எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 24 ஜூன், 2012

விளிம்புநிலை மனிதர்களின் விடிவெள்ளி . இளங்கோவன் பாலகிருஷ்ணன்.

எல்லாரும் தங்கள் தொழில், வளமை, வாழ்க்கை இதைப்பற்றி மட்டுமே எண்ணும்போது மத்திய அரசின் உயர் பதவியில் இருக்கும் இளங்கோவன் பாலகிருஷ்ணன் மட்டும் மாத்தி யோசித்திருக்கிறார். தன் வீடு, தன் மனைவி, தன் மக்கள் என்பதெல்லாம் தாண்டி ஒருவர் சிந்திக்கவும் பாடுபடவும் அடிப்படையிலேயே சேவை மனப்பான்மை இருந்தால்தான் முடியும்.


புரட்சிகரமான எண்ணங்களுக்குச் சொந்தக்காரரான இவர் கல்லூரிக் காலத்திலேயே ஆனந்த விகடனின் மாணவ நிருபராக இணைந்து, மிகச்சிறந்த மாணவப் பத்திரிக்கையாளராக விகடனால் தேர்ந்தெடுக்கப்பட்டார். கல்லூரியில் பத்திரிக்கைத்துறை விரிவுரையாளராகவும் சில காலம் பணியாற்றினார். உலகம் விரிவுபட விரிவுபட இவர் பார்த்த மக்களின் துயரங்களைத் துடைக்க நீண்டன இவரின் கைகள். விளிம்பு நிலை மக்களின் அவலங்கள், சமூகத்தில் அவர்களின் நிலை எல்லாம் பார்த்து அவர்களின் நிலையை அனைவரும் புரிந்து கொள்ளுமாறு சில ஆவணப்படங்கள் எடுத்துள்ளார்.

 ”சமூகச்சிக்கல்களையே எனது படைப்புகளுக்கு களமாய் கொள்கிறேன். குறிப்பாக மற்றவர்கள் கையில் எடுக்கக் கூச்சப்படும் நியாயமான தளங்களில் உழைப்பது எனக்கு விருப்பமானது”- என்கிறார் தனது படைப்புகள் பற்றிப் பேசும் போது.

அந்த வகையில் முக்கியமானது, ”ஆராயா தீர்ப்பு” எனப்படும் குற்றப்பரம்பரையினர் பற்றிய ஆவணப்படம். ஆங்கிலேயர் காலத்தில், அவர்களை வீரத்துடன் எதிர்த்த விளிம்பு நிலை மக்கள் கூட்டங்கள், பரம்பரையாய் குற்றம் செய்யக்கூடியவர்கள் என்று முத்திரை குத்தப்பட்டனர். சுதந்திரம் அடைந்த பின்னரும் கூட அவர்களில் சில இனக்குழுக்கள் தொடர்ந்து திருட்டுத்தொழிலுக்குப் போக வேண்டிய அவல நிலையில் இருப்பது பற்றிய ஆவணப்படம் இது.

 மற்றும் மூன்றாம் பாலினமாக அது, இது என சமூகத்தால் அழைக்கப்படும் திருநங்கைகள் பற்றி “அஃறிணைகள்” என்ற ஆவணப்படமும். விளிம்பு நிலை மனிதர்களின் பிரச்சனைகளை யாரும் அவர்கள் கோணத்தில் அணுகுவதில்லை. அவர்கள் பிரச்சனைகளை அவர்களே உணர்ந்தும் அதை நீக்கிக் கொள்ள சரியான வழிமுறைகள் கிடைப்பதில்லை என்பதை இவர் தன்னுடைய ஆவணப் படங்களில் பதிவு செய்வதோடு மட்டுமல்ல. எல்லா இடங்களுக்கும் தன்னுடைய கருத்து சென்று சேருமாறு செய்து அதற்கு உண்டான சமூகப்பலன்கள் பெறுவதிலும் முனைகிறார். இப்படி ஒரு பிரச்சனையை அவர்கள் எதிர்கொள்ளுகிறார்கள் இந்த சமூகத்திலிருந்து என அவரின் அஃறிணைகள் பார்த்தபின் திருநங்கைகள் மீதான என்னுடைய கண்ணோட்டமே மாறிவிட்டது.

மனிதர்களின் மனங்களில் நல்லனவற்றைப் பதித்துச் செல்லும் இந்த முயற்சியில் இவரின் துணைவியார் கீதா இளங்கோவனும் கைகோர்த்து துணையாய் வந்து இவரின் காரியம் யாவிலும் கைகொடுத்திருக்கிறார். இருவரின் முயற்சிகளும் வெல்லட்டும். இன்னும் பலருக்கு விடியட்டும் பொழுது.

டிஸ்கி:- இந்த அறிமுகம் ஏப்ரல் 1 - 15 , 2012 இன் அண்ட் அவுட் சென்னையில் வெளியானது. 

5 கருத்துகள்:

  1. முகநூலில் பத்தோடு பதினொன்றாக இருந்துவிடும் நண்பர்களில் இவரை இவராக எனக்கு அறிமுகம் செய்த பதிவு...வாழ்த்துகக்ள் நன்றி..

    பதிலளிநீக்கு
  2. பழக இனிமையானவர். எப்போதும் சிரிப்புடன் இருக்கவேண்டும் என்பது இவரது ஆவல். எனக்கு FB-மூலமாக அறிமுகமானவர்.

    பதிலளிநீக்கு
  3. நல்ல மனிதரைப் பற்றிய ஒரு பகிர்வு.
    வாழ்த்துக்கள் அக்கா.

    பதிலளிநீக்கு
  4. நன்றி முத்துக்குமார்

    நன்றி கோபால்

    நன்றி குமார்

    பதிலளிநீக்கு
  5. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...