குரோம்பேட்டை ஸ்ரீமதி ராம்குவார் தேவி ஃபோம்ரா விவேகானந்தா வித்யாலயாவில் ஆசிரியர் தினத்தில் கிட்டத்தட்ட 110 ஆசிரியைகளுக்கு TEACHERS ROLE IN TODAYS ATMOSPHERE – ”இன்றைய சூழலில் அசிரியைகளின் பங்கு” என்ற தலைப்பில் உரையாற்றும்படி பல்லாவரம் அரிமா சங்கம் சார்பாக அதன் செயலாளர் சதீஷ் அழைத்திருந்தார். இந்தப் பள்ளியில் சிபிஎஸ்சி திட்டத்தின் படி பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.
நம் ஒவ்வொருவர் வாழ்விலும் மறக்க முடியாத ஆசிரியை ஒருவர் கட்டாயம் இருப்பார்.
மிகப் பிடித்த ஆசிரியர் என்றோ நம்மைத் தண்டித்ததால்
பிடிக்காத ஆசிரியர் என்றோ ஒருவரை மனதில் சுமந்தபடியே
இருப்போம். பெண்குழந்தைகள் எல்லாருக்குமே ஆசிரியையாகும் ஆசை ஏற்பட்டு இருப்பதைப்
பார்த்திருப்பீர்கள். பள்ளியில் பயிற்றுவித்ததை வீட்டில் குட்டி டீச்சர் போர்டில் எழுதுவது போலவோ, அல்லது அவர்கள் தன் அம்மாவை மாணவி போல நடத்துவதையோ
பார்த்து முறுவலித்திருக்கலாம்.
பெண் குழந்தைகள் இப்படி என்றால் தன் ஏதோ ஒரு ஆசிரியையைக் காதலிக்காத குட்டி ஆண் வாண்டுக்களைப் பார்ப்பது அபூர்வம். தாய்க்குப் பின் பார்க்கும் முதல் பெண் என்பதால் ஆண் குழந்தைகள் அம்மாவை விட ஒரு கட்டத்தில் தன் ஆசிரியையிடம் மிகுந்த அன்பு கொண்டவர்களாகிறார்கள். இது அந்த ஆசிரியையின் அணுகுமுறையையும் பொறுத்தது. மிக அன்பான ஆசிரியையை நேசிக்கும் குழந்தைக்கு அவர் நடத்தும் பாடம் ரொம்பப் பிடித்து விடுவது போல, விமர்சனம் செய்யும், தண்டிக்கும் ஆசிரியையைப் பிடிப்பதில்லை. அவர் எடுக்கும் பாடப்பிரிவையும் வெறுக்க ஆரம்பித்துவிடுவார்கள்.
ஒவ்வொருவரின் வாழ்வின் எல்லா நல்ல ஆரம்பங்களும் அவர்களின் தாயிடம் இருந்து ஆரம்பித்து ஆசிரியர்கள் வழி தொடர்கின்றன. ஒவ்வொரு குழந்தையையும் தாய் கணிப்பது போல ஆசிரியையும் கணித்து இந்த இந்தவழியில் இவர் இவர் முன்னேற முடியும் என்பதை இனம் காண முடியும்.
தமிழ் நாடு அறிவியல் இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் திருமதி மோகனா அவர்களை ஒரு பத்ரிக்கை நிமித்தம் பேட்டி கண்டபோது அரசுப் பள்ளிகளில் செயல் வழிக் கற்றல் முறைப்படிப் பயிற்றுவிக்கப்படுவதாகக் கூறினார். மேலும் தான் இளம் விஞ்ஞானிகளை உருவாக்குவதில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்துக்காகச் செயல்படுவதாகவும் கூறினார். அவர் பழநி கலை அறிவியல் பண்பாட்டுக் கல்லூரியில் விரிவுரையாளராகவும், அதன் முதல்வராகவும் இருந்து ஓய்வு பெற்றவர். புற்று நோயால் பாதிக்கப்பட்டும் சிகிச்சை எடுத்துக்கொண்டே பல இளம் விஞ்ஞானிகள் உருவாக ஊக்குவித்தவர்., பயிற்றுவித்தவர். இவரைப் போல ஒவ்வொரு ஆசிரியையும் இருந்தால் எல்லாக் குழந்தைகளுக்கும் முன்னேற்றமே கிட்டும். இதுபோல ஒரு ஆசிரியை தன் பணியை எவ்வாறு சிறப்பாகச் செய்யலாம் என்பது குறித்து ராம்குவார் பள்ளியில் ஆற்றிய உரையின் சுருக்கத்தை இங்கே தருகிறேன்.
