வீட்டிற்குப் பெரியவர்கள் வரும்போது அவர்களைப் பார்த்துச் சிரித்தாலே வாங்க என்று வரவேற்றுவிட்டதாக நினைத்துக் கொள்கிறார்கள் இன்றைய சில இளையவர்கள். சிலரோ தங்கள் அறைக்குள் சென்று விடுகிறார்கள். சிலரோ கைபேசியில் விளையாடிக் கொண்டு யாரையும் சட்டை செய்வதில்லை. இப்படி கவனக் குறைவாக வீட்டிற்கு வந்த ஒரு முனிவரை வரவேற்காததால் சகுந்தலை என்ற பெண்ணுக்கு சாபம் கிடைத்தது. அது என்ன என்று பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
விசுவாமித்திர முனிவருக்கும் மேனகை என்ற அப்சரஸுக்கும் பிறந்தவள்தான் இந்த சகுந்தலை. தந்தையோ முனிவர் அதனால் அவர் சகுந்தலை பிறந்ததும் தன் தவம் எல்லாம் அழித்துவிட்டதாகக் கருதித் தவம் செய்யச் சென்றுவிட்டார். தாயோ தேவலோகத்தின் அப்சரஸ். நாட்டிய தாரகை. அதனால் அவளும் குழந்தையை ஒரு வனத்தில் விட்டுச் செல்கிறாள்.
அக்குழந்தையின் குரல் கேட்டுப் பறவைகள் சூழ்ந்து கானம் பாடுகின்றன. குழந்தைக்குரலும் பறவைக்குரலும் கேட்ட கண்வ மகரிஷி இவளை எடுத்து வளர்க்கிறார். பறவைகளால் பாதுகாக்கப்பட்ட குழந்தை என்ற அர்த்தத்தில் ”சகுந்தலை” என்று பெயரிட்டு வளர்க்கிறார்.



