எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 13 டிசம்பர், 2016

நடந்துசென்ற நடாவும் விளாசித் தள்ளிய வர்தாவும்.

வீட்டின் ஜன்னல் கதவு எல்லாம் கடகடன்னு ஆடுது வீட்டுக்குள்ளேயே இரைச்சலாய் டெடரா இருக்கு என்று என் பக்கத்துவீட்டுக்காரரின் மகள் தொலைபேசியில் சொன்னார். அதற்குச் சிறிது நேரம் கழித்து வீட்டில் முன்பக்க பால்கனி ஜாலி வழியாக மழைத்தண்ணீர் விசிறி அடித்து வீட்டின் ஹால் மற்றும் கிச்சன்  & பெட்ரூம் பால்கனி வழியாக வீடெல்லாம் தண்ணீர் என்று என் மகன் ஃபோன் செய்தார்.

அலைபேசி கோபுரங்கள் பாதிக்கப்பட்டதால்  வாட்ஸப்பிலும் தகவல்கள் இல்லை. பவர் பாங்க் இருந்தாலும் இன்னும் எத்தனை நாள் கழித்து கரண்ட் வருமோ அதுவரை அத்யாவசியத் தகவல் பரிமாற்றத்துக்காக சேமித்து வைக்கும்படியும் அவ்வப்போது ஆன் செய்து தகவல் தெரிவிக்கும்படியும் சொல்லி இருக்கிறோம்.

இரவில் ஒரே கொசுக்கடியும் குளிரும் தாக்கியதாகவும் சரியாக உறங்கவில்லை என்றும் சொன்னார்கள். ஃப்ளாட் வீடுகளில் இருப்பவர்களை விட தனி வீடுகளில் வசிக்கும் இன்னும் சில உறவினர்களிடமிருந்து தகவல் இல்லை. ஃபோன் செய்தால் கட் ஆகிறது. வீட்டைச் சுற்றி ஒரே தண்ணீர் என்று சொன்னார்கள். சென்ற வருடம் வெள்ளம் மூழ்கடித்தது போல் இந்த வருடம் புயல் விளாசித் தள்ளி வருகிறது.

மணிக்கு 180 கிமீ வேகத்தில் காற்று அடிக்கும் என்று அறிவித்திருந்தார்கள். கிட்டத்தட்ட 172 கிமீ வேகம் வரை அடித்திருக்கிறது. இதில் மழையிலும் புயலிலும் நனைந்தபடி ஒவ்வொரு சானலிலும் தொகுப்பாளர்கள் செய்தி சேகரித்து அனுப்பி  அப்டேட் செய்துகொண்டே இருந்தார்கள். 

நடா தாக்கும் என்று பயந்திருந்தபோது அது குறைந்த காற்றழுத்தம் கொண்டதாக மாறிக் கடந்துசென்றுவிட்டது. ஆனால் வர்தா நேற்று சென்னையையும் இன்று கர்நாடகத்தையும் நாளை கோவாவையும் தாக்கும் என்று செய்திகள் வருகின்றன.

திடீர் திடீர் என திகில்கள் நிறைந்ததாக மாறி வருகிறது டிசம்பர் மாதம். அம்மாவின் மறைவு , அதனால் சென்றவாரம் பணத்தட்டுப்பாடாக இருந்தபோதிலும் அத்யாவசியப் பொருட்கள் கிடைக்காது என்று கிளம்பிய செய்தி மூலம் கடைகள் காலியாகி எல்லாப் பொருட்களும் விற்றுத் தீர்த்திருந்தன. நேற்று கடைகளும் இல்லை.

தூக்கம் இல்லாத இரவு என்றால் அது நேற்று என்றுதான் சொல்லவேண்டும். சென்றவாரம் அம்மாவின் மறைவினால் முழுநாளும் தொலைக்காட்சி முன் உக்கார்ந்திருந்ததுபோல் நேற்று முழுவதும் தொலைக்காட்சியே தெய்வமானது.