”மாதா பிதா குரு தெய்வம் என்று சொல்கிறோம். அம்மா, அப்பா, ஆசிரியர் அதன்பின்தான் தெய்வம்கூட . எழுத்தறிவித்தவன் இறைவன் என்பதால் அந்த ஆசிரியர்களைத் தெய்வமாகக் கருதவேண்டும். மாத்ரு தேவோ பவ, பித்ரு தேவோ பவ.. ஆச்சார்ய தேவோ பவ.. என்பார்கள். அந்த ஆசிரியர்களுக்கெல்லாம் என் சிரம்தாழ்ந்த வணக்கங்கள்.
TEACHER IS THE CREATOR OF THE DESTINY என்பது போல ஒரு மாணவரின் இலக்கை, முடிவு செய்பவர் அவரின் ஆசிரியரே. ஏடும் எழுத்தாணியும் கொண்டு திண்ணைப் பள்ளிக்கூடத்தில் அக்காலத்தில் கற்பிக்கப்பட்டது இன்று கணினி மூலம் பயிற்றுவிக்கப்படுகிறது. ஸ்டேட் போர்டு, மெட்ரிக்குலேஷன், சிபிஎஸ்சி, ஐசிஎஸ்சி என்ற முறைகளில் மாணவர்கள் எப்படிக் கற்றுக் கொள்கிறார்கள் அவர்களைப் பண்படுத்த ஒரு ஆசிரியர் செய்யவேண்டியது என்ன.?
பரபரப்பான நவீன உலகில் கற்பிக்கும்கலை பற்றி அதிகம் உச்சரிக்கப்படுகிறது. இதற்குப் PEDAGOGY என்றுபெயர். திறம்படக் கற்பிப்பது எப்படி என்றும் மேம்பட்ட ஆசிரியையாக இருப்பது குறித்தும் ஆசிரியைகளே கற்றுக் கொள்வதற்குப் பெயர்தான்
PEDAGOGY.
இது மேலும் கற்பிப்பதற்கான உத்திகளையும் வழிமுறைகளையும் பாணியையும்
வகைப்படுத்துகிறது. ஜெரோம் ப்ரூனர் என்ற ஒருங்கிணைந்த உளவியலாளர் இவற்றைப் பலவகையாப் பிரிச்சு இருக்கார். கருத்துமுறையில் கற்றல், ஆக்கமுறைக் கல்வி, கல்விச்சிக்கல்களைக் களையும் முறை,
உளவியல்முறைக் கற்றல் எனப்பிரித்திருக்கிறார்.
கருத்துமுறையில் கற்றல் என்பது பொருட்கள், நிகழ்ச்சிகள், கருத்துக்கள் கொண்டு விளக்குதல், செயல் வழிக் கற்றல் போல. ஆக்கமுறைக் கல்வி என்பது மாணவர்களைத் தாமே ஒன்றை உருவாக்க ஊக்கப்படுத்துதல், சிக்கல்களைக் களையும் முறையில் ஒரு பிரச்சனையை அல்லது நிகழ்வை மாணவர்கள் எப்படிச் சமாளிக்கிறார்கள் அதன் மூலம் எப்படிக் கற்கிறார்கள் என்பதை அறிவது. கல்வி உளவியல் என்பது அவர்களின் மனதையும் குணநலன்களையும் திறமைகளையும் செம்மைப்படுத்துதல்.
ஒரு ஆசிரியரின் கடமை மாணவர்களுக்குப் பாடம் கற்பிப்பது, மாணவர்கள் பரிட்சைகளை ஒழுங்காக எழுதி நல்ல மதிப்பெண்கள் எடுப்பதோடு முடிந்து விடுவதில்லை. கற்பிப்பது என்பது தொழிலல்ல. அது ஒரு வாழ்வியல் முறை. குருகுலம் என்பது போல. முதலில் நல்ல நேர்மறை வகுப்பறை மேலாண்மை இருக்கவேண்டும்.
விருப்பு வெறுப்பற்று எல்லாக் குழந்தைகளிடத்தும் நல்ல அணுகுமுறை, என்னென்ன நல்ல மாற்றங்களை வகுப்பில் கொண்டுவரலாம் என சிந்தித்தல், தன்னுடைய வகுப்பில் இப்படித்தான் இருக்கவேண்டும் என விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை முதலில் தெளிவாய் வரையறுத்தல், தானே அதன் முன்மாதியாய் நடந்து காட்டுதல், மாணவர்களுக்கும், அவர்கள் கருத்துக்களுக்கும் மதிப்பளித்தல், தவறு ஏதும் நிகழ்ந்துவிட்டால் மன்னிக்கும் மனப்பான்மை, சின்ன தவறுகளுக்கும் கடும் தண்டனை வழங்காதிருத்தல், வகுப்பை சுவாரசியமாக நடத்தி மாணவர்கள் ஆவலோடு எதிர்கொள்ளும்படி செய்தல், எப்போதும் மாணவர்களை ஏதோ ஒன்றில் ஈடுபட்டுக்கொண்டே இருக்கும்படி செய்தல்,மேலும் மேலும் அளவற்ற ஊக்கமூட்டுதல் இவையே அடிப்படைத் தேவை.
