எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 26 ஜூன், 2015

அன்ன பட்சி பற்றி கலையரசி.

என் வலையுலக சகோதரி கலையரசி. அவர் தன்னுடைய ஊஞ்சல் வலைப்பூவில் அன்னபட்சி பற்றி மிக அழகானதொரு விமர்சனம் கொடுத்திருக்கிறார்.  படித்தேன். படித்”தேன்”. அதை இங்கே பகிர்வதில் இன்புறுகிறேன்.. அஹா மிக அருமை கலையரசி :) கவிதைகள் எழுதிய பொழுது பெற்ற இன்பத்தை விட  உங்கள் விமர்சனம் படித்துப் பேருவகை அடைந்தேன். நன்றிம்மா. எதிர்பார்க்கவில்லை இப்படி ஒரு இன்ப அதிர்ச்சியை.

துரை அவர்கள் சொன்னது போல் கவிதைகள் சுவையா கருத்துரை சுவையா என்று சொல்லலாம். மனம் உண்மையிலேயே தடுமாறுகிறது. அன்பும் நன்றியும் பா :)

இதை அவர்களின் வலைத்தளத்திலும் படிக்கலாம். அதற்கான இணைப்பு இங்கே.
http://www.unjal.blogspot.in/2015/02/blog-post_98.html.

////என் பார்வையில் - 'அன்னபட்சி' - கவிதைகள்

‘அன்ன பட்சி’ - கவிதைகள்
ஆசிரியர்:- தேனம்மை லெஷ்மணன்
இவரது வலைப்பூ:- சும்மா
முதல் பதிப்பு:- ஜனவரி 2014
வெளியீடு:- அகநாழிகை பதிப்பகம், மதுராந்தகம் கைபேசி:- 9994541010
இது இவரது இரண்டாவது கவிதைத் தொகுப்பு.  ஏற்கெனவே ‘ங்கா’ என்ற தொகுப்பு வெளிவந்துள்ளது. 


சக்தியின் சூலத்தையும் பெண்ணின் சூல்பையையும் ஒருங்கிணைத்த சூலும் சூலமும்,’ என்ற இவர் கவிதை, பெண்ணிய எழுத்தில் ஒரு மைல்கல்; சக்தி வடிவமான பெண், சூலத்தை ஏந்திவிட்டால் வீச்சை யாராலும் தாங்க முடியாது என்பதால் தான், அவளைச் சிலையாக்கிக் கையில் சூலம் தந்து, கருவறைக்குள் நிறுத்தியிருக்கிறோம் என்கிறார் திருமதி எம். ஏ.சுசீலா, தம் அணிந்துரையில்:-
“கருவறையில் சக்தி பீடமாய் நிலை நிறுத்தப்பட்டு
ஒரு நாள் மட்டும் தேரோடும்
அவளுக்குப் புரிகிறது
பேரெழில் சக்தியை ஒரு நாள் கூட
யாராலும் தாங்க முடியவில்லை என்று.”
இத்தொகுப்பில் கடவுளை நேசித்தல், புத்தகங்கள், பொம்மைகள் உட்பட பாடுபொருட்கள் பலவற்றில் கவிதைகள் இருந்தாலும், தற்காலப் பிரச்சினைகளான சுற்றுச்சூழல் மாசுபடுதல், இயற்கையைப் பேணுதல், இலங்கை பிரச்சினை, பெண்ணியம் ஆகியவை குறித்துப் பேசும் கவிதைகள், என்னை வெகுவாகக் கவர்ந்தன.

நான் ரசித்த கவிதைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதே, இப்பதிவின் நோக்கம்:-  

ஒன்று:-  ‘விவ ‘சாயம்’  

நம் பாரம்பரிய வேளாண் முறையைக் கைவிட்டு,  கொள்ளை கொள்ளையாகச் சம்பாதிக்கும் ஆசையில்,  இயற்கை உரங்களுக்குப் பதிலாகச் செயற்கை உரங்களைக் கொட்டியதன்  விளைவாக, இயற்கையன்னையின் முலைகள் பாளம் பாளமாக வெடித்துப் பால் சுரப்புத் தட்டிப் போய்விட்டன என்று ஆதங்கப்படுகிறார் கவிஞர்:-   

“குடிச்சிக் குடல் அழிஞ்சி
புண்ணாகிக் கிடக்கு
சுரப்புத் தட்டிப்போய்
வெடிச்ச முலைக் காம்பாட்டம்
எனக்குப் பாலூட்டிய பூமி”.

