எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 18 ஜனவரி, 2024

13.கருமுட்டைகளும் கருத்தரிப்பும்

13.கருமுட்டைகளும் கருத்தரிப்பும்


இனப்பெருக்க வயதில் ஆரம்பித்து மெனோபாஸ் காலம் வரைக்கும் பெண்ணின் கருப்பையில் முட்டைகள் மாதாமாதம் உருவாகின்றன. இவை ஓவா எனப்படுகின்றன. கடைசி மாதவிடாய் நாளிலிருந்து பதினான்காவது நாள் வரை இம்முட்டை வளர்கிறது. சொல்லப் போனால் பத்தாம் நாளில் இருந்து இருபதாம் நாள் வரை கூட வளர்வதாகக் கணிக்கிறார்கள். இனப்பெருக்கக் காலத்தில் உருவாகும் இவ்வாறான கருவுறத் தகுதியான முட்டை ஓவோசைட் எனப்படுகிறது. அச்சமயம் அது விந்தணு மூலம் கருவுறாவிட்டால் முதிர்ந்து மாதவிடாயுடன் வெளியேறுகிறது.

ஒவ்வொரு மாதமும் கருவகத்தில் முட்டை கருவுறத் தயாரான நிலையில் உள்ளதை சில அறிகுறிகள் மூலம் உணரலாம். வெள்ளைப்படுதல், ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அதிகமாகச் சுரப்பதால் பாலியல் இச்சை அதிகரித்தல், மார்பகங்கள் கனப்பது அதே சமயம் கருப்பை வாய் மென்மையாவது போன்றவை ஏற்படும். வெள்ளைப்படுதல் மூலம் வெளியேறும் ம்யூக்கஸ் என்னும் திரவம் விந்தணு முட்டையை அடைவதை எளிதாக்குகிறது.

பெண்ணின் சிறுநீரைக் கொண்டு அவள் கர்ப்பம் அடைந்ததைக் கண்டுபிடிக்க உதவும் ஹோம் கிட் எனப்படும் கருவிகள் இருப்பதைப் போல ஒரு பெண்ணின் கருமுட்டை கருவடையத் தயாராய் இருப்பதை அறிந்து கொள்ளவும் கருவிகள் உள்ளன. ஓவலேஷன் கிட் எனப்படும் டெஸ்ட் சிறுநீரைப் பரிசோதித்து முட்டை தயார் நிலையில் உள்ளதைக் கண்டுபிடிக்கின்றது.

கருப்பையில் இருந்து முட்டையை வெளியேற்றத் தூண்டும் லூடினைசிங் ஹார்மோன் எனப்படும் சுரப்பியின் அளவு சிறுநீரில் அதிகமாக இருந்தால் இந்த டெஸ்ட் கிட் பாசிட்டிவ் எனக் காண்பிக்கும். அச்சமயம் கருவுற்றால் கரு உருவாவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆனால் இதுவும் பி சி ஓ எஸ் எனப்படும் பிரச்சனை உள்ள பெண்களுக்கு சரியாகக் கணிக்காமல் போகலாம்.

ஒழுங்கற்ற யோனி வெளியேற்றம், கர்ப்பம் தரிப்பதில் சிரமம், வலிமிகுந்த சிறுநீர்கழித்தல் (டைசூரியா) ஆகியன ஏற்பட்டாலும் சீக்கிரமே சிகிச்சை அளிக்கப்பட்டால் குணமாகும் வாய்ப்பு அதிகம். வித்யாசமாய் வடிவமைக்கப்பட்ட கருப்பையுடன் பிறந்திருந்தால் அது வலியை ஏற்படுத்தும். இந்த ஒழுங்கற்ற வடிவக் கருப்பையினால் கர்ப்பம் தரிக்கவும் இயலாது. கருப்பை, கருப்பை வாய், யோனி, ஃபலோப்பியன் குழாய்கள் மற்றும் பிற இனப்பெருக்க உறுப்புக்களைப் பார்க்க இடுப்புப் பரிசோதனை செய்யப்படுகின்றது. மாதவிடாய், கர்ப்பம், கருவுறுதல் ஆகியவற்றில் பிரச்சனைகள் ஏற்படும்போது மீயொலிப்  பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றது.

லூடினைசிங் நீர் மற்றும் கருமுட்டை தூண்டும் இயக்குநீரால் கருப்பையில் ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் சுழற்சியின் நடுவில் ஒரு கருமுட்டை உருவாகிறது. இதன்பின் குறி எனப்படும் ஒரு துளை கருப்பை நுண்ணறையில் உருவாகிறது. இது வெடித்து முதிர்ந்த கருமுட்டை வெளியேறி ஃபலோப்பியன் குழாய்கள் மூலம் கருப்பையை நோக்கிப் பயணிக்கும். அச்சமயம் 48 மணி நேரத்துக்குள் அது விந்தணுக்களால் கருத்தரிக்கப்பட்டால் அந்த இரண்டாம் நிலைக் கருவணு 6 – 12 நாட்களுக்குப் பிறகு கருப்பையகத்துள் உள்வைக்கப்படும். கருவகம் தடிமனாக மாறும்.


பெண்ணின் கருமுட்டையில் எக்ஸ் குரோமோசோம்கள் உள்ளன. ஆணின் விந்தணுவிலிருந்து  எக்ஸ் குரோமோசோமைப் பெற்ற கருமுட்டை, பெண்ணின் எக்ஸ் குரோமோசோமுடன் இணைந்து பெண் குழந்தையாகவும், ஒய் என்ற  குரோமோசோமைப் பெற்ற கருமுட்டை ஆண் குழந்தையாகவும் பிறக்கிறது. எனவே குழந்தை ஆணாகவோ பெண்ணாகவோ பிறப்பதற்கு ஆணின் விந்தணுவில் உள்ள குரோமோசோம் இணைவுகளே காரணம்.

