பலவான் என்றால் வலிமை உடையவன். வலிமை என்றால் சாதாரண வலிமை அல்ல. நேர்மையும் வீரமும் கொண்ட ஒருவன் பத்துத்தலை உள்ள ஒருவனைக் கைக்குள் பிடித்து அடக்க முடியுமா. அடக்கி இருக்கிறானே. அந்தப் பத்துத்தலை கொண்டவனும் வீரதீரப் பராக்கிரமம் மிக்கவன்தான். அதெப்படி முடியும் என்று நினைக்கிறீர்கள்தானே. அந்த பலவான்களைப் பற்றிப் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
கிஷ்கிந்தை என்றொரு நாடு இருந்தது. அதை நிரஜன் என்னும் வானர அரசன் ஆண்டுவந்தான். அவனது மகள் விரஜா மிக மிக அழகி. அவளை நிரஜன் ருஷீடன் என்ற வானர அரசனுக்கு மணம் செய்து கொடுத்தான். இவர்களுக்கு வாலி, சுக்ரீவன் என்ற இரு வானர இளவரசர்கள் பிறந்தார்கள்.
வாலி மிகுந்த வலிமை வாய்ந்தவன். இவன் சுவேஷன் என்ற வானர அரசனின் மகளான தாரையை மணந்தான். கேசரி என்ற வானரனுக்கும் அவனது மனைவி அஞ்சனைக்கும் பிறந்த அனுமன் பிறந்தார். கிஷ்கிந்தையை வாலி ஆட்சி செய்துவர அனுமன் அவருக்கு மந்திரியாக ஆலோசனை வழங்கி வந்தார்.
இது இப்படி இருக்க இந்த தசமுகன் என்பான் யார் என்று பார்ப்போம். இவன் பத்துத்தலை கொண்டவன். இலங்காதிபதி. சிறந்த சிவபக்தன். வீணை இசைப்பதில் வல்லவன். இவன் பாடிய சாமகானத்தைக் கேட்டு சிவன் மகிழ்ந்து பல வரங்கள் கொடுத்திருக்கிறார்.
இவன் திக்பாலகர்களை வெற்றி கொண்டவன். தோல்வி என்பதே அறியாதவன். மூன்று லோகமும் இவன் காலடியில். நவக்ரகங்களும் இவனது சிம்மாசனப்படியில் . இப்படியான கீர்த்திகளைக் பெற்ற இவன் வாலியின் வலிமையைக் கேள்விப்பட்டு அவனை அடக்க வேண்டும் என எண்ணினான்.