அமர்க்களம் அஜித்குமார்
“பிள்ளையார் பட்டி ஹீரோ நீதாம்பா கணேசா நீ கருணை வைச்சா நானும் ஹீரோப்பா” என்று பாடிய அஜித் இன்று தமிழ் சினிமாவின் உச்சபட்ச இரட்டையர்களில் ஒருவர்!. எந்தப் பின்புலமும் இல்லாமல் தன் நடிப்பால் மட்டுமே உயர்ந்தவர். தல தளபதி என ரசிகர்களுக்குள் போட்டி இருந்தாலும் முன் போல அது நடிகர் திலகம், மக்கள் திலகம் போட்டி அல்ல. இருவருமே பக்கா கமர்ஷியல் ஹீரோக்கள்.
கச்சிதமான வடிவம். திருத்தமான முகம், சமயங்களில் சீரியஸ் லுக், பெரும்பாலும் சாக்லேட் பாய் புன்னகை, சில சமயம் கோப முகம். எப்போதும் லூஸ் ஃபிட்டிங்காக ஒரு உடை. மாதவன், அரவிந்தசாமி போன்ற ஹேண்ட்சம் தோற்றம். ஆனால் அவர்கள் பெறாத வீச்சை இவர் பெற்றார். சினிமாவுக்கு வரும்முகமாக இரு விளம்பரங்களில் நடித்திருந்தாலும் சினிமாவில் பிரபலமான பின் விளம்பரப் படங்களைத் தவிர்த்தவர் இவர்.
ஜனா படத்தில் வந்த தீபாவளி, தல தீபாவளி என்ற பாடலா அல்லது ஆசையில் வந்த கொஞ்சநாள் பொறு தலைவா பாடலா எனத் தெரியவில்லை இவரைத் தல ரேஞ்சுக்கு உயர்த்தியது. இவரைத் தலஎன்றும்,அல்டிமேட் ஸ்டார் என்றும் ஏகே என்றும், அதிரடி நாயகன் என்றும் ரசிகர்கள் அழைக்கிறார்கள். தமிழில் 62 படங்களில் நடித்திருக்கிறார். புன்னகை இவருக்கு ப்ளஸ் பாயிண்ட்.
