எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 23 மே, 2018

வந்தியைக் காக்க வந்த சுந்தரேசன்.தினமலர் சிறுவர்மலர் - 18.

வந்தியைக் காக்க வந்த சுந்தரேசர்.

பாண்டியநாட்டின் வைகைக்கரையில் அமைந்திருக்கிறது அக்குடிசை. மழை தூறிக் கொண்டிருக்கிறது. இரண்டு மூன்று நாட்களாக அந்தக் குடிசையைப் பதம் பார்த்தும் இன்னும் விடுவதாயில்லை. உள்ளே ஒரு மூதாட்டி அமர்ந்திருக்கிறாள். அவள் கரங்களோ அந்தக் குடிசையில் இருக்கும் சொக்கநாதப் பெருமானின் படத்தை வணங்கிக் காத்தருளுமாறு வேண்டுகின்றன.

அன்று ஆவணி மூல நட்சத்திர நாள். தினமும் பிட்டு சுட்டுப் படைக்கும் அவள் சிலநாட்களாகப் பிட்டு சுட்டுப் படைக்கமுடியவில்லையே என வருந்திக் கொண்டிருக்கிறாள். “ஈசா என்ன நினைத்து என்னைப் படைத்தாய்?. இந்தக் கிழவியின் பிட்டுக்கும் ஏன் தடை விதித்தாய் ? என்று நிற்கும் இம்மழை.? என்று வடியும் இவ்வெள்ளம்.? என்னை அடித்துச் சென்றாலாவது காக்க வருவாயா? “ என்றெல்லாம் அவள் ஈசனிடம் பேசிக் கொண்டிருக்கிறாள்.

சாதாரண நாட்களிலேயே சூரியனும் சந்திரனும் கூரை இடுக்குகளின் வழியாக அவள்மேல் தங்கள் கண்களைப் பதிப்பார்கள். அன்றோ காற்றும் தன் பங்குக்குக் குடிசையின் தென்னங்கிடுக்குகளை விசிறித்தள்ளிக் கொண்டிருந்தது. சில கிடுகுகளைப் பெயர்த்தும் போட்டிருந்தது.  பெய்த மழையில் சொதசொதவென்று ஈரமாக இருந்தது அவளது குடிசை.

செவ்வாய், 22 மே, 2018

காலம் செய்த கோலமடி :-

காலம் செய்த கோலமடி :-


முன்னுரை:-  பாலசந்தர் படமோ, பார்த்திபன் படமோ பார்த்தால் ஏற்படும் சிறிய அதிர்ச்சியை விட ஸ்டெல்லா புரூஸ் கதையோ, தஞ்சை பிரகாஷ் கதையோ உண்டாக்கும் அதிர்ச்சி கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும் . ஏனெனில் அது உறவுச்சிக்கலை அதி வித்யாசமான கோணத்தில் காட்டுவதால்தான். அதேபோல்தான் தில்லையகத்து துளசிதரனின் கதையான காலம் செய்த கோலமடியும் சிறிய கலாச்சார அதிர்ச்சியை உருவாக்கியது.

சனி, 19 மே, 2018

பரமாத்மாவுடன் கலந்த பறவைகளின் அரசன். தினமலர் சிறுவர்மலர் - 17.


பரமாத்மாவுடன் கலந்த பறவைகளின் அரசன்.

ருமேகங்கள் சூழ்ந்து நிற்கின்றன. இன்றைக்கு என்ன வெளிச்சத்தையே காணமுடியவில்லையே. உயர்ந்து ஓங்கி வளர்ந்திருந்த ஒரு ஆலவிருட்சத்தில் அமர்ந்திருந்த அந்தப் பறவைகளின் அரசன் தன் இறக்கைகளைச் சோம்பல் முறித்து விழிக்கிறார். சடசடவென தெறித்து விழுகின்றன முதிர்ந்த மரத்தின் சுள்ளிகள்.

அவருக்கு வயது 60,000 ஆண்டுகள்.உள்ளத்தில் நன்னெறிகள் நிரம்பியதால் இன்னும் பறந்து விரிந்த பிரம்மாண்ட சிறகுகளும் தீட்சண்யமான பார்வையும் கொண்டு திடமாகத்தான் விளங்குகிறார். 
  
வானம் இன்னும் மேகமூட்டத்துடந்தான் இருக்கிறது. இன்று என்னவோ ஒரு அசம்பாவிதம் நிகழப்போகிறது என்று ஏனோ தோன்றியது அந்தப் பறவைகளின் அரசனான ஜடாயுவுக்கு. மனதில் இனம் தெரியாத ஒரு அவசம். என்னவானால் என்ன எதிர்கொள்ளத்தானே வேண்டும். தன் தினப்படி காரியங்களை முடித்துவிட்டு நிஷ்டையில் அமர்ந்திருக்கிறார்.

அது சரி இந்த ஜடாயு யார். அவர் மனதை அச்சுறுத்திய அசம்பாவிதம்தான் என்ன ?

பெரியப்பா.. பெரியப்பா” என்ற குரல்கள் அசைக்கின்றன. ஆனால் கண் விழிக்க இயலவில்லை. அரைக்கண் மூடியபடி பார்க்கிறார் ஜடாயு. தயரத புத்திரர்கள்தான். ஒருவித ஏலாமையுடன் அவர்களிடம் அந்த அசம்பாவிதத்தைச் சொல்லியவுடன் அவரது கண்கள் நிரந்தமாக மூடுகின்றன.

சனி, 12 மே, 2018

ஆச்சியும் ஆட்சியும்.

