பேசும் புதிய சக்தி
புதிதான ஒரு நூல் வாசிக்கக் கிடைத்தது. நூல் விமர்சனம் என்பதையே பத்ரிக்கைகள் வாரத்தில் ஒருநாள் பு(து)த்தகம், புதுவரவு என்ற பெயர்களில் செய்துகொண்டிருக்க இந்நூலோ நிறைய நூல் விமர்சனங்களோடு வந்திருந்தது வியப்பு.
ஏனெனில் நூல் விமர்சனம் எழுதுபவரை எல்லாம் யாரும் இலக்கியவாதிகள் லிஸ்டில் வைத்துக் கொள்வதில்லை. அவர் மொக்கை விமர்சகர், இவர் கறாரான விமர்சகர் என்ற தனி அந்தஸ்து கொடுத்து விலக்கி வைத்துவிடுவார்கள்.
நா. விச்வநாதனின் வெங்கட்சாமிநாதன் என்னும் கட்டுரை அவரது அறியாத கோணங்களையும் அறியத் தந்தது. சோலை சுந்தரப் பெருமாளின் செந்நெல் , தகழி சிவசங்கரன் பிள்ளையின் இரண்டுபடி ஆகிய நூல்களை ஒப்புநோக்கி ஒடுக்கப்பட்டோரின் அவலங்களை எடுத்துரைக்கும் கட்டுரையும் சா. கந்தசாமியின் பரிசுகளும் விருதுகளும் ஏன் ஏளனம் செய்யப்படுகின்றன என்ற கட்டுரையும் அப்படியே.
நவீன சந்தைக் கலாச்சாரமும் பெண் பாலியலும் சமூகக் கட்டமைப்பில் பெண்ணுக்கான இடம் இன்னும் உயர்வடையாததை எடுத்துக்காட்டுகளோடு சுட்டுகிறது.
அறிவர் அசித்தர் ( அகரச் சித்தர் ) என்பாருடன் உள்ள நேர்காணல் சிந்திக்கத்தக்கது. உடல்கூறை நோக்கி மருந்து உண்ணச் சொல்கிறார். சித்தர் மருத்துவம், ஓகக்கலை, வர்மம், தமிழரின் வீரக்கலைகள் , உடலியல், உணவியல் ஆகியவற்றில் நிபுணத்துவம் வாய்ந்தவர். பேட்டியின் மொழியிலும் அடர்ந்த இலக்கிய பாணி வித்யாசம். சுரண்டல் வணிகத்தைச் சாடி இருக்கிறார். இவர் பேட்டியே 14 பக்கங்கள் !!
ஜீனத், மு. சாதிக், வசந்த தீபன், சீ. குறிஞ்சிச் செல்வன், வாசகன் வெங்கடேசன் ஆகியோரின் கவிதைகளும் வெளியாகி இருக்கின்றன.
கிருத்திகாவின் ”தினக்கூலி” சிறுகதை ரயில்வே போர்ட்டரின் அவலங்களைச் சொல்லியது. சோ. சுப்புராஜின் ”கால்கள் மட்டும்” சினிமாவுக்கு நடிக்க ஓடிவந்தவர்களில் ஒருத்தி பற்றிய கதை. மனுஷ்யன் என்று கல்யாணராமன் எழுதி இருக்கும் கதை ஆன்மீகிகளின் மறைவொழுக்கங்களை வெளிப்படுத்தும் நையாண்டிக்கதை.
ஆண் எழுத்து + பெண் எழுத்து = ஆபெண் எழுத்து என்ற ரமேஷ் பிரேதனின் கட்டுரை ஒரே மொழியை வெவ்வேறு இலக்கணத்தில் பேசுவது பற்றியும் ஆண் பெண்ணுக்கும் ஆபெண்ணுக்குமான இடைவெளி, நீட்சி, ஈர்ப்புவிசை, திணை மயக்கம், மைத்ரி நிலை, படைப்பாற்றல், பால் நிலை, அல் இருப்பு, கடவுள் பாவனை பற்றி விரிவாகப் பேசுகிறது.
தக்கோலம், செப்பேடுகள், மன்னர்கள், ஸ்தூபிகள், நடுகற்கள் ( நாகக்கல், வீரக்கல், சதிக்கல், நவகண்டம் ) பற்றி ஜி. பத்மலெக்ஷ்மியின் கட்டுரை நாகக் கல் மூலம் டி என் ஏ ஆர் என் ஏ பற்றியும் விரிவாக அலசுகிறது.
முடிவாக சுளுந்தீ பற்றிய சா. தேவதாசின் விமர்சனம், அக்கம்மாவின் கொலுசுச் சத்தம் பற்றி எஸ். செந்தில்குமாரின் விமர்சனம், ராக்கெட் தாதா பற்றிய தேவரசிகனின் விமர்சனம், நூல் அறிமுகமாக, நீர் நகரும் பூ, கண்ணாடிச் சில்லுகள் ஆகிய கவிதைத் தொகுப்புகள் பற்றியும், அலரி என்னும் சிறுகதைத் தொகுப்பு பற்றியும், இந்தியா ஒளிரும் என்ற கட்டுரைத் தொகுப்பு பற்றியும் விரிவாக வெளியிட்டுள்ளது. மொத்தத்தில் ஏழு நூல்கள் பற்றிய விமர்சனமும் அறிமுகமும் இந்நூலில் நான் பார்த்து வியந்த விஷயம்.
நூல் அறிமுகங்களையும், விமர்சனங்களையும் தொலைக்காட்சிகளே அரிதாகத்தான் செய்கின்றன. வெகுஜன இதழ்களோ இரண்டு வார்த்தையில் முடித்துவிடுகின்றன. ஆனால் இந்நூல் பக்கம் பக்கமாக கரவு செறிவாக விமர்சித்திருப்பதற்கு ஒரு சபாஷ்.
நூல் :- பேசும் புதிய சக்தி ( மாதாந்திரி )
ஆசிரியர்:- கவிதா ஜெயகாந்தன்
விலை :-ரூ 30/-

சிறப்பான விமர்சனம்
பதிலளிநீக்குசிறந்த அறிமுகம்
பதிலளிநீக்குநன்றி கௌசி
பதிலளிநீக்குநன்றி யாழ்பாவண்ணன் சகோ
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!
நல்ல இலக்கிய இதழை பரிந்துரை செய்தமைக்கு நன்றி. பணி தொடர
பதிலளிநீக்குவாழ்த்துகள்