ஆசிரியைகள் சின்னச் சின்னக் கதைகளோடு வகுப்பை ஆரம்பிக்கலாம். பாடங்களை முதல் நாளே சிறிது நேரம் ஒதுக்கித் தயாரிக்கக் கற்க வேண்டும். அப்போதுதான் மாணவர்கள் சந்தேகம் கேட்கும்போதும் ஆசிரியையால் சரியாகச் சொல்ல இயலும். இந்தக் கால மாணவர்கள் தொழில்நுட்பத்தையும் நிறையக் கற்று வைத்திருப்பதால் ஆசிரியர்களும் அவர்களுக்கு ஈடு செய்ய கணினி போன்றவற்றில் ஓரளவேனும் கற்றிருக்கவேண்டும். உலக விஷயங்களை எல்லாம் சிறிது நேரம் ஒதுக்கித் தெரிந்து கொள்ள வேண்டும். தம்மைப் புதுப்பித்துக்கொண்டே இருக்க வேண்டும்.
கணினி இப்போது எல்லா இடங்களிலும் இருப்பதால் எல்லா ஆசிரியைகளுக்கும் மின்னஞ்சல் முகவரி என்பது தேவையான ஒன்று. மாணவர்களுக்காய் ஒரு மின்னஞ்சல் முகவரி உருவாக்கிப் பாடத்தில் அவர்களுக்குச் சந்தேகம் வரும்போது அதன் மூலம் அஞ்சல் அனுப்பித் தெளிவு படுத்திக் கொள்ள உதவும். SMART BOARD என்ற மின்பலகை ஒன்று தற்போது பயன்பாட்டில் வருகிறது. இது ஆசிரியர் தன்னுடைய மின்பலகையில் எழுதும்போது மாணவர்களுடைய பலகையில் அதைக் காட்டும். அதை சேமித்து வைத்துக் கொள்ளலாம்.
ஒவ்வொரு பள்ளியிலும் முன்பு நீதி நெறி வகுப்பு என்று ஒன்று இருந்தது.பின்னர் அது நன்னெறி புகட்டும் கல்வி என மாறியது. இப்போது இதெல்லாம் வாரம் ஒரு முறை ஒரு மணித்துளியாவது ஒதுக்கிக் கற்பிக்கப்பட வேண்டும். சரியாகப் படிக்காத பிள்ளைகளை ஆசிரியரால் எளிதாகக் கண்டுபிடிக்க இயலும். குடும்ப சூழலினாலோ, கற்றலில் பிரச்சனை இருந்தாலோ அவர்களுக்குத் தனியாக உளவியல் ஆலோசனை செய்யப்பட்டு அவர்களின் பிரச்சனை இனம்காணப்பட்டுக் களையப்பட வேண்டும்.இதன் மூலம் சமூகக் குற்றங்களும் குறையும்.இளம் குற்றவாளிகளும் உருவாகாமல் தடுக்கப்படுவார்கள்.
ஒவ்வொரு குழந்தையின் நுண்ணறிவுத்திறனும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். ஒப்பிடல், தாழ்த்துதல் தவிர்க்கப்பட வேண்டும். அதே குழந்தை மற்ற கலைகளிலோ, விளையாட்டுக்களிலோ சிறப்பாகச் செயல்படலாம். அதைக் கண்டுபிடித்து ஊக்கம் அளிக்க வேண்டும். முன்பு பள்ளிகளில் கைத்தொழில் வகுப்பு இருந்தது. பின்பு பாட்டு வகுப்பு, ஓவிய வகுப்பு, நடன வகுப்பு, தையல் வகுப்பு எனப் பல வகுப்புகள் இருந்தன. பிள்ளைகள் படிக்கும் இயந்திரமாக இல்லாமல் பலதும்கற்க முடிந்தது. இப்போது நாம் மதிப்பெண் வாங்கும் விளைபொருட்களை உற்பத்தி செய்கிறோம். ஆசிரியைகளை நூற்றுக்கு நூறு மதிப்பெண் உருவாக்கும் இயந்திரங்களை உருவாக்குபவர்களாகப் பள்ளி நிர்வாகங்கங்கள் எண்ணுகின்றனவோ என்று தோன்றுகிறது.
நிறைய மதிப்பெண்கள் பெற்றால் போதும். வெளிநாட்டில் வேலை கிடைத்து குடியேறினால் போதும் என நினைக்கும் பெற்றோர்களும் அதிகம். அது மட்டுமே ஒருவனின் வாழ்க்கையைப் பூர்த்தி செய்துவிடாது. புத்தகம் வாசிக்கும் பழக்கமே வழக்கொழிந்து வருகிறது. பள்ளியின் நூலகத்தை மாணவர்கள் முழுமையாகப் பயன்படுத்தவேண்டும். வாரம் ஒரு புத்தகம் கொடுக்கப்பட்டுப் படிக்கச் சொல்லப்பட வேண்டும். சிறந்த இலக்கியம் கூட ஒருவரின் இலக்கை, குணத்தை நிர்ணயிப்பதாக அமையும்.
