எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 7 ஆகஸ்ட், 2019

ஜெர்மனியில் ஒரு பார்பக்யூ.

ட்ராம் மற்றும் ட்ரெயின் வசதிகளால் டூயிஸ்பர்க்கிலிருந்து சுமார் 131 கிமீ தூரத்தில் உள்ள வேர்ல் என்ற நகரில் மகனின் நண்பர் யுஹானஸ் ( ஜெர்மனியின் ஜெ எல்லாம் யே என்று உச்சரிக்கப்படுகிறது. - ஜோகானஸ் ) என்பவரின் வீட்டிற்கு எளிதாகச் சென்றோம். அவர் மனைவி கேதரின், பேனாஃப் என்ற ஸ்டேஷனில் ரிசீவ் செய்து அநாயசமாகக் கார் ஓட்டிக்கொண்டே எங்களை வீட்டிற்கு அழைத்துச் சென்றார் ) 

அது ஒரு சனிக்கிழமை. அதனால் என்ன பார்பக்யூ ஏற்பாடு செய்திருப்பதால் அது ஒரு கொண்டாட்டமாக இருக்கும் எனச் சொல்லப்பட சென்றேன். :) அங்கே வெஜ் இல்லை எல்லாமே நான்வெஜ்தான். நாமும் மாமிசபட்சிணிதானே.

இதோ நண்பர் வீடு வந்தாச்சு. இங்கே வீடு பராமரிப்புதான் கொஞ்சம் கஷ்டம். இது தோட்டத்தோடு சேர்ந்த வீடாக வேறு இருந்தது. அங்கே சூரிய காந்தி, ஆப்பிள், இன்னும் பல செடிகளும் பழங்களும் இருந்தன. புல் வெளியின் ஓரத்தில் குழந்தைகள் விளையாடும் பார்க் போல ஊஞ்சல் எல்லாம்.

யுஹன்னஸின் மகள் பெயர் அலிஷா, மனைவி பெயர் காதரின். அவரின் பெற்றோர்களும் கலந்துகொண்டார்கள். யுஹான்னஸின் வீட்டில் இரு கெஸ்ட்களும் இருந்தார்கள். துருக்கி மற்றும் ஈஜிப்டில் இருந்து இரு மாணவியர் அங்கே தங்கி இருந்தார்கள். பதினைந்து நாள் சிறப்பு விருந்தினராக அவர் வீட்டில் தங்க வைக்கப்பட்டிருந்தார்கள். இதனால் இவரது மகள் அலீஷாவும் கல்லூரிப் பருவத்தில் இப்படி அயல்தேசத்தில் விருந்தாளியாகத் தங்கி அவர்களின் கலாச்சாரம், வாழ்வியல், சமூக அரசியல், கல்வி முறைகளை அவதானிக்க முடியும்.


நிற்க. இப்போ நாம பார்பக்யூவுக்கு வருவோம்.

ஜெர்மனியில் வாடகை வீட்டு காண்ட்ராக்ட் போடும்போதே பால்கனியிலோ, தோட்டத்திலோ இம்மாதிரி பார்பக்யூ அடுப்பு ( கரி ) வைக்கவும் ஷரத்து எழுதிக் கையெழுத்திட்டுக் கொள்ள வேண்டும்.

ஜெர்மனியின் வீடு, ரோடு ஆகியவற்றில் ரூல்ஸ் & ரெகுலேஷன்ஸ் அதிகம். சுத்தமாக இருக்க வேண்டும். சத்தமே கூடாது. ( பார்ட்டிக்கு எல்லாம் நேரம் காலமிருக்கு) மதியம் இரண்டு மணிக்கு நம்ம பார்பக்யூ டைம்.

இதோ பார்பக்யூ அடுப்பு ரெடி. கரியும் கூட. லிக்னைட் கார்ப்பரேஷனில் வெட்டி எடுத்து வந்தமாதிரி பாறைக் கரித்துண்டுகள்.


அடுப்பை நகர்த்திச் செல்லும் வசதியும் உண்டு. உள்ளே கரித்துண்டுகளைப் பரப்பி அதன் மேல் சிறிது குக்கிங் ஆயில் ஊற்றி லைட்டரால் பேப்பரில் பற்றவைத்துப் போட்டு பார்பக்யூ செய்யும் தட்டை வைத்தார்.


