இந்திரனின் துடுக்குத்தனம்.
தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தார்கள் . அதனால் கிட்டிய அமிர்தத்தைக் குடித்து தேவர்கள் பலம் பெற்றார்கள். ஆனால் ஏற்கனவே அழகாபுரியில் அனைத்து ஐஸ்வர்யங்களோடும் இருந்த தேவர்கள் அமிர்தம் அருந்த வேண்டிய அவசியம் என்ன.? எல்லாவற்றுக்கும் இந்திரனின் துடுக்குத்தனம்தான் காரணம். அதைப் பற்றிப் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
தேவலோகம் தங்கநிற வெளிச்சத்தால் ஜொலித்துக் கொண்டிருந்தது. தன் யானையின் மேல் இந்திரபுரியின் இராஜபாட்டைகளில் உலாவந்து கொண்டிருந்தான் இந்திரன். அமரர்களும் கின்னரர்களும் கிம்புருடர்களும் கந்தர்வர்களும் கானமிசைக்க தேவலோக கன்னியர் நடனமாடி பூத்தூவியபடி முன் வந்தனர்.