அனைவரும் வீட்டுக்குள்ளே இருங்கள் என்று சொன்னார்கள். வீடில்லாமல் ப்ளாட்ஃபார்மில் தங்கும் நூற்றுக்கணக்கான மக்கள் எங்கே தங்கினார்கள் ? ஏதேனும் பள்ளிகள் திறந்திவிடப்பட்டனவா எனத் தெரியவில்லை.

மரங்கள் பேயாட்டம் ஆடியதும் மிகப் பெரும் கட்டிடங்களில் இருந்து கண்ணாடிக் கதவுகளும் ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்டுகள் பறந்ததும் மிரட்சியை உண்டு செய்தது. யார் மேலும் விழுந்துவிடக் கூடாதே என்று பிரார்த்திக்கொண்டே இருந்தேன்.  கூரைகளும் சிண்டெக்ஸ் வாட்டர் டாங்குகளும் பறந்ததாகக் கூறினார்கள்.

மின் கம்பங்களும் மரங்களும் சாய்ந்துகிடந்ததும் சுவர்கள் இடிந்துவிழுந்ததும் கார்கள் உருண்டதும் பொருட்கள் தூக்கி வீசப்பட்டதும் இயற்கைக்கு முன் நாமெல்லாம் தூசு என உணரவைத்தன.

ஐப்பசி அடை மழை கார்த்திகை கல்மழை என்பார்கள்.மார்கழி என்றால் மிகப்பெரும் கோலங்களும் டிசம்பர் பூக்களும், கோலாகலமான இசை நிகழ்ச்சிகளும் , விடிகாலை மண்டகப்படிகளும், திருப்பள்ளி எழுச்சிகளும் திருப்பாவையும் திருவெம்பாவையும் எம் எஸ் சுப்ரபாதமும், சீர்காழி, எல் ஆர் ஈஸ்வரியின் தெய்வீகப் பாடல்களும் திருவிளையாடல் வசனமும் ஞாபகம் வரும். கோயில்களில் சுவாமி தரிசனத்தோடு முன்பனி கிடுகிடுக்க வைக்க சுடசுட பொங்கலும் கிடைக்கும். இப்போவெல்லாம் அடுத்த நாள் என்ன நடக்குமோ என்று திகில்தான் கிடைக்கிறது.

ஆயிரம் கோடி ரூபாய்க்குமேல் சொத்துக்கள் நாசம் என்று எங்கோ படித்தேன். ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன என்று பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது.

ரூபாய் நோட்டு மாற்றத்தின்போதும் சரி, ஜெயாம்மாவின் மறைவின்போதும் சரி, விளாசித் தள்ளிய வர்தாவின்போதும் தமிழக/சென்னை மக்கள் பொறுமை காத்து அமைதியாக இருந்து எதிர்கொண்டிருக்கிறார்கள்.

கரையைக் கடந்தாலும் இன்னும் ஓரிரு நாட்கள் பாதிப்பு இருக்கும் என எச்சரித்திருப்பதால் மழை இருக்கும் என்கிறார்கள். முக்கியமாக கரண்ட் சம்பந்தமாக தொலைக்காட்சியில் காட்டப்படும் செய்திகளைப் பின்பற்றினால் நல்லது. எலக்ட்ரீஷியனைக் கூப்பிட்டு செக் செய்த பிறகே சுவரையும் ஸ்விச்சுகளையும் தொடுவது நல்லது.

முன்பே எச்சரிக்கை செய்திருந்த வானிலை ஆராய்ச்சி மையத்தின் பணி சிறப்பானது.  இந்த சமயத்தில்  துப்புரவுப் பணியாளர்கள், தீயணைப்புத்துறை, காவல்துறை, மாநகராட்சி ஊழியர்கள், ராணுவத்தினரின் பணிகளும் பாராட்டத்தக்கன.

