எந்தக் காலத்திலும் நீதியைத் தம்பக்கம் வளைத்துவிடலாம் என்பது பணம் படைத்தவர்களின் எண்ணமாய் இருக்கிறது. ஆனால் எவ்வளவு பணம் படைத்தாலும் தெய்வத்தை வளைக்க முடியாது அது உண்மையையே தாங்கிப் பிடிக்கும். ஒரு வைர வாணிகன் தன் செல்வாக்கால் உண்மையைத் திசை திருப்பப் பார்த்தான். அவனுக்கு எதிராக சாட்சி சொல்லி உண்மையை நிலைநாட்டியது நாளி என்ற காளி தெய்வம். அது பற்றிப் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
கடலும் அலையும் கைகோர்த்துத் திரியும் இடம் புகார் நகரம். கடற்துறைமுகத்தில் மரக்கலங்கள் அணிவகுத்து நிற்கின்றன. அவற்றில் ஒன்று நவகோடி நாராயணன் என்ற வைர வியாபாரி உடையது. இவர்தான் வைர வாணிகன் வளையாபதி என்றும் அழைக்கப்பட்டார். அவர் வீட்டில் செல்வம் மலைபோல் குவிந்திருந்தது. வீடு நிறைய உறவினர்களும் அவர்களுக்குப் பணிபுரிய வேலையாட்களும் நிரம்பி இருப்பார்கள்.
நவகோடி நாராயணன் மிகுந்த சிவபக்தி கொண்டவர். நாள்தோறும் சிவனைப் பூசித்துத்தான் தன் வேலையைத் தொடங்குவார். நவரத்தினங்களும் வைரமும் விற்றுத் திரைகடல் ஓடித் திரவியம் சேர்த்து வந்தார்.