”யாகாவாராயினும் நா காக்க” என்ற திருக்குறளை நினைவுபடுத்துகிறது அமைச்சர் செல்லூர் ராஜு அவர்களின் டிவி பேட்டி.

நடிகர் ரஜனிகாந்த் அவர்கள்  தென்னிந்திய நதிநீர் இணைப்பைக் கொண்டுவருவதுதான் தன்  வாழ்நாள் கனவு என்ற கருத்தைச் சொல்லி இருக்கிறார். அதற்கும் ஆச்சிக்கும் என்ன சம்பந்தம் ?

வார்த்தை விளையாட்டு என்பது விபரீதமாகிவிடக்கூடாது. விவேக் ஒரு படத்தில்  காரைக்குடிப் பக்கம் (ஆச்சியைப் பிடித்தார் என்று ஒரு பெண் தொகுப்பாளர் உச்சரிக்கும்போது ) சொன்னால் கலவரம் வந்துவிடும் என்பார். அதை விட அதிகமாகக் கண்டன ஆர்ப்பாட்டம்  நேற்று நடைபெற்றது. ( தொடர் பயணங்களால் ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக நான் கலந்து கொள்ளவில்லை. ) அனைவருமே கொந்தளித்துப் போய் உள்ளார்கள்.

காரைக்குடி மட்டுமல்ல 72 நகரத்தார் ஊர்களிலும் பெண்களை ஆச்சி என்றே அழைக்கிறார்கள். திருநெல்வேலிப் பக்கத்திலும் முதிய பெண்களை ஆச்சி என்றே அழைக்கிறார்கள். காரைக்குடியில் வயதில் மூத்த பெண்களையும், மூத்த சகோதரிகளையும் அக்கா என்ற பதத்தில் ஆச்சி என்றும் , திருமணமான பெண்களையும் ஆச்சி என்றும் அழைப்பதுண்டு.

வாய்க்கு வந்ததை காமெடி என்று நினைத்து சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லி விளக்கம் கொடுத்தால் சரியாகிவிடுமா என்றே நேற்றைய அவரின் பேட்டிகள் பார்த்துத் தோன்றியது. ஆச்சியாயினும் பெண்கள்தானே. அனைத்துப் பெண்களையும் இப்படிக் கிண்டலடித்துவிட்டு இருந்துவிட முடியுமா.

வெள்ளி, 11 மே, 2018

பொதிகையில் நம் விருந்தினர் நிகழ்ச்சி.

தூர்தர்ஷன் பொதிகையில் நம் விருந்தினர் பகுதியில் பங்களிப்பு செய்யும்படி அழைப்பு வந்தது. 8 - 5 - 2018 அன்று அதிகாலை பொதிகை தூர்தர்ஷன் கேந்திராவுக்குச் சென்று நிகழ்வில் பங்கேற்றேன்.

https://www.youtube.com/watch?v=Yzyx6NvSPwc

எந்தத் தொய்வுமில்லாமல் அடுத்தடுத்து தொடர்புடைய மிக அருமையான கேள்விகள் கேட்டு பதில்களை வாங்கிய தொகுப்பாளினி கௌதமி ராஜாராமுக்கும் ( முதலில் நியூஸ் ரீடராகப் பணியாற்றி உள்ளார் ) அதுதான் முதல் நிகழ்ச்சியாம். தொய்வில்லாமல் நிகழ்ச்சியை சுவாரசியமாகக் கொண்டு சென்றதில் அரைமணிநேரம் போனதே தெரியவில்லை.

இரண்டு மூன்று இடங்களில் சரிவர என் பதிலை நான் சொல்லவில்லை. முதலில் எல் கே ஜி, யூ கே ஜி படித்தது  காரைக்குடி அழகப்பா ப்ரிப்பரேட்டரி மாண்டிசோரி, அதன் பின் இரண்டாம் வகுப்பு வரை  செயிண்ட் ஜோசப்  மன்னார்குடி, அதன்பின் எட்டாவது வரை கணபதி விலாஸில் படித்தேன். இவற்றைச் சொல்ல விட்டுவிட்டேன். அதன்பின் தான் திரும்ப ஒன்பதாவது, பத்தாவது, ப்ளஸ் ஒன் ,  ப்ளஸ்டூ வரை செயிண்ட் ஜோசப் பள்ளி.

அதே போல் பெண்பூக்கள் நூலில் 57 பூக்கள் என்று சொல்லும் இடத்தில் 57 புஸ்தகங்கள் என்று சொல்லி இருப்பேன். :)

குழந்தை பிறந்தவுடன் சிவப்புப் பட்டுக் கயிறு கட்டுவார்கள். அதைப் பிள்ளை விடும்போது அறுப்பார்கள். என்று சொல்ல நினைத்து குழந்தை  பிறந்தவுடன் பட்டுக்கயிறு அறுப்பார்கள் என்றிருப்பேன் :)

ஓரிடத்தில் கடற்கொள்ளையர்கள் மனைவி என்பார் அந்த இடத்தில் கடத்தப்பட்டவர்கள் மனைவி என்பதை நான் சொல்லி இருக்க வேண்டும்.

முடிவாக வட்டார மொழி வழக்கு ஆவணப்படுத்தப்பட வேண்டும். அழிந்துவரும் வட்டாரப் பழக்க வழக்கங்கள், மொழி, உணவு, வீடுகள், உடைகள், பழம் பெருமைகள், பெண்களின் நிலைகள் ஆகியன ஆவணப்படுத்தப்படவேண்டும் என்று சொல்ல நினைத்தேன். விட்டுப் போய்விட்டது. இங்கே சொல்லி விட்டேன். :)





Related Posts Plugin for WordPress, Blogger...