இரண்டு:-
சுற்றுச்சூழலுக்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் பாலீதீன் பைகள், காடு அழிப்பு, கதிர் வீச்சு ஆபத்துள்ள அணு உலை போன்றவற்றால் உலகுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து, இவரது கரிசனத்தை வெளிப்படுத்தும் ‘ரசாயன(வ)னம்’ கவிதையிலிருந்து கொஞ்சம்:-

“பாலீதின் தின்னும் யானை
கண்ணாடி பைகள் சீசாக்கள்
பூத்திருக்கும் மலை
அணுவைப் பிளக்க
ஆழ்துளையிட்டு ரசாயனக்கூடம்
வனம் பாதுகாக்கும் ரசாயனம்.”

மூன்று:-
தூசி விழுகிறது, முகத்தில் கிளை இடிக்கிறது, பூச்சி வருகிறது என்று ஏதேதோ காரணம் சொல்லி மரமொன்றை வெட்டிச் சாய்த்து விடுகிறார்கள்
நடு இரவில் கிளை தழைகளோடு ஜன்னல் வழி வந்து கன்னந் தழுவிய நிலா, இப்போது மொட்டையாக….

“காக்கைகளும், குருவிகளும்
வண்டுகளும் இல்லாமல்
கண்கள் காயும் வெளிச்சத்தில்
வறண்டு கிடந்தது சிமெண்ட் தரை.
இலையிழந்து, அழகிழந்து, களையிழந்து
மொட்டையடித்தது போல் நிலவு
நடுநிசி விழிப்பில், ஜன்னல் வழி அசைந்து
கன்னம் வருடும் சுகமிழந்து துக்கமாய்…. 

‘காயின் ருசி’ என்ற இக்கவிதையை வாசித்த போது, என்னுள்ளும் வெறுமையுணர்வு படர்ந்து துக்கம்.  தாம் அனுபவித்ததை, வாசகருக்கும் கடத்துவதில் வெற்றி பெற்றிருக்கிறார் கவிஞர்!

நான்கு:-
இலங்கை இனப்படுகொலையில், நம் மக்கள் கொத்து கொத்தாகக் கொலையுண்ட சோக வரலாற்றைப் பதிவு செய்யும் ‘இனம் புதைத்த காடு’ என்ற கவிதை, மனதை மிகவும் பாதித்தது. இதிலிருந்து சில வரிகள்:-

“இனத்தைப் புதைக்கும்
இடுகாடானது இலங்கை…..
பற்களைப் பேழையில்
பாதுகாக்கும் தேசம்
பால் சிசுக்களை மென்று தின்னும்
பாவிகளால் நிறைந்திருக்கிறது”

ஐந்து:-
சிறு வயதில் நண்பர்களுடன் கூட்டமாக சேர்ந்து விளையாடிய, உடலுக்கும் மனதுக்கும் உற்சாகம் தந்த, நாம் மறந்து போன விளையாட்டுக்கள் பற்றிய கவிதையை மிகவும் ரசித்தேன்.  அதிலிருந்து கொஞ்சம்  உங்கள் பார்வைக்கு:-

‘விளையாட்டு’

“கிச்சுக் கிச்சுத் தாம்பூலம் 
விளையாடத்துவங்கி
கிளியாந்தட்டில் சுற்றி
குலை குலையாய்
முந்திரிக்காயைப் பறித்து
கொள்ளையடித்தவன்
ஒளிந்து பிடித்து விளையாட
பல்லாங்குழிகளாய்ச்
சிதறிக் கிடந்தது பரவசம்.”

('கிச்சுக் கிச்சுத் தாம்பாளம்' என்று நாங்கள் சொல்வோம்)

ஓடியாடி விளையாடாமல், கைகால்களை மடக்கி, உடலைக் குறுக்கிக் கணிணி முன் எந்நேரமும் சரண் அடைந்திருக்கும், நம் இளைய சமுதாயம், இது போல் இழந்த பரவசம் எவ்வளவோ!

ஆறு:-
“நான் பார்த்துப் பார்த்து வளர்க்கும் செடி, அன்று கண்ட முகமாக இருக்கிறது; எந்த உரமும் போடாமல். புழு பூச்சி அண்டாமல் முட்செடி எவ்வளவு செழிப்பாக வளர்கிறது?” என்று நான் அடிக்கடிப் புலம்புவது வழக்கம். 

