எப்போதும் தர்மத்தில் நிலைத்திருக்க வேண்டும் என்று கடுந்தவம் இருந்து வரம் பெற்றான் ஒருவன். அவன் இயக்கர் வம்சமாயினும் பஞ்சமாபாதகங்களைக் கண்டாலே அஞ்சுபவன். அவன் எப்படி அதர்மம் புகுந்த இடத்தில் இருப்பான். அதனால்தான் அவன் தர்மத்திடம் சரணடைந்தான். அவன் யார் ? அவன் பெற்ற வரம் என்ன ? அவன் தர்மத்திடம் சரணடந்த காரணம் என்ன எனப் பாப்போம் குழந்தைகளே.
விஸ்ரவஸ் என்ற முனிவருக்கு புஷ்போத்கை, மாலினி, ராகை ஆகிய மூன்று மனைவியர் மூலம் ராவணன், கும்பகர்ணன், விபீஷணன், சூர்ப்பனகை, கரன் ஆகியோர் பிறந்தார்கள். இவர்களுள் மாலினிக்குப் பிறந்த விபீஷணன் அழகும் அறிவும் நிரம்பப் பெற்றவன். அத்தோடு அறச் செயல்களில் விருப்பம் கொண்டவன். சிறந்த பக்திமான்.
இவர்களில் இராவணன், கும்பகர்ணன், விபீஷணன் ஆகியோர் வேதங்கள் கற்றுக் கல்விமானாகத் திகழ்ந்தாலும் இன்னும் பலம்பெற வேண்டி பிரம்மனைக் குறித்துக் கடுந்தவம் புரிந்தனர். முடிவில் பிரம்மன் தோன்றி அவர்கள் தவத்தை மெச்சி வரங்கள் வழங்கினார். இராவணன் யாராலும் தனக்கு இறப்பு ஏற்படக்கூடாது என வரம் கேட்டவன் மனிதனாலும் இறப்பு நேரக்கூடாது என்பதைக் கேட்க மறந்தான். கும்பகர்ணனோ நித்திய ஆயுசு வேண்டும் எனக் கேட்கவந்தவன் நித்திரை வேண்டும் என வாய்தவறிக் கேட்டு தூக்கத்தை வரமாகப் பெற்றான்.
உண்ணா நோன்பு நோற்றிருந்த விபீஷணனோ இன்னும் ஞானமும் மேன்மையும் அடைந்தான். அவன் “ எந்தச் சமயத்திலும் எத்தகைய சூழலிலும் நான் தர்மத்தில் இருந்து வழுவாமல் வாழவேண்டும். மேலும் எனக்கு ஞான ஒளி பெருகவேண்டும் ” என்பதை பிரம்மாவிடம் வரமாகக் கேட்டதால் அவர் மகிழ்ந்து ’அவன் சிரஞ்சீவியாகவும் வாழ்வான்’ என்ற வரத்தையும் சேர்த்து அருளினார்
