இனம் மதம் சாதி பார்த்து ஒருவரை உயர்ந்தவர் என்றும் இன்னொருவரைத் தாழ்ந்தவர் என்றும் கற்பித்துக் கொள்கின்றோம். ஆனால் அதுதவறு என நிரூபிக்கிறது உறங்காவில்லி என்பவரின் கதை. இயல்பிலேயே நல்ல உள்ளம் கொண்ட அவரையும் அவரைப் போலவே நல்லுள்ளம் படைத்த அவரது மனைவி பொன்னாச்சி பற்றியும் அறிந்து கொள்வோம் வாருங்கள் குழந்தைகளே.
சாலையில் வெய்யில் தகிக்கிறது. மக்கள் எல்லாம் வீடுகளில் ஒண்டிக்கொண்டு இருக்கிறார்கள். சிலர் திண்ணையில் அமர்ந்து விசிறியால் வீசி ஆசுவாசம் செய்து கொண்டிருக்கிறார்கள். அப்போது ஒரு காட்சியைப் பார்த்து அனைவரும் பரிகாசப் புன்னகை செய்கிறார்கள். சிலர் நமட்டுத்தனமாய்க் கிண்டலடிக்கிறார்கள்.
அச்சாலையில் அப்போது ஒரு மனிதன் தன் மனைவிமேல் வெய்யில் படாமல் குடைபிடித்தபடி செல்கிறான். அவன்தான் உறங்காவில்லி. அவனது மனைவி பெயர் பொன்னாச்சி. பொதுமக்கள் பார்க்கிறார்களே. தன்னை ஏளனம் செய்வார்களே என்ற எண்ணம் கிஞ்சித்தும் இன்றி அவன் தன் மனைவிக்குக் குடைபிடித்தபடி செல்கிறான்.