தேனம்மையின் ‘பராமரிப்பு,’ என்ற கவிதையைப் படித்தபோது எனக்கு வியப்பு தாங்கவில்லை.  இருக்காதா பின்னே?  என் புலம்பலைக் கேட்டது போல், ஒரு கவிதையை வடித்திருக்கிறார் இத்தொகுப்பில்!   

“தேவையற்றதெல்லாம்
செழித்து வளருகிறது
தண்ணீர் பூச்சி மருந்து
உரம் எதுவும் இல்லாமல்…
பாத்திகட்டி மண் அடித்து
இயற்கை உரம் போட்டாலும்
இளைத்துக் கிடக்கிறது சவலையாய்
பார்த்துப் பார்த்துப் பராமரிக்கும் செடி”

நம் சமூகத்திலும் இதே கதைதான்.  நல்லவர்களை விட தீய சக்திகள் தாம், எந்தவிதப் பராமரிப்போ, போஷாக்கோ இல்லாமல், படு விரைவாகவும், அபரிமிதமாகவும் வளர்கிறார்கள்!  இக்கவிதை சொல்லும் உட்கருத்து இதுவாக இருக்குமோ?

ஏழு:-

“உடல் பெண்ணாய்
உணர்வை ஆணாய்ப்
படைத்தவனுக்கும் இருக்கிறது சரிவு,”
என்றும், சிகண்டியாய் இருப்பது எளிதல்ல என்றும், திருநங்கைகளுக்கு ஆதரவாகப் படைத்தவனை  நிந்திக்கிறது, ‘சிகண்டியும் அமிர்தமும்,’ என்கிற கவிதை.

எட்டு:-
பெண்ணியத்தைக் குறித்த கவிதைகள் பல;  அவற்றில் இரண்டு மட்டும்:-
முதலாவது ‘இந்த மரத்தின் வேர்கள் ஆழமானவை,’ என்பதிலிருந்து கொஞ்சம்:-
“இந்த மரத்தின் வேர்கள் ஆழமானவை
அடுத்தடுத்து வெட்டுப் பட்டப்போதும்
நீர் மறுக்கப்பட்ட போதும்
நிழலை சுருக்கிக் கொண்டதில்லை”
இரண்டாவது ‘நீர்க்குமிழிகள்,’ என்ற கவிதையின் சில வரிகள்:-
கட்டிய மாடாய்
கயிற்றோடு சுற்றி
கட்டவிழ்க்க முடியாத
கட்டுக்களோடு”
ஒன்பது:-
எல்லோருக்கும் புரியக் கூடிய, அன்றாடம் புழங்கக் கூடிய பேச்சுவழக்கு சொல்லாடல் இவரது பலம்:-
“தொட்டித் தண்ணீர் கசிந்து
ஊறிக்கிடக்கும் புல்தரையாய்
மொதும்பி இருந்தது அவளது தலையணை;”
சமையல் மேடையின் தாளிதத் தெறிப்புக்களாய்த்
தரையெங்கும் சிதறிப் பொறிந்து கிடந்தன
அவளது கண்ணீர்ப் பூக்களின் உப்பு இதழ்கள்,”  (சூலும் சூலமும்)
‘மொதும்பி,’ இதுவரை நான் கேள்விப்படாத சொல்.  தமிழுக்குப் புது வரவு?

பத்து:-
நீ கீறியது ஒரு முறை
நான் கிளறிக் கொண்டது பல முறை…..”  (வெறுத்தலின் முடிவில்)

கீறியதால் ஏற்பட்ட காயத்தைத் திரும்பத் திரும்பக் கிளறி, மனதைப் புண்ணாக்கிக் கொள்ளும் நம் பேதைமையை, எவ்வளவு அழகாகச் சுருக்கமாகச் சுட்டுகிறார், இரண்டே வரிகளில்!  
பதினொன்று:-
மனநோயின் தாக்குதலால் தற்கொலை எண்ணம் தோன்றி வளர்ந்து இறுதியில் உத்தரத்தில் தூக்கில் தொங்கிவிட்ட ஒருவரின் கதை மனதை மிகவும் நெகிழச் செய்தது:-   
ஒரு அமாவாசை இரவில்
ஓடுகள் நெகிழ்ந்த உத்தரத்தில்
ஓய்ந்த கேள்வியோடும், சுவாசத்தோடும்
ஒற்றைக் கயிற்றில் ஆடிக்கொண்டு……
(வற்றின கேள்விகள்)
பனிரெண்டு:-

கனம் அதிகரித்து விட்டதாக
சங்கப்பலகையாய் மிரட்டுகிறது எடைகாட்டி,”
(வயதின் கம்பீரம்) என்பதில் நகைச்சுவை இழையோடுகிறது. 