தணல் கொழுந்துவிடத் துவங்குகிறது.

அதற்கு முன் நாம் டேபிளை ரெடி செய்வோம் வாங்க.

கேதரினும் அவர் மகள் அலீஷாவும் வீட்டின் உள்ளிருந்து சேர்களுக்கான குஷன்களைக் கொண்டு வந்து மாட்டினார்கள். தட்டுகள், கப்புகள், ஃபோர்க்குகள் , கத்திகள், ஸ்பூன்கள், ஜூஸ் வகையறாக்கள், டிஷ்யூ ஆகியன அடுக்கப்பட்டன. மொத்தம் பதினோருபேர்.


அவர்கள் கூட சிறிது நேரம் குஷன் மாட்டினேன். :) செய்தவேலைக்காகப் பாராட்டி :) ஒரு பெரிய மக் நிறைய டீ கிடைத்தது. இங்கே எல்லாம் டீ பேக்ஸ்தான் .


டேபிள் ரெடி. வாங்க போய் பார்பக்யூ தயாரிப்பைப் பார்ப்போம். ஏற்கனவே வீட்டின் உள்ளே இருக்கும் ஓவனில் மகாபிரம்மாண்ட மீன்கள் மூன்று துண்டாக பேக் ஆகிக் கொண்டிருந்தன. அது சல்மோன் மீன் போல எனச் சொன்னார்.


பார்பக்யூ ட்ரேயில் சிறிது குக்கிங் ஆயிலை ஊற்றினார் யுவானஸ்.  அநேகமாக இங்கே எல்லாமே சூரியகாந்தி எண்ணெய்தான்.


கடைகளில் ரெடிமேடாகக் கிடைக்கும் இந்த பார்பக்யூஸ்டிக்குகளை வாங்கி இடுக்கியால் இருபுறமும் திருப்பி சுட்டு வாட்டி எடுத்தால் முடிந்தது பார்பக்யூ.


இதோ ஒருபக்கம் இறால் ஸ்டிக்குகளும், இன்னொரு பக்கம் சிக்கன் ஸ்டிக்குகளும். இதில் நமக்காக கொஞ்சம் மிளகாய்ப்பொடியைத் தடவியும் போட்டுத் தந்தார்கள். அவர்கள் உணவில் காரம் அதிகம் சேர்ப்பதில்லை.


தீ லாவாமல் இருக்க எம்மாம் பெரிய மர இடுக்கி !!!.

லெட்யூஸ் எனப்படும் சாலட் இலைகள். அவர்கள் தோட்டத்திலும் பக்கத்து வீட்டுத் தோட்டத்திலும் புதிதாகப் பறித்து அதில் வெந்த அமெரிக்கன் சோளமும் மாதுளையும் போட்டு சாலட் ஆயில் ஊற்றிப் பிரட்டியிருந்தார்கள்.

இதோ தயாராகி வந்துவிட்டன இறால் ஸ்டிக்குகள்.

அடுத்து சிக்கன் ப்ரெஸ்ட் ஸ்டிக்குகள்.


ஓவனில் சமைக்கப்பட்ட மீன்கள். இதில் நடுவில் ஒருவகை மீனும் ஓரத்தில் ஒருவகை மீனும் உள்ளது.

நம்மைப்போலக் கருக்க கருக்க வறுக்க மாட்டார்கள். இவர்கள் மென்மையாக வேகவைத்து அரைவேக்காடாக உண்பார்கள். எதிலுமே முள்ளு , எலும்பு என்பதெல்லாம் இல்லை.

மற்ற நாடுகளைப் போல அரை நாள் ஒருநாள் எல்லாம் பார்பக்யூவில் வேகவைத்துக் கொண்டிருக்கமாட்டார்கள். அதிகம் அரைமணிநேரம்தான் ஃபடாஃபட் முடித்துவிட்டு வேறு வேலையைப் பார்க்கப் போய்க்கொண்டே இருப்பார்கள். :)

பியர் சாப்பிடுபவர்களுக்கு லோகல் ப்ராண்ட் பீர் கட்டாயம் உண்டு. இதைக் கொடுப்பதை அவர்கள் சிறப்பானதாக நினைக்கிறார்கள்.

பியர் சாப்பிடாதவர்களுக்கு ஸ்ப்ரைட், ஃபேண்டா உண்டு. :)

நமக்காக சிறிது சேஃப்ரான் ரைஸ் செய்திருந்தார்கள். அவர்களுக்கு சாதம் உண்டு பழக்கமில்லை.