இவ்வாறு பிறக்கும் பெண் குழந்தைகள் தங்கள் கருப்பையில் அவர்கள் பெறப்போகும் அனைத்து முட்டை செல்களுடன் பிறக்கின்றார்கள். பிறக்கும்போது ஒரு சாதாரணப் பெண்ணின் கருப்பையில் 1-2 மில்லியன் ஓவோசைட்டுகள் (முட்டைகள்) இருக்கும். பிறந்தபின் அவர்களின் வாழ்நாளில் புதிய முட்டை செல்கள் உருவாவதில்லை. இவ்வாறு கருவிலேயே முட்டை செல் பெறாத பெண் குழந்தைகள்தான் கருத்தரிக்கும் வாய்ப்புப் பெறுவதில்லை என்று 2020 ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வு கூறுகிறது.

பிறந்ததில் இருந்து பருவமடையும் வயது வரை இந்த முட்டைகளும் கோனாடல் என்னும் ஹார்மோன்களின் உற்பத்தி இல்லாததால் எண்ணிக்கையில் குறைந்து அவள் பருவமடையும் பொழுது 25 சதவிகித முட்டைகளே (3,00,000) இருக்கும். இதிலும் அட்ரேசியா என்னும் செயல்பாட்டினால் மற்ற முட்டைகள் இறந்துவிட 300 – 500 முட்டைகளே முதிர்ச்சியடைந்து கருவுறும் தகுதி பெறும். இவ்வாறு நூற்றுக்கணக்கான முட்டைகள் முதிர்ச்சி அடைந்தாலும் ஒவ்வொரு மாதவிடாய் காலத்திலும் ஒன்று மட்டுமே ஆதிக்கம் செலுத்தும்.

கருவுற்ற முட்டை கருப்பைக்குச் சென்று ப்ளாஸ்டோசிஸ்ட் எனப்படும் கொத்தாக மாறுகிறது. பின்னர் கருப்பைப் புறணியுடன் இணைகிறது. இப்போதுதான் அது கர்ப்பம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் தகுதி பெறுகிறது. இக்கருத்தரிப்பிலும் இயற்கைக் கருத்தரிப்பு, செயற்கை கருத்தரிப்பு ( சோதனைக் குழாய்), செயற்கை விந்தூட்டல் ஆகியன செயல்பாட்டில் உள்ளன. பெரும்பாலான செயற்கை விந்தூட்டல் மூலம் இரட்டைக் குழந்தைகள் பிறப்பும் ஏற்படுகின்றது.

கருவுற்றதில் இருந்து 37 ஆவது வாரத்தில் குழந்தை பிறந்தால் அது குறைப்பிரசவம் என்றும், 42 ஆவது வாரத்தில் பிறந்தால் அது முதிர் பிறப்பு என்றும் கூறப்படுகிறது. 40 வாரத்தில் பிறப்பதே சரியான தவணையில் ஏற்படும் பிரசவம் என்று அழைக்கப்படுகின்றது.

முட்டை கருவுறாவிட்டால் மாதவிடாய் இரத்தத்துடன் வெளியேறி அடுத்த முட்டை தன் முதிர்வு சுழற்சியைத் தொடங்கும். ஒரு பெண்ணின் 30 – 40 வயதுக்குள் முழு முட்டை சப்ளையும் குறைந்துவிடும். அதன்பின் கருத்தரிக்கும் வாய்ப்பும் கம்மி. இவ்வாறு அனைத்து முட்டைகளும் குறையும் காலம் வரை மாதவிடாய் ஏற்படுகின்றது. இதுவே மெனோபாஸ் எனப்படுகின்றது. இது கிட்டத்தட்ட 50 ஆவது வயதில் நிகழ்கின்றது.

40 வயதுக்கு முன் முட்டைக் குளம் குறைவது முன்கூட்டிய கருப்பைச் செயலிழப்பு எனப்படுகின்றது. அதிக கருச்சிதைவு, கீமோதெரஃபி, காப்பர் டி போன்ற குடும்பக் கட்டுப்பாடு முறைகளைச் சரிவரப் பின்பற்றாமை ஆகியனவும் கருவுறுதலில் சிக்கலை ஏற்படுத்துகின்றன.

கர்ப்பம் தரிக்காமையை இயற்கை மருத்துவத்தின் மூலம் சரிசெய்தல்

மலை வேம்பு ஒரு கைப்பிடி, சிறிது சிறியா நங்கை இலை, சிறிது விரலி மஞ்சள் மூன்றையும் அரைத்து சுண்டைக்காய் அளவு சிறு உருண்டைகளாக்கி மாத விலக்கான முதல் மூன்று நாட்கள் வெறும் வயிற்றில் சாப்பிட சினைப்பை மற்றும் கர்ப்பப்பையில் இருக்கும் கசடுகள், நீர்க்கட்டிகள் எளிதில் கரைந்து வெளியேறும்

பி ஓ டி எனப்படும் கர்ப்பப்பை மற்றும் சினைப்பைக் கட்டிகள் கரைந்து வெளியேற கழற்சிக்காயினை வாங்கி உடைத்து உள்ளிருக்கும் பருப்பினை அரைத்து மாதவிலக்கின் முதல் மூன்று நாட்கள் சுண்டைக்காயளவு சாப்பிட குணம் தரும். கழற்சிக்காய் சூரணத்தை நாட்டு மருந்துக் கடைகளிலும் வாங்கிப் பயன்படுத்தலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...