அறநெறி தவறியதால் அழிந்த கார்த்தவீர்யார்ஜுனன்
பத்துத் தலை கொண்ட இராவணனைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆயிரம் கரங்கள் கொண்ட பராக்கிரமசாலியைப் பார்த்திருக்கின்றீர்களா ? அதுவும் பத்துத் தலை கொண்ட அந்த அசுரனைத் தோற்கடித்துக் கைதியாக்கி அடைத்தவன் ஆயிரங் கரங்கள் பெற்ற மனிதன் என்று சொன்னால் ஆச்சர்யமாயிருக்கும். அப்படி ஆயிரம் கரங்கள் பெற்ற கார்த்த வீர்யாஜுனனும் தன் அறநெறி கடந்ததனால் முடிவில் பரசுராமரால் அழிக்கப்பட்டான். இவர்களின் கதையைப் பற்றிப் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
தன் பொங்கிச் சுழலும் அலைக்கரங்களால் கரையோரப் பூக்களைத் தாலாட்டியபடி தாய்போல் பெருக்கெடுத்து ஓடுகிறது நர்மதை நதி. அதன் மடிமேல் மாட மாளிகையும் கூடகோபுரமுமாகப் பொலிந்து திகழ்கின்றது மகிஷ்மதி நகரம். இதை இந்திரலோகம் போல் சமைத்து அரசாண்டு வந்தான் ஹைஹேய வம்சத்தின் அரசன் கிருதவீரியன்.
