முன்னுரை:-
இருபத்தியோராம் நூற்றாண்டிலும் வர்க்க, இன பேதமின்றி மத்தியர தர குடும்பப் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைச் செட்டிநாட்டின் மொழி வழக்கிலும், செட்டிநாட்டுப் பெண்கள் எதிர்கொள்ளும் ப்ரத்யேகப் பிரச்சனைகளைப் பற்றியுமாய் ஆக்கப்பட்டுள்ளது இந்நூல். இது எனது இருபத்தி ஐந்தாவது நூல்.
செட்டிநாட்டுக் கோட்டை வீடுகள், உணவுவகைகள், உறவு முறைகள், சுவீகாரம், திருமண நடைமுறைகள், கணவனை இழந்த முதிய பெண்களின் தனிமை, உடல்நலிவு, எச்சூழலிலும் தன்னை இழந்துவிடாத மாண்பு, செட்டிநாட்டுச் சொல்வழக்கின் சிறப்பு, கணவன் மனைவி பந்தம், குழந்தைகளுக்கும் பெற்றோருக்குமான பிணைப்பு, தங்களிடம் பணிபுரிபவரையும் தங்களைப் போல எண்ணும், நடத்தும் குணம், அத்தோடு அந்தக்கால ஆண்களின் செயல்பாடுகள், திருமணம் தாண்டிய உறவுகள், சமயத்தில் பெண்களே பெண்களுக்குப் பிரச்சனை ஆகுதல், எப்போதும் தங்களிடம் பணிபுரிவோரிடம் கொள்ளும் நம்பகத்தன்மையும், அதிலும் ஓரிரு சிலர் திடீரெனக் கொள்ளும் நம்பிக்கையின்மையும் எனக் கடந்த இரு நூற்றாண்டு காலச் செட்டிநாட்டின் வாழ்வியலை ஆவணப்படுத்தும் நோக்கில் இந்தச் சிறுகதைகளைப் படைத்துள்ளேன்.
