அறிந்தும் அறியாமலும் ப்ரகாஷ்ராஜ்
”உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் மரணப் படுக்கையிலும் மறக்காது கண்மணியே..” எனத் தபுவின் கூந்தல் பரந்து விரிந்திருக்க, தமிழகத் தலைவரின் கவிமொழியில் ப்ரகாஷ்ராஜ் தன் இணையின் காதோரம் உச்சரிக்க, மணிரத்னத்தின் இருவர் படத்தில் ஆண்சிங்கமும் பெண்சிங்கமும்போல் இருவரும் காட்சி கொடுப்பது க்ளாசிக்.
1994 இல் கே பி யின் டூயட் படத்தில் வில்லனாக அறிமுகமாகி ஹீரோ, வில்லன், குணச்சித்திரப் பாத்திரம் என அனைத்தையும் செல்லுலாய்டில் சிற்பமாய் வார்த்தவர் ப்ரகாஷ்ராஜ். டூயட்டில் அறிமுகமானதால் தனது தயாரிப்பு நிறுவனத்துக்கு டூயட் மூவீஸ் எனப் பெயரிட்டிருக்கிறார். நாங்கள் சென்னையில் இருந்தபோது டூயட் படத்தை இப்போது மூடப்பட்டுள்ள ஏவி எம் இராஜேஸ்வரி தியேட்டரில் முதல் நாள் முதல் காட்சி பார்த்தோம்.
தயா, அழகிய தீயே, நாம், கண்ட நாள் முதல், பொய், மொழி, வெள்ளித்திரை, அபியும் நானும் ஆகியன அவர் தயாரித்த படங்கள். 2010 இல் அவர் தயாரித்த இனிது இனிது படத்தின் போஸ்டரின் பின்னால் என்னுடைய சுவாரசியமான வலைப்பூ குறிப்பு ஒன்றும் உள்ளது. என்னுடைய வலைப்பூவில் ஹாலிவுட் சினிமா பெயர்கள் கண்டுபிடிக்கும் போட்டி ஒன்றுக்குப் பரிசு வழங்குவதாக அறிவித்து வென்றவர்களுக்கு எனது முகநூல் நண்பரான ப்ரகாஷ்ராஜின் இனிது இனிது போஸ்டர் இனிது என்று போஸ்டரைப் பரிசாக அளித்து வாசகர்களைக் கலாய்த்திருந்தேன்.