யோகா போன்றவையும் நினைவாற்றல் பயிற்சிகளும்,
சின்ன சின்ன உடற்பயிற்சிகளும் கொடுக்கலாம். முத்தமிழ் மன்றம், நூலக வாரம், நுண்கலைப் போட்டிகள், விளையாட்டுப் போட்டிகள், வாரா வாரம் சிறப்பானவர்களின் தேர்ந்த சொற்பொழிவுகள் ஆகியன வழங்கப்பட வேண்டும்.
மாணவர்களின் குணநலன், பண்பு, சுய ஒழுக்கம், சுத்தம், சூழல்களை எதிர்கொள்ளும் பக்குவம், தலைமைப் பண்பு, நேர்த்தியாக வாழ்வது என்பதை ஆசிரியர்கள்தான் கற்பிக்க முடியும். ஒரு கட்டத்துக்குப் பின் குழந்தைகள் பெற்றோரின் கண்காணிப்பில் இருந்து ஆசிரியரின் கண்காணிப்பிற்குள் வருகிறார்கள். ஆசிரியர்களின் திறமை, உழைப்பு, அர்ப்பணிப்புத் தன்மை,தியாகம் இதற்குக் கிடைக்கும் மாபெரும் அங்கீகாரம் அளவிடற்கரியது. மிகப் பெரும் பதவியில் இருப்பவர்கள் எல்லாம் சொல்வார்கள் என் ஆசிரியரால்தான் நான் உயர்ந்தேன் என்று.
குடும்பத்தையும் கவனித்து ஆசிரியப் பணியையும் திறம்படப்புரிவது சிறிது சிரமமாகத் தோன்றலாம். ஆனால் லூர்து ராணி என்ற சிறப்பாசிரியர் விருது பெற்ற அரும்பாக்கம் நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை தன்னுடைய உடல் பலஹீனம் ( ரத்தத்தில் சிவப்பணுக்கள் எண்ணிக்கை கம்மி, இரத்த அழுத்தம், நீரிழிவு, வலிப்பு, பக்கவாதத் தாக்குதல்) எல்லாவற்றையும் தாங்கி ஆஸ்பத்திரியில் இருந்த நாள் தவிர மற்ற எல்லா நாட்களிலும் தன் பள்ளிக்கு வந்து சேவை ஆற்றி உள்ளார் என்பதை என் சாதனை அரசிகள் புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறேன்.
ஆகையால் குழந்தைகள் என்னும் விதைகளை பள்ளி என்னும் மைதானத்தில் பெற்றோர்கள் ஊன்றுகிறார்கள். அதைப் பராமரிக்கும் தோட்டக்காரர்களாய் ஆசிரியர்கள். தங்களுடைய அன்பையும் கண்டிப்பையும் தண்ணீரைப் போல அளவாகவும், அந்த சிறந்த தாவரங்களைச் சுற்றிக் களை சேராமலும், சூரிய ஒளி என்னும் அறிவுப் பிரகாசத்தை அளித்தும், பாதுகாத்தும், மணம் வீசும் பூக்களாக மாற்றுவது ஆசிரியர்கள் கையில்தான் இருக்கு. ஆசிரியர்கள் ஒரு தீபம் போல. அந்த ஒரு தீபத்திலிருந்து பல மாணவ தீபங்களை ஒளியேற்ற முடியும் என்பதால் அவர்கள் போற்றுதலுக்குரியவர்கள். ஆசிரியர் தினத்தன்று மட்டும் மக்களால் போற்றப்படாமல் என்றும் போற்றுதலுக்குரியவர்களாக ஆசிரியர்கள் மேம்படட்டும்.
டிஸ்கி:- இந்தக் கட்டுரை கார்த்திகை மாத ( OCT.NOV- 20120) மெல்லினத்தின் வெளியானது.
பள்ளியில் ஆற்றிய உரை சிறப்பு... வாழ்த்துக்கள் சகோதரி...
பதிலளிநீக்குகுருகுலம் மறந்து விட்ட ஒன்று...
அரும்பாக்கம் தலைமை ஆசிரியை அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
SUPERLYKE!!!
பதிலளிநீக்குஇப்படியான ஆசிரியர்கள் வேண்டும் ஆசையா இருக்கு...
பதிலளிநீக்குநன்றி தனபாலன்
பதிலளிநீக்குநன்றி அருணா
நன்றி எழில்.. ஆம்..:)
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!