சிறியவர்கள் துஷ்டத்தனம் செய்தால் பெரியவர்கள் கண்டிப்பார்கள். ஆனால் முனி சிரேஷ்டர் ஒருவரே ஒரு முறை அல்ல இருமுறை இப்படி துர்ப்புத்தியோடு செயல்பட்டு அல்லலுக்கு ஆளானார். அது என்ன என்று பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
முன்னொரு முறை பஞ்சபாண்டவர்கள் வனவாசத்தின் போது துரியோதனனின் துர் எண்ணப்படி வனத்துக்குத் தன் சிஷ்யர்களோடு உணவருந்த வந்தார் துர்வாசர். நீராடிவிட்டு உணவருந்த வருவதாகக் கூறிவிட்டு சிஷ்யர்களோடு சென்றுவிட்டார்.
சூரியன் பாண்டவர்களுக்கு அளித்த அட்சய பாத்திரம் ஒருநாளில் ஒருமுறையே உணவளிக்க வல்லது. துர்வாசர் வந்த அன்று அப்பாத்திரத்தில் உணவு பெற்று கழுவிக் கவிழ்த்துவைத்துவிட்டாள் திரௌபதி. அதனால் திடீரென வந்தவர்க்கு உணவளிக்க முடியாமல் தன் அண்ணனாம் கண்ணனை வேண்ட அவர் அப்பாத்திரத்தில் ஒட்டி இருந்த உணவுத் துணுக்கை உண்டு திருப்தியாக தன் வயிற்றைத் தடவ நீர் நிலையில் நீராடிய துர்வாசருக்கும் அவரது சிஷ்யருக்கும் வயிறு நிறைந்தது. அதனால் அவர் தர்மரிடம் மட்டும் சொல்லிக் கொண்டு தன் சிஷ்யர்களுடன் உணவை மறுத்து நடையைக் கட்டினார். அக்கதையை நாம் அறிவோம்.
இன்னொரு முறையும் அவ்வாறே அவர் அம்பரீஷன் என்ற மன்னனிடம் செயல்படுத்த திருமாலின் சுதர்சனம் துர்வாசரைத் துரத்தியது. அது பற்றி விரிவாகப் பார்ப்போம்.
