காதல் யானை ரெமோ
”காதல் யானை வருகிறான் ரெமோ” என்று பாடிக்கொண்டிருந்தது தொலைக்காட்சி. பார்த்தபடியே தூங்கி இருந்தான் சாம்.
எழுந்து ரிமோட்டை எடுத்து டிவியை ஆஃப் செய்துவிட்டுப் படுத்தான்.
நினைவுகள் குழம்பிக் குழம்பி
முத்தழகியைச் சுற்றி ஓடின. மயக்கத்தில் இருக்கும் மனச்சிற்பம். எப்போது எழுவாள். என்ன
என்ன எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்கும் அவள் மனதில். கூடுவிட்டுக் கூடு பாய முடியுமோ.
முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.
வேனில் காலம் ஆரம்பித்திருந்தது. தோட்டத்தில் முன் தினம் பறிக்காமல் விட்ட ஜாதி, முல்லை, மல்லிகைகளின் வாசம் கிளர்ந்தெழுந்து கொண்டிருந்தது. பூவைப்போன்ற முத்தழகியின் முகமும் அவளின் பிரியமும் மனமெங்கும் நிறைந்திருந்தது. முன்பொருநாள் முத்தழகி எழுதிய டைரிக்குறிப்பொன்று மனமெங்கும் இனிப்பாய் இறங்கிக் கிறங்கிக் கிடந்தது.