ரயில்கள் விமானங்கள் ரத்தாகி உள்ளன. முதல்வர் நேரில் சென்றிருப்பது ஆறுதல். இலைகள்  குவிந்திருப்பதால் நீர் வெளியேறும் கால்வாய்கள் அடைத்திருப்பதாகச் சொல்கிறார்கள். மரங்கள் இலைகள் சுத்தம் செய்யப்பட்டு துப்புரவுப் பணிகள் முடிந்து சென்னை முழுவீச்சில் திரும்ப ஒரு வாரம் ஆகும் எனத் தோன்றுகிறது. இத்தனை மரங்களும் இனி உயிர்பெற எத்தனை காலம் ஆகுமோ.. ஹ்ம்ம்.

முகநூல் சென்னை நட்புகள், உறவுகள் வீட்டில் பத்திரமாக இருப்பதாகக் குறித்திருக்கிறார்கள். அதுதான் தற்போதைக்கு ஆறுதல் அளிக்கும் விஷயம்.

8 கருத்துகள்:

  1. துப்புரவுப் பணியாளர்கள், தீயணைப்புத்துறை, காவல்துறை, மாநகராட்சி ஊழியர்கள், ராணுவத்தினரின் பணிகள் பாராட்டிற்குரியவை

    பதிலளிநீக்கு
  2. நடந்து சென்ற நடாவும் வாரிச் சருட்டிய வரதாவும்.சரியான பதிவு .வீடற்றவர்களின் நிலை குறித்த கவலை கண்ணீரை வரவழைத்தது.நன்றி தேனம்மை

    பதிலளிநீக்கு
  3. புயலைப்பற்றி புயல் வேகத்தில் ஓர் பதிவு கொடுத்து அசத்தியுள்ளீர்கள். பாராட்டுகள்.

    //முன்பே எச்சரிக்கை செய்திருந்த வானிலை ஆராய்ச்சி மையத்தின் பணி சிறப்பானது. இந்த சமயத்தில் துப்புரவுப் பணியாளர்கள், தீயணைப்புத்துறை, காவல்துறை, மாநகராட்சி ஊழியர்கள், ராணுவத்தினரின் பணிகளும் பாராட்டத்தக்கன.//

    ஆம். இவர்கள் அனைவரும் பாராட்டுக்குரியவர்களே !

    //ரூபாய் நோட்டு மாற்றத்தின்போதும் சரி, ஜெயாம்மாவின் மறைவின்போதும் சரி, விளாசித் தள்ளிய வர்தாவின்போதும் தமிழக/சென்னை மக்கள் பொறுமை காத்து அமைதியாக இருந்து எதிர்கொண்டிருக்கிறார்கள்.//

    அடுத்தடுத்த புயல்களுக்குப் பின்னாவது அமைதி ஏற்பட்டால் சரி.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  4. இயற்கைக்கு முன் நாம் எம்மாத்திரம்.... என்று மீண்டும் உறுதி செய்திருக்கிறது வர்தா....

    எச்சரிக்கை செய்து உயிரிழப்பு அதிகமில்லாமல் பார்த்துக் கொண்ட அரசாங்க அமைப்புகளுக்கு வாழ்த்துகள்.

    சென்னையில் இயல்பு நிலை திரும்ப எனது பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  5. இயற்கையை எப்படியும் எதிர்கொண்டுதான் ஆகவேண்டும். கடந்த வருட வெள்ளம் பாடமாக இருந்த நிலையில் இதை எதிர்கொண்ட விதம் அருமை.

    பதிலளிநீக்கு
  6. புயல் பற்றிய செய்திகள் தொலைக்காட்சியில் காண்பிக்கும் போதே திகிலாக இருந்தது

    பதிலளிநீக்கு
  7. ஆம் ஜெயக்குமார் சகோ. கருத்துக்கு நன்றி

    ஆம் பாலா.

    நன்றி விஜிகே சார்

    நன்றி வெங்கட் சகோ

    நன்றி ஜம்பு சார் ஆம்

    நன்றி பாலா சார். ஆம்.

    பதிலளிநீக்கு
  8. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...