண்டாம் நிலை டிஸ்மெனோரியா என இரண்டு வகைப்படும். இரண்டுமே மகளிரின் அன்றாடச் செயல்பாடுகளை முடக்கக் கூடிய வலி மிகுந்த காலங்கள்.

பூப்படைந்தவுடன் வளர் இளம் பருவத்தில் ஏற்படுவது முதல் நிலை டிஸ்மெனோரியா. இதில் வலியுடன் தொடரும் மாதவிடாயின் போது இரத்தம் கட்டிகளாகவும் அதிக அளவிலும் வயிற்றில் வலியுடனும் வெளியேறும். மாதவிடாய்க்குச் சில தினங்கள் முன்பே இடுப்பு, அடிவயிறு, கால்கள், தொடை ஆகியனவற்றில் வலி ஏற்படும். மாதவிடாய் நின்றவுடன் வலியும் நின்றுவிடும். திருமணமானவுடன் அநேகப் பெண்களுக்கு இந்த வலியும் நின்றுவிடும். இவ்விளம் பெண்கள் கர்ப்பம் தரித்துக் குழந்தை பெற்றவுடன் ஏற்படும் மாதவிலக்கு முந்தைய மாதவிடாய்களைப் போல வலியுடன் இராது.

இந்த முதன்மை டிஸ்மெனோரியா பரம்பரை வாகின் காரணமாக ஏற்படலாம். அநேகமாக அவ்வப்போது உதிரக் கட்டிகள் வெளியேறும் சமயங்களில் எல்லாம் அதிகம் வலி தோன்றிப் பின்னர் மட்டுப்படும். நாள் முழுதும் நீடித்தால் இதை ஸ்பாஸ்மோட்டிக் வலி என்கிறார்கள். அடிவயிற்றின் மடிப்புகளில் ( எண்டோமெட்ரியம்) இரத்தம் தேங்கி வெளியேறுவதால் இப்படி ஆகிறது. மலச்சிக்கலாலும் இது அதிகமாகலாம். இதனால் தொடை மற்றும் கீழ்முதுகு எலும்பில் வலி ஏற்படும். இதற்கு வெந்நீர்ப்பை ஒத்தடம், வெந்நீர்க் குளியல், தொப்புளைச் சுற்றிலும், அடிவயிற்றிலும் நல்லெண்ணெய் தடவி மசாஜ் செய்தால் வலி குறையும். இதற்கு ஆண்டிஸ்பாஸ்மோடிக், இப்யூப்ரூபென் மாத்திரைகள் நிவாரணம் தரும். உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதும் மன உறுதியைக் கைக்கொள்ளவும் பயிற்றுவிக்க வேண்டும்.


இரண்டாம் நிலை டிஸ்மெனோரியா அதிக இரத்தப்போக்குடன் கூடிய வலி மிகுந்த மாதவிடாயுடன் இடுப்புத் தொற்று. இது இரண்டு மூன்று குழந்தைகள் பெற்றவர்களுக்கும் ஏற்படும். கருப்பைக்கு வெளிப்புறம் அமைந்த எண்டோமெட்ரிய மடிப்புகள், இவற்றிலிருந்து பெருகும் உதிரப் போக்கு, காயம், மற்றும் வலி, நார்த்திசுக்கட்டிகள், இரத்தம் உறைதல், கருப்பையின் புறத்தோல் கருப்பையின் உள்தசையில் வளரும் நிலை, இதனால் கருப்பை பெரிதாகி வலி எடுக்கும், இடுப்பு அழற்சி நோய், கருப்பையில் தொடங்கி பிற இனப்பெருக்க உறுப்புக்களுக்குப் பரவும் பாக்டீரியாவால் ஏற்படும் தொற்று, கருப்பை வாய் சுருங்குதல், அல்லது கருப்பையின் உள்ளேயோ, வெளியிலோ அல்லது அதன் திறப்பிலோ நார்த்திசுக்கட்டிகள் ஏற்படுவது, சினைப்பை நீர்க் கட்டிகள், கர்ப்பப்பை கசடுகள், கர்ப்பப்பையில் காப்பர் டி பொறுத்துவது போன்றவற்றாலும் இது ஏற்படுகிறது.

இவ்வாறு அடிக்கடி மாதவிடாய் ஏற்படுவது, அதிக இரத்தப் போக்குடன் அது நீண்ட காலம் தொடர்வது, இரு மாதவிடாய்களுக்கு நடுவில் ரத்தப் போக்கு ஏற்படுவது, இடுப்பு, அடிவயிறு, தொடை, மற்றும் கால்களில் அதிக வலி ஏற்படுவது, மார்பக வலி மற்றும் கட்டிகள், சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் ஏற்படுதல், உடலுறவுக்குப் பின் பிறப்புறுப்பில் ரத்தப் போக்கு ஏற்படுதல், வலி மிகுந்த உடலுறவு, பெண் உறுப்பில் அரிப்பு, வீக்கம், கட்டி, சிவந்திருத்தல், அசாதாரண இரத்தம் மற்றும் பல நிறத்துடன் கூடிய வெள்ளைப் போக்குக் கண்டால் மகளிர் மருத்துவரின் ஆலோசனை பெறவேண்டும்.