சுவையான வாசிப்பின்பம் அளிப்பதோடு, சிந்திக்கவும் தூண்டும்  அருமையான கவிதை தொகுதிக்குப் பாராட்டுக்கள்!  இது போல் இன்னும் பல சிறப்பான ஆக்கங்கள் மூலம், தமிழன்னைக்கு வளம் சேர்க்க தேனம்மையை வாழ்த்துகிறேன்!///

நன்றி கலையரசி. அன்ன பட்சியை சிறப்படைய வைத்துவிட்டீர்கள். அன்பும் வாழ்த்துகளும். :)

8 கருத்துகள்:

  1. நூலாசிரியரான தங்கட்கும் நூலினை வாசிக்கத்தூண்டும் வகையில் விமர்சித்த சகோ. கலையரசி அவர்களுக்கும் வாழ்த்துகளும் பாரட்டுகளும்.

    நன்றி

    பதிலளிநீக்கு
  2. பாராட்டுகள். வாழ்த்துகள். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.

    திருமதி. ஞா. கலையரசி அவர்கள் எதையும் ஊன்றிப்படித்து, மிகச்சிறப்பாக விமர்சனம் அளிப்பதில் வல்லவர்.

    அதற்கான சில மிகச்சிறிய சான்றுகள்: (1) http://gopu1949.blogspot.in/2014/03/vgk-05-01-03-first-prize-winners.html (2) http://gopu1949.blogspot.in/2014/10/vgk-38-01-03-first-prize-winners.html (3) http://gopu1949.blogspot.in/2014/10/vgk-39-01-03-first-prize-winners.html

    தங்களுக்கும் அவர்களுக்கும் என் மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    அவர்களின் பதிவினிலும் ஏற்கனவே நான் பின்னூட்டம் கொடுத்துள்ளேன். :)

    -=-=-=-=-=-

    வை.கோபாலகிருஷ்ணன் 19 February 2015 at 10:09

    ஏற்கனவே வலிமை மிக்க தேன் போன்ற திருமதி. தேனம்மை அவர்களின் கவிதை நூலுக்குத் தங்களின் மிக அருமையான விமர்சனம் மேலும் வலுவூட்டுவதாக உள்ளது.

    இருவருக்கும் பாராட்டுக்கள் + நல்வாழ்த்துகள்.

    நன்றியுடன் கோபு

    -=-=-=-=-=-

    Kalayarassy G 20 February 2015 at 05:46

    பாராட்டுக்கும் நல்வாழ்த்துக்கும் மிகவும் நன்றி கோபு சார்!

    -=-=-=-=-=-

    Thenammai Lakshmanan 24 February 2015 at 09:10

    நன்றி கோபு சார் :)

    -=-=-=-=-=-

    பதிலளிநீக்கு
  3. அருமையான விமர்சனம்... "தேன்" தான்...

    வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  4. நல்ல விமர்சனம்!

    “உடல் பெண்ணாய்
    உணர்வை ஆணாய்ப்
    படைத்தவனுக்கும் இருக்கிறது சரிவு,” மிகவும் ரசித்தோம் வரிகளை சகோதரி...இங்கு சொல்லப்பட்டிருக்கும் கவிதைகள் அனைத்தும் "தேன்" துளிகள்.....வேளாணமை குறித்த கவிதைகள்....

    பாராட்ட்கள், வாழ்த்துகள்! சகோதரி!

    பதிலளிநீக்கு
  5. நன்றி ஊமைக்கனவுகள்

    மிக்க நன்றி விஜிகே சார்

    நன்றி டிடி சகோ

    நன்றி வெங்கட் சகோ

    நன்றி தளிர் சுரேஷ்

    நன்றி துளசி சகோ & கீத்ஸ்.

    பதிலளிநீக்கு
  6. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...