இராமாயணத்திலும் மகாபாரதத்திலும் பாசத்தால் விஞ்சிய சகோதரர்கள் பலரைப் பார்த்திருக்கிறோம். ஆனால் அதிகம் பேசப்படாமல் இராமாயணத்தில் ஓரிரு இடங்களில் ஆங்காங்கே வந்தாலும் சத்ருக்னன் இராமன் மேல் மட்டுமல்ல தன் சகோதரர்கள் மூவர் மேலும் கொண்ட பாசம் நம் கண்களைக் கலங்க வைத்துவிடும்.
அயோத்தியை ஆண்ட தசரத மன்னருக்குப் புத்திர பாக்கியமில்லை என்பதால் புத்திர காமேஷ்டியாகம் நடத்துகிறார். ஹோமப் ப்ரசாதமாக பாயாசம் தரப்படுகிறது. அதை தசரதரின் மனைவியரான கௌசல்யை, கைகேயி, சுமித்திரை ஆகியோர் அருந்துகிறார்கள். கடைசியாக அருந்தும்போது பாயாசப் பாத்திரத்தில் சுமித்திரைக்கு மட்டும் கடைசியாக இருமடங்கு பிரசாதம் கிடைக்கிறது. அதனால் கௌசல்யைக்கு ராமரும், கைகேயிக்கு பரதனும் பிறக்க சுமித்திரைக்கு லெக்ஷ்மணன், சத்ருக்னன் என்ற இரு மகன்களும் பிறக்கிறார்கள்.
இவர்கள் அனைவரும் வசிஷ்டரின் வழிகாட்டுதலின் படி கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குகிறார்கள். இப்படி இருக்கையில் ஒரு நாள் விசுவாமித்திர முனிவர் தனது தவத்துக்கு இடையூறு செய்யும் அரக்கர்களை அழிக்க ராமனையும் லெக்ஷ்மணனையும் அனுப்பும்படி தசரதரிடம் கேட்கிறார். குழந்தைகளைப் பிரிய தசரதர் தயங்கினாலும் அனுப்பி வைக்கிறார்.