சிலசமயம் இது பிறப்புறுப்பு பாலியல் நோய் அறிகுறிகளாலும், கர்ப்பப்பை வாய் புற்றுநோயாலும் கூட ஏற்படும். மாதவிடாயைத் தள்ளிப்போடும் மாத்திரைகள் உண்பதாலும் வலியுடன் கூடிய மாதவிடாய் ஏற்படும். சிலருக்குச் சில கர்ப்பத்தடை முறைகள், மற்றும் டாம்பூன் உபயோகிப்பது போன்றவற்றாலும் இவ்வலி ஏற்படலாம். தீட்டு நிற்கும் மெனோபாஸ் நிலையிலும் அதிக இரத்தப் போக்கும் இடுப்பிலும் வயிற்றிலும் உள்தொடையிலும் அதிக வலியும் ஏற்படும்.

102 டிகிரி காய்ச்சல், வாந்தி, வயிற்றோட்டம், கிறுகிறுப்பு, மயக்கம், பிறப்புறுப்பு சிவந்து தடித்துப் போதல் ஆகியன இருந்தால் இது டாக்ஸிக்  ஷாக் சிண்ட்ரோம் எனப்படுகிறது. இதற்கு மருத்துவரின் உதவியை நாடினால் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனிங், லேப்ரோஸ்கோப்பிக் சிகிச்சை தரப்படுகிறது.

மாதவிடாய் காலத்தில் அந்தந்த பருவ காலங்களில் கிடைக்கும் பழங்களைச் சாப்பிடக் கொடுங்கள். பழங்கள் புத்துணர்ச்சியூட்டவும், நீரேற்றமாக வைத்திருக்கவும் உதவும். பச்சை காய்கறிகள் மற்றும் கீரைகளில் அதிக அளவில் மெக்னீசியம் மற்றும் வைட்டமின் கே போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலியைக் குறைக்க உதவுகின்றன.  மாதவிடாய் வலியைக் குறைக்க ஒரு நாளைக்கு இரண்டு முறை சூடான இஞ்சி டீயை அருந்தலாம். இது வலி மிகுந்த வயிற்றுத் தசைப்பிடிப்புகளைக் குறைக்க உதவும். கிருமி நாசினியாக விளங்கும் மஞ்சளில் அதிக அளவில் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் உள்ளன. அவை, வயிற்று வலியைக் குறைக்க உதவும். புரதம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்த பருப்புகள் மற்றும் பீன்ஸ் வகைகளை மாதவிடாய் சமயத்தில் எடுத்துக் கொள்வதன் மூலம், அந்த சமயத்தில் ஏற்படும் இரத்த இழப்பு ஈடு செய்யப்படும். புரதமானது மாதவிடாய் கால ரத்தப்போக்கினால் ஏற்படும் சோர்வை நீக்கி, உடலுக்கு வலு சேர்க்கும்.

இனிப்பு, வெல்லம், எள், அன்னாசி, பப்பாளி ஆகியவை இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தும் எனவே தவிர்ப்பது நலம். 
கட்டாயமாக உடல் உறவு கொள்ளக் கூடாது. ஏனெனில் இதனால் கருப்பையில் கழிவு அதிகமாகும். எனவே இரத்தப் போக்கும் அதிகமாகும். மேலும் கருப்பைச் சுவர்கள் நோய்பீடித்துப் பலவீனமாகும். ஆண்களுக்கும் ஜன்னி உண்டாகலாம்.

இதற்கு உண்ணக்கூடிய உணவு வாழைப்பூ பால் கூட்டு. வாழைப்பூ - பாதி ( உள்ளிருக்கும் தளிர் பகுதி), துவரம் பருப்பு /பாசிப்பருப்பு - 50 கி, பெரிய வெங்காயம் - 1 பொடியாக அரியவும், பச்சை மிளகாய் - 1 இரண்டாக வகிரவும், சாம்பார் பொடி - 1/4 டீஸ்பூன், கருவேப்பிலை - 1 இணுக்கு, எண்ணெய் - 1 டீஸ்பூன், கடுகு - 1 டீஸ்பூன், உளுந்து - 1 டீஸ்பூன், தேங்காய்ப் பால் அல்லது பால் - 1/4 கப். செய்முறை:- வாழைப்பூவின் நரம்புகளை எடுத்துவிட்டுப் பொடியாக நறுக்கவும். துவரம் பருப்பு அல்லது பாசிப்பருப்பை வேக வைக்கவும். அதில் வாழைப்பூ, வெங்காயம், பச்சை மிளகாய், சாம்பார் பொடி போட்டு தேவையான தண்ணீர் ஊற்றி மென்மையாகும் வரை வேக வைக்கவும். உப்பு சேர்த்து இன்னும் இரு நிமிடங்கள் வேக விடவும். எண்ணெயில் கடுகு, உளுந்து, கருவேப்பிலை தாளித்துக் கொட்டவும். தேங்காய்ப் பால் அல்லது பாலைச் சேர்த்து சூடாக வத்தக்குழம்பு சாதத்தோடு பரிமாறவும்.

பொதுவாக இவ்வலி மாதவிடாய்க்கு முன்பே ஆரம்பித்து மூன்று நான்கு நாட்களில் முடிந்துவிட்டால் பயப்பட வேண்டாம். இது இயற்கையானதுதான். ரெகுலராக எக்ஸர்சைஸ் செய்தால் மாதவிடாய் வலி ஏற்படாது. ஓய்வு தேவை. காஃபி, மது, புகைத்தல் வேண்டாம். யோகா, வெந்நீர்ப்பை ஒத்தடம், மசாஜ், அக்குபஞ்சர், அக்குப்ரஷர் சிகிச்சைகள், சுவாசப்பயிற்சி, ஓய்வு, மற்றும் சமச்சீர் சத்துக்கள் அடங்கிய உணவால் குணப்படுத்தலாம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...