இன்னா செய்தாருக்கும் நன்னயம் செய்த அரசன்.
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல் என்று திருக்குறளில் படித்திருப்பீர்கள் குழந்தைகளே. ஒரு மன்னன் தனக்கு இன்னா செய்த எதிரி மன்னனையும் தன் சகோதரனையும் கூட மன்னித்து அவர்களுக்கு இனியன செய்ததைப் படிக்கப் போகிறோம் வாருங்கள்.
மதுரையை இராஜேந்திர பாண்டியன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவனது சகோதரன் பெயர் இராஜசிங்கபாண்டியன், இராஜேந்திர பாண்டியன் மிகுந்த இறைபக்தி கொண்டவன். நேர்மையானவன், வீரத்திருமகன். ஆனால் அவனது தம்பியான இராஜசிங்க பாண்டியனோ வஞ்சக எண்ணம் கொண்டவன். இராஜேந்திர பாண்டியனின் மேல் பொறாமை கொண்டவன்.
ஒரு முறை காடுவெட்டிச் சோழன் என்ற மன்னன் மதுரை சொக்கநாதரைத் தரிசிக்க விரும்பினான். எனவே இராஜேந்திர பாண்டியனுடன் நட்புக் கொண்டு மதுரை வந்து தரிசித்துச் சென்றான். பாண்டியனை நேரில் பார்த்ததும் அவனது நற்குணங்களால் கவரப்பட்டு அவனுக்குத் தன் மகளைத் திருமணம் செய்து கொடுத்து இரு நாடுகளுக்கும் இணக்கம் ஏற்படுத்திக் கொள்ள விரும்பினான்.