முக்கிய விஷயம் இந்த பார்பக்யூ உண்ணும்போது  சாஸ் ஏதும் சேர்த்துக் கொள்வதில்லை.

நமக்கு சாஸில் முக்கித் தின்றே பழக்கம் என்பதால் டொமேட்டோ கெட்சப்பும் சாஸும் கொடுத்தார்கள்.

அதை அதை அப்படி அப்படியே உண்பதுதான் அவர்கள் பழக்கம். சாலட் அதிகம் எடுத்துக் கொள்கிறார்கள்.


உண்டு முடித்தாயிற்று. ஒரு விஷயம் அசைவம் சாப்பிடாதவர்கள் ஜெர்மனியில்  பார்பக்யூவுக்கு அழைத்தால் செல்ல வேண்டாம். அங்கே சைவம் என்றால் அது சாலட் மட்டுமே.

அந்த எகிப்து, துருக்கி மாணவியர் ப்ரான், மீன் தவிர சாலடாகத்தான் அதிகம் எடுத்துக் கொண்டார்கள்.


உணவுக்குப் பின் சிறிது டீ வித் கேக்.

வீட்டினுள் தாஜ்மகால் மினியேச்சர் வைத்திருக்கிறார்கள். மகள் விளையாடிய மிஷின் குதிரையும் உள்ளது.

அடுத்து அலீஷாவின் இசை நிகழ்ச்சி. வயிற்றுக்கு உணவு அதன் பின் செவிக்குணவும்.


மிக அருமையாக வயலின் வாசித்தார் அலீஷா.

இளம் மேதை. அவரது பாட்டியாரும் ரசிக்கிறார்.

அம்மா ஒரு பாடலை பின்னே நின்று பாட மகள் வாசிக்க மிக அற்புதமான தருணம்.



மகளை அவ்வப்போது கலாய்க்கவும் தயங்கவில்லை அவர். ”ஐயையோ அவள் டி ஸ்கேல்/மோட் வாசிக்கப் போகிறாளா நான் உள்ளே ஓடிவிடுகிறேன்.” என்று அனைவரையும் சிரிக்க வைத்தார்.


யுவானஸ் இந்தியாவிலிருந்து ஜெர்மனிக்குத் தத்தாக வந்த குழந்தை. அவரைக் காதலித்து மணந்தவர் கேதரின். கேதரின் ஒரு ( விவாகரத்து ஸ்பெஷல் ) வக்கீலாகவும் இருக்கிறார். அவரது பெற்றோர் இருவருமே மிக இனிமையானவர்கள்.

அந்த வயதிலும் இருவரும் தங்கள் சைக்கிளை ஓட்டியபடி மதியம் ஒருமணிக்கு மகள் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள். பல்வேறு நாடுகளைச் சுற்றிப்பார்த்த அனுபவம் கொண்டவர்கள்.


மிக அருமையாக வாசித்தாள் அலீஷா. தென்னிந்திய மற்றும் ஜெர்மன் கலவை கொண்ட குழந்தை.



எவ்ளோ பெரிய டிஷ்யூ பேப்பர்.

அடுத்து விடைபெறும் தருணம். ஃபோட்டோ செஷன்.

என்னுடைய செல்ஃபோனில் எடுத்ததால் இதில் யுவானஸ் இல்லை. எங்களை அடுத்து பேகனாஃப் ஸ்டேஷனில் அவர்தான் ட்ராப் செய்தார். மழை விழத் துவங்கியது. வித்யாசமான அனுபவத்தைச் சுமந்துகொண்டு நாங்களும் டூயிஸ்பர்க் திரும்பினோம்.

அவரின் தோட்டமும் அதில் உள்ள சிலைகளும் சூரியகாந்திப் பூக்களும் இன்னொரு இடுகையில் பகிர்வேன் :)

3 கருத்துகள்:

  1. வித்தியாசமான அனுபவம் உங்களுக்கு....

    தொடர்கிறேன்...

    பதிலளிநீக்கு
  2. பார்பக்யூ...இப்பொழுதுதான் கேள்விப்படுகிறேன்.

    பதிலளிநீக்கு
  3. நன்றி வெங்கட் சகோ

    நன்றி ஜம்பு சார்

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...