சில குழந்தைகள் எதற்கெடுத்தாலும் கேள்வி கேட்டுக்கொண்டே இருப்பார்கள். பெற்றோர் முடிந்தவரை குழந்தைகளுக்கு விளக்கம் சொல்வார்கள். ஆனால் நசிகேதன் என்ற சிறுவன் எமனிடமே சென்று சில கேள்விகள் கேட்டான். அதற்கு எமனும் பதில் அளித்தார். அக்கேள்விகள் என்னென்ன என்று பார்ப்போம் குழந்தைகளே.
வாஜ்ரவஸ் என்றொரு முனிவர் இருந்தார். அவர் வாழ்வின் சகல சௌபாக்கியங்களும் பெற விஸ்வஜித் என்னும் யாகத்தை நடத்தி வந்தார். அவரது மகன்தான் நசிகேதன். மிகுந்த அறிவாற்றலும் அழகும் நிரம்பிய குழந்தை அவன்.
யாகம் நடத்தியவர்கள் யாகத்தின் முடிவில் எளியோர்களுக்குத் தானம் கொடுப்பார்கள். கோதானம் என்று பசு தானமும், பூமிதானம் என்று நிலமும் கொடுப்பார்கள். இது அவரவர் சக்திக்கு உட்பட்டது. ஆனால் வாஜ்ரவஸ் முனிவர் பால் சுரப்பு வற்றிய பசுக்களை கோதானம் கொடுத்தார். தரிசான நிலங்களை பூமிதானம் செய்தார்.
அதைப் பார்த்து நசிகேதன் வருந்தினான். சிறுவனாய் இருந்தாலும் அடுத்தவர்க்குச் சிறந்ததையே கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் அவன் மனதில் வேரோடி இருந்தது. அதனால் அவன் தன் தந்தையிடம் சென்று “ தந்தையே என்னை யாருக்குத் தானம் கொடுக்கப் போகின்றீர்கள் ? “ எனக் கேட்டான